Wednesday, August 11, 2010

புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்




சுப்பிரமணியம் குணேஸ்வரன்
அறிமுகம்
இலங்கையில் 1980 களிலிருந்து முனைப்புப் பெற்ற இனப்போராட்ட சூழலின் தாக்கத்தினால் வடக்கு கிழக்குப் பிரதேசம் உள்ளிட்ட பெருமளவான ஈழத்தமிழர்கள் மேற்குலக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற புதியதொரு வகைப்பாடு தமிழ் இலக்கியத்தில் கவனம் பெற்றது.

புலம்பெயர் இலக்கியச் செயற்பாடுகள் 80 களிலிருந்து முன்னெடுக்கப்படுவதற்கு அங்கிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அடிப்படையாக அமைந்திருந்தன. இன்றுவரையான கணக்கெடுப்பின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளமை ஆய்வுகளினூடாக(1) அறியப்படுகிறது. அவற்றுள் சிற்றிதழ்களின் அரசியலை உசாவுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
/செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைசெம்மொழி மாநாட்டு உரையை நேரடியாக செவிமடுக்க இங்கே அழுத்துங்கள்!
சிற்றிதழ்களும் வெளியீட்டாளர்களும்
புகலிடச் சிற்றிதழ்களின் வெளியீட்டுக்கு முற்றிலும் தனிநபர் சார்ந்த செல்வாக்கு மட்டுமல்லாது அரசியல், சூழலியல், பண்பாடு ஆகியனவும் காரணமாக அமைந்தன.
புகலிட மண்ணில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஓர் ஊடகம் தேவைப்பட்டது. அவர்கள் சிறுசிறு குழுக்களாகவும் அமைப்புக்களாகவும் இணைந்து இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் சிற்றிதழ்களைக் கொண்டு வந்து அவற்றினூடாகத் தாயகம் பற்றியும் புகலிடம் பற்றியும் தமது வாழ்வு பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எவ்வாறான தகுதிநிலையில் இருந்தார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. புகலிடச் சிற்றிதழ்களை நடத்தியவர்கள் எல்லாம் இதழியலை ஒரு கற்கை நெறியை முறையாகக் கற்றுக் கொண்டு வந்தவர்கள் அல்லர். எழுத்துலக அனுபவமும் பத்திரிகை அனுபவமும் பெற்ற சிறிய வகுப்பினரே இவர்களுள் இருந்துள்ளார்கள். இவர்கள் தாம் சார்ந்த அரசியல் தளத்தைத் சேர்ந்தவர்களை இனங்கண்டு குழுவாகவே இயங்கத் தொடங்கினர்.

1.ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள்.
2.இலங்கை அரச படைகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானவர்கள்
3.தமிழ்ப் போராளி இயக்கங்களின் முரண்பாடுகளில் சிக்கித் தப்பியவர்கள்.

இதனாலேதான் சிற்றிதழ்களை நடாத்தியவர்களில் அதிகமானவர்கள் அரசியலுடன் தொடர்புபட்டவர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கு உயிரைக் காத்துக் கொள்வதே அப்போது முதற் தேவையாக இருந்தது. உழைப்புக்காகப் புலம்பெயர்தல் என்பது அடுத்தகட்டமாகவே இருந்தது. இந்தநிலையில்தான் இலக்கியமும் அரசியலும் தொடர்புபடலாயிற்று.

சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வடிவமும்
1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘தூண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நூல் அறிமுகம், நிகழ்வுகளின் பதிவுகள், நாடகம், சினிமா, கேலிச்சித்திரம், ஓவியம், வாசகர் கருத்து ஆகிய இலக்கிய வடிவங்களையும் வகைப்பாடுகளையும் புகலிடச் சிற்றிதழ்கள் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.

சிற்றிதழ்கள் தமக்கெனத் தனித்துவமான வடிவத்தையும் கொண்டிருப்பது முறையான ஒர் ஒழுங்காகும். புகலிடத்திலிருந்து வெளிவந்தவற்றுள் முதலாவது அதனை வெளியிடுபவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. தனிச்சுற்றுக்கு விடப்படும் இதழ்களாக அவை ஆரம்பத்தில் அமைந்திருந்தன. நிறுவனம் சார்ந்த பங்களிப்புடன் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. (2) மற்றும் தனிநபர்களாலும் குழுக்களாலும் கொண்டு வரப்பட்டவையே அதிகம். இவை அச்சுவடிவம் பெறுவதற்கு படிப்படியாக எடுத்த முயற்சிகள் கவனத்திற் கொள்ளவேண்டிவையாகும்.

(1)கையெழுத்துப் பிரதியாக (Hand Writing) எழுதப்பட்டு பின்னர் அவை பல பிரதிகளாகப் (Photo Copy) படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தூண்டில், அ ஆ இ, புதுமை)
(2)தட்டச்சுச் செய்யப்பட்டு (Typing) பின்னர் பல பிரதிகளாகப் படியெடுக்கப்பட்டன. (உ+ம் :- தேனீ, சுவடுகள்)
(3) ஏற்கனவே அச்சில் (print) வெளிவந்தவை தெரிவு செய்து வெட்டியெடுக்கப்பட்டு ஒரே அளவில் பிரதிசெய்யப்பட்டன. (உ+ம் :- இரவல் தூண்டில்)
(4)அச்சு வடிவம் பெற்றவை (உ+ம் :- 90 களில் வெளிவந்த ‘காலம்’)
(5) கணனியில் தட்டச்சுச் செய்யப்பட்டு பிரதியெடுக்கப்பட்டன (உ+ம் :- 90 களில் வெளிவந்த பல சஞ்சிகைகள்)
(6) கணனிப் பதிப்பு - தற்போது வெளிவரும் சஞ்சிகைகள் எல்லாம் (உ+ம் :- யுகமாயினி, உயிர்நிழல், காற்றுவெளி, காலம், எதுவரை)

சிற்றிதழ்களின் அரசியல்
சிற்றிதழில் வெளியாகும் ஆசிரியர் தலையங்கம் அவற்றின் அரசியலை வெளிப்படுத்தப் போதுமானதாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம். புகலிடத்திலிருந்து வெளிவந்த தேனீ, உயிர்ப்பு, கலப்பை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது.

“நாள்தோறும் யுத்த சூழ்நிலைகளில் மரணத்துடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டும், அகதிகளாக அலைந்தபடியும், தமது கருத்துச் சுதந்திரத்தையும் முற்றாகப் பறிகொடுத்தும் இருக்கும் வடக்குகிழக்கு சாதாரண மக்களிடையே வெளிப்படையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுவது கடினமாகவே இருக்கின்றது. மாற்றுக் கருத்து தெரிவிப்பதற்கான உரிமை அங்கு முற்றாக இல்லாத நிலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனினும் இந்த நிமிடம் வரை அரசின் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் மக்களிடையே அரசிற்கெதிரான எதிர்ப்புணர்வு என்பது ஒன்றும் புதிதாகக் காட்டப்படவேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதை சரியான திசை வழியில் அணுக முடியாத வகையில் இன்றைய யதார்த்த நிலை அமைந்துள்ளது”(3)

“தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தோன்றியுள்ள இன்றைய தேக்க நிலையைக் களைந்து போராட்டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற அக்கறை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முன்னேறிய பிரிவினரிடையே பரவலாகக் காணப்படுகின்றது. இன்றைய பாசிச தலைமைக்குப் பதிலாக உண்மையான புரட்சிகர மாற்றை (Real Revolutionary Alternative) உருவாக்குவது பற்றியும் அதிகம் பேசப்படுகிறது”(4)

“அவுஸ்திரேலியா போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஒவ்வொரு இனமும் தனித்துவத்துடனும் தமது அடையாளத்தைப் பேணியும் வாழ்வது கடினமானது. இது கடலில் எதிர்நீச்சல் போடுவது போன்றது. புகுந்த புதிய இனத்தினர், குறிப்பாக இளையோர் புகுந்த நாட்டின் பழக்கவழக்கங்களில் ஊறிப் போவதும் அவர்கள் அவுஸ்திரேலியராக தம்மை நினைப்பதும் மாற்றிக் கொள்வதும் இயல்பு. தமிழர்களை தமது அடையாளத்துடனும் தமிழ் உணர்வுடனும் இங்கு வாழ வழிசெய்ய பல அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன. ஆனால் எல்லாமே எமது வீடுகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன என்பது உண்மை. நாம் நமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும்”(5)

இவற்றைக் கவனத்திற் கொள்ளும்போது சிற்றிதழ்களின் அரசியல், காலம், ஈழச்சூழல் என்பன தெளிவாகப் புலப்படுகின்றன. பொதுவாக வெளிவந்த எல்லாச் சிற்றிதழ்களும் முன்வைத்த பொருட்பரப்பை பின்வருமாறு வகைப்படுத்திப் பார்க்கலாம்.
1.தமிழ்ப் போராளிகளின் அரசியல் நிலைப்பாடு
2.தமிழ்ப் போராளிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலை
3.இலங்கைஅரச படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
4.இந்தியப் படைகள் தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகள்
5.தமிழர்களுக்கான அரசியல் அதிகாரம்
6.தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடுப் பேணுகை
7.சாதிய மேலாதிக்கம்
8.புகலிடச் சூழலில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட நிறவாத இனவாத வன்முறைகள்
9.மூன்றாம் உலக நாடுகள் மீது வல்லரசுகளின் ஆதிக்கம்
10.குடும்பத்திலும் வெளியிலும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்
11.நவீன கதைசொல்லல் முறை
12. இலக்கியத்தில் புதிய வடிவங்களைப் பரீட்சித்தல்

ஆகியவற்றை புகலிடச் சிற்றிதழ்கள் முதன்மையாக முன்வைத்தன. இவற்றினை மையமாகக் கொண்டே அதிகமான படைப்புக்கள் வெளிப்பட்டன.

எதிர்ப்புக்கூறு
சிற்றிதழ்களில் வெளியாகும் படைப்புக்களைப் பொறுத்தவரையில் அவை அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கவேண்டியவை. படைப்புக்களில் அரசியலுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு 80 களில் இருந்து தொடர்கிறது. சிற்றிதழ்க் குழுக்களின் தெரிவு சிறுகதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ ஓவியமாககவோ இருந்தாலும் அது அரசியல் ரீதியில் முதன்மை பெறவேண்டும் என்பதே.
அரசியல் விமர்சனம் அதிகமும் உயிர்ப்பு, தூண்டில், சமர், ஆகியவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றில் இலங்கை அரச படைகளின் மீதானதும் அரச ஆட்சியாளர்கள் மீதானதும் ஒருபுறமெனில் மறுபுறம் ஈழத் தமிழ்ப் போராளிகள் மீதானதாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் போராளிகள் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டமையும் மோதத் தொடங்கியமையும் இயக்கங்களின் மீதான அதிருப்திக்குக் காரணமாக அமையலாயின.

இவற்றுக்கு அப்பால் 90 களில் இந்தியப்படைகள் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. மேலும் ஒரு பகுதியாக மூன்றாம் உலக நாடுகளின் மீது அடக்குமுறையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் வல்லரசுகளை நோக்கிய விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சக தமிழ்ப் போராளிக் குழுக்கள் மீது அடக்குமுறையை வெளிப்படுத்தியமை என்பவற்றுக்காக கால் நூற்றாண்டுக்கு மேல் ஈழத்தில் முதன்மை பெற்றிருந்த விடுதலை அமைப்பே அதிகமும் புலம்பெயர்ந்தவர்களின் சிற்றிதழ்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி கணிசமான புகலிடச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் தூண்டில், இரவல் தூண்டில், சமர், புதுமை, உயிர்ப்பு என்பன முக்கியமானவை.

பெண்ணிய எழுத்துக்கள்
மேற்குலகில் பேசப்பட்ட பெண்ணிய அரசியல் தமிழ்நாட்டிலும் புகலிடத்திலும் மேலும் முன்னெடுக்கப்பட்டபோது பெண்கள் தங்கள் பிரச்சனைகள் பற்றித் தாமே பேசவும், தமக்கெதிரான வன்முறைகளை எதிர்க்கவும், இலக்கியத்தில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் தலைப்பட்டனர் இதற்கு புகலிடத்திலிருந்து வெளிவந்த சிற்றிதழ்கள் அவர்களின் கருத்துக்களைச் சுமந்து செல்வதற்கான ஊடகமாக இருந்துள்ளன.

ஆரம்பத்தில் வெளிவந்த சஞ்சிகைகளில் ஆண்களே எழுதி வந்தாலும் அவர்கள் இயக்க செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதனால் இயல்பாகவே பெண்கள் தொடர்பாக முற்போக்குப் பார்வையுடன் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் அவை ஆணாதிக்க மனோநிலையுடன் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்ப்பது பெண் எழுத்துக்களின் முதற்கட்டமாக இருந்தது. மறுபுறம் ஆணாதிக்க கருத்தியல் மனோபாவத்துடன் எழுத்துக்களை மறுத்து பெண்ணிய அரசியலை முன்வைக்கும் படைப்புக்களை எழுதுவது என்பது அதன் இரண்டாவது கட்டமாக இருந்தது. இதனாலேயே பெண்ணிய எழுத்துக்கள் பெண்களிடம் இருந்தே வரவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் வெளிவந்த சிற்றிதழ்களுள் கண், சக்தி, ஊதா, ஆகியனவும் ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், ஆகிய மலர் வெளியீடுகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவையாகும்.

புதிய கதைகளும் புதிய வடிவங்களும்
மாற்றுக் கருத்துள்ளவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியவாறு சில சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புக்கள் அமைந்திருந்தன. அவற்றின் நோக்கம் தனியே அரசியலை முன்னெடுப்பது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகளையும் முன்னெடுப்பாதாகும். அம்மா, உயிர்நிழல், எக்ஸில், காலம், ஆகிய சிற்றிதழ்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்துள்ளன.

ஆக்க இலக்கியங்களாகிய கவிதை, சிறுகதைகளில் வித்தியாசமானவற்றை முன்வைத்ததோடு வடிவம் சார்ந்த மீறல்களையும் நிகழ்த்த இச்சிற்றிதழ்கள் இடங்கொடுத்தன. அம்மா, உயிர்நிழல், எக்ஸில் ஆகியவற்றில் வெளிவந்த சிறுகதைகளிற் சில புதிய வடிவங்களையும் புதிய கதைகளையும் முன்வைத்ததோடு சில கதைகள் தொடர்ச்சியான விமர்சனத்துக்கும் உள்ளாகின. கலாமோகன், அரவிந் அப்பாத்துரை, நா. கண்ணன், ஷோபாசக்தி, ஆகியோரின் கதைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு அவை எடுத்துக் கொண்ட புதிய கதைகளும் வடிவமும் காரணமாயின. இதேபோல் கவிதைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டன.
பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவற்றில் மிகக் கூடிய கவனம் செலுத்தியமையால் தமிழ்நாட்டு சிற்றிதழ்களுக்கு இணையாக இவை மதிப்பிடப்பட்டன.

முடிவுரை
புலம்பெயர் இலக்கியம் அனைத்து மட்டத்திற்கும் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு சிற்றிதழ்கள் அளப்பரிய பணியினை ஆற்றியுள்ளன. இன்று புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளத்தைத் தாங்கி வந்துள்ள பல தொகுப்புக்கள்(6) சிற்றிதழ்களிலேயே ஆரம்பத்தில் வெளிவந்துள்ளன. தொடர்ச்சியாக அந்த இதழ்களில் வெளிவந்த புனைவு சாரா எழுத்துக்கள் தொகுப்பு வடிவமாக்கப்படும்போது புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியலை மேலும் நுண்மையாக நோக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த வகையில் புகலிட இலக்கியப் பரப்பில் தட்டிக்கழிக்க முடியாத ஆய்வுக்குரிய மூலாதாரங்களாக புலம்பெயர் சிற்றிதழ்கள் அமைந்துள்ளன எனலாம்.

(கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)


அடிக்குறிப்புகள்
(1) குணேஸ்வரன். சு, 2008, அலைவும் உலைவும் - யாழ்ப்பாணம், தினைப்புனம்
வெளியீடு. ப.45 / (இது பற்றி முனைவர் மு. செல்வக்குமாரன் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
பன்முக வாசிப்பு’ 2008, காவ்யா வெளியீடு, நூலில் 60 ற்கு மேற்பட்ட சஞ்சிகைகள்
வெளிவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ப.18)
(2) தென்னாசிய நிறுவத்தின் பங்களிப்புடன் மேற்கு ஜேர்மனியிலிருந்து வெளிவந்த தூண்டில்
சிற்றிதழ்.
(3) ஆசிரிய தலையங்கம் : தேனீ, யூலை 1991, ஜேர்மனி.
(4) ஆசிரிய தலையங்கம் : உயிர்ப்பு 3, 1993, லண்டன்
(5) ஆசிரிய தலையங்கம் : கலப்பை 50 வது இதழ், ஐப்பசி 2006 அவுஸ்திரேலியா.
(6) எஸ். பொ இந்திரா பார்த்தசாரதி தொகுப்பில் வெளிவந்த ‘பனியும் பனையும்’ மு. திருநாவுக்கரசு
தொகுத்த ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ திருச்சியிலிருந்து வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர்
மாநாட்டு மலர், அ ஆ இ சஞ்சிகையினர் தொகுத்த சிறுகதைச் சிறப்பிதழ் என்பன
இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
நன்றி :- வலம்புரி - யாழ்ப்பாணம்/ காற்றுவெளி (இணைய இதழ்) லண்டன்.
---

Sunday, May 9, 2010

என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து




-சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்புகள்
சு. குணேஸ்வரன்-



அறிமுகம்
ஒரு கூடைக்கொழுந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்துச் சிறுகதையாகும். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஏழைத்தொழிலாளர் வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுவதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் பரம்பரையினரே இன்றும் மலையகப் பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் இளம்பெண் லட்சுமியே இச்சிறுகதையின் பிரதான பாத்திரம். லட்சுமியைச் சுற்றியே கதையும் கதை நிகழ்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
அன்றையதினம் வேலைக்குச் சற்றுத் தாமதமாக வந்து சேர்கிறாள் லட்சுமி. வழக்கமாக அவள் கொழுந்தெடுக்க வருகின்றபோதெல்லாம் கலகலப்பாக உரையாடும் அவளின் தோழிப் பெண்களும் மற்றவர்களும் எதுவும் பேசாமல் மெளனமாகவும் அவளை எரிச்சலோடு பார்ப்பவர்களாகவும் இருப்பதைக்கண்டு இன்று இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று எண்ணுகிறாள்.

தன் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்துக்கதைகூறும் கங்காணிக் கிழவனும் எதுவும் பேசாமல் நிற்கிறான். தனக்குரிய நிறை எதுவென கங்காணிக் கிழவனிடம் கேட்டபோது. பிந்தி வந்ததற்காக லட்சுமியின் மீது எரிந்து விழுகிறான். வழக்கமாகக் கொழுந்தெடுக்கும் இடத்தை விட்டு கடைசி மலையில் சென்று எடுக்குமாறு வேண்டா வெறுப்பாகக் கூறுகிறான்.
முதல் வரிசையிலோ அல்லது கடைசி வரிசையிலோ கொழுந்தெடுக்க பலர் விரும்புவதில்லை. காரணம் அங்கு அதிகமான கொழுந்து எடுக்க முடியாது. ஆனால் லட்சுமி அன்றையதினம் கடைசி வரிசைக்குச் செல்கிறாள். இவளின் அருகே வயதான கிழவி தன் நடுங்கும் கரங்களால் கொழுந்து எடுக்கிறாள். ‘என்னடி ஆயா இந்தப் பக்கம்’ என்று அவள் விசாரிக்கிறாள்.
முதற்கொழுந்து எடுத்து கூடைக்குள் போடும் போது ‘பொலி’ சொல்லுமாறு கிழவியைக் கேட்க கிழவி பொலி சொல்லுகிறாள். மாலையில் கொழுந்து எடுத்து முடித்து நிறுவைக்கு மற்றையவர்களும் செல்கின்றனர். அங்கு நிறுவைக்காக எல்லாப் பெண்களும் தங்கள் தங்கள் நிறையுடன் காத்திருக்கிறார்கள்.
நிறுவைத் தராசு தூக்கவும், கொழுந்துகளைத் தூக்கிப் படங்குகளில் கொட்டவும் வேலையாட்கள் தயாராக நிற்கின்றனர். கங்காணி, கணக்கப்பிள்ளையை அழைத்து வருகிறார். கூடையுடன் வரிசையாக நிற்கும் பெண்களை கணக்குப்பிள்ளை பார்க்கிறார். அவரின் பார்வை அந்த வரிசையில் நிற்கும் லட்சுமியில் தரித்து நிற்கிறது. லட்சுமியை அருகே வருமாறு அழைக்கிறார்.
லட்சுமி சில நாள்களுக்கு முன்னர் 25 ஆம் நம்பர் மலையில் எடுத்த 57 றாத்தல் கொழுந்து தொடர்பாக வினாக்களை அடுக்குகிறார். அந்த மலையில் பல வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட 57 றாத்தல் எடையுள்ள தேயிலைக்கொழுந்தை இதுவரை எடுத்தது கிடையாது. அப்படியிருக்க லட்சுமி எடுத்த கொழுந்து நிறை மற்றவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார். இது லட்சுமிக்கு அதிர்ச்சியாக உள்ளது. தன் தொழிலின் மீதும் தன் கண்ணியத்தின் மீதும் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நினைத்து மனம் குமுறுகிறாள்.
கணக்குப் பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக தொடர்ந்து பேசுகிறார். லட்சுமி சொந்தக்காரப் பெண்ணாக இருப்பதால்தான் கணக்கைக் கூட்டி எழுதிவிட்டதாக மற்றவர்கள் சந்தேகப்படுவதாகவும், கணக்குப் பிள்ளைகளுக்கு பொம்பிளைக் கேஸ் பிரச்சனைக்குரியது என்பதும், மற்றவர்களின் சந்தேகப் பார்வைக்கு தான் ஆட்படக் கூடாது என்பதற்காகவும் அவள் எடுத்த 57 றாத்தல் கொழுந்தை இன்னொரு முறை எடுத்துக் காட்டவேண்டும் என்று லட்சுமியிடம் கட்டளையிடுகிறார்.
லட்சுமிக்கு ஏற்பட்;ட அதிர்ச்சியோடு அந்தக் கட்டளையை மனவைராக்கியத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். தன்னால் மீண்டும் ஒருமுறை அவ்வாறு கொழுந்தெடுத்து நிரூபிக்க முடியுமென கூறுகிறாள்.
இதன் பின்னர் மாலை லட்சுமியின் வீட்டில் அவளின் வருங்காலக் கணவன் ஆறுமுகம் இது சம்பந்தமாக அவளுடன் உரையாடுகிறான். 57 றாத்தல் கொழுந்தெடுத்த அன்றையதினம் ஆறுமுகம் சாப்பாட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது லட்சுமி தனியாக நின்றதைக் கண்டு அவளுடன் உரையாடியபடி அவனும் கொஞ்சம் கொழுந்தெடுத்து அவளின் கூடையில் போட்டான். அதுதான் இன்று 57 இறாத்தல் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தது. அதனால் கணக்குப்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டு உண்மையைக் கூறிவிடலாம் என்கிறான் ஆறுமுகம். ஆனால் அதனை லட்சுமி ஏற்றுக் கொள்ளவில்லை. அது எதிர்பாராமல் நடந்தது. அவர்கள் தன் தொழிலில் சந்தேகப்பட்டதனால் தன்னால் முடிந்தவரை எடுத்துக் காட்டப் போவதாகவும் முடியாவிட்டால் மற்ற மலைக்கு போய் இலை பொறுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.
மீண்டும் நான்கு பேர் சாட்சியாக கங்காணி முன்னிலையில் காலை 9 மணியிலிருந்து மாலைக்கிடையில் கொழுந்து எடுக்கிறாள். எடுத்த கொழுந்து நிறுக்கப்;படுகிறது. 61 இறாத்தல் நிறை. எதிர்பார்த்ததை விட 4 றாத்தல் அதிகம். கணக்குப்பிள்ளை எல்லோருக்கும் கேட்கத்தக்கதாக நிறையைக் கூறி விட்டுக் கொட்டச் சொல்லுகிறார்.

தன் கையால் கொழுந்துகளை அள்ளிப் பார்த்த கணக்குப்பிள்ளை முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக அதிகமான பழுதுடன் கொழுந்து இருப்பதாகவும் எடையிலிருந்து 20 றாத்தல் கழிக்கப்போவதாகவும் எரிச்சலுடன் கூறுகிறார்.
லட்சுமிக்கு மீண்டும் அது அதிர்ச்சியாக உள்ளது. சவாலை ஏற்றுக் கொண்டு காலையிலிருந்து கஷ்டப்பட்டுக் கொழுந்தெடுத்தும் இறுதியில் 20 இறாத்தல் கழிப்பதாயின்
என்று அவள் எண்ணுவதற்கிடையில் கங்காணிக் கிழவன் முன்னே வந்து ஆத்திரம் மேலிட லட்சுமியின் வலகை ஆட்காட்டி விரலைப் பிடித்து கணக்குப் பிள்ளையிடம் காட்டி
ஆவோசத்துடன் பேசுகிறார்.
“ஐயா, இதைப்பார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா, இது நல்ல கொழுந்தோ கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க?”
என்று கங்காணிக்கிழவன் நியாயத்திற்காக வாதிடுகிறார். லெட்சுமியின் வலதுகை ஆட்காட்டி விரலின் ஓரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அவளின் கைகளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட கணக்குப்பிள்ளை ஒரு கதையும் இல்லாமல் துண்டை வாங்கி திரும்பவும் காலைக் கொழுந்துடன் 61 இறாத்தலையும் பதிந்து கொடுக்கிறார்.
தன் சபதம் நிறைவேறாவிட்டால் வேறு மலைக்குச்சென்று இலை பொறுக்கப் போவதாக தனது எதிர்காலக் கணவன் ஆறுமுகத்துடன் வீட்டில் உரையாடிய போது கூறிய லட்சுமி சபதம் நிறைவேறியபோதும் தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்ய விரும்பாது வேறு மலைக்குச் சென்று விடுகிறாள். இதுவே ‘ஒரு கூடைக் கொழுந்து’ சிறுகதையின் கதைச்சுருக்கம் ஆகும்.


கதைக்களம்
இச் சிறுகதை மலையகப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டத்தைக் களமாகக் கொண்டது. கதை தேயிலைத் தோட்ட மலைப் பிரதேசத்தைச் சுற்றியும் கொழுத்தெடுத்த பின்னர் அவர்கள் நிறைபார்க்கும் ஸ்டோர் எனப்படும் இடத்தைச் சுற்றியும் இடம்பெறுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயம் என்று சொல்லப்படும் குடியிருப்பில் மிகுதிக் கதைச் சம்பவம் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து எடுக்கும் இடமும் தேயிலை நிறை பார்க்கும் இடமும் கதையின் முற்பகுதியாகவும் அப்பிரதேசத்தில் அவர்கள் வாழும் லயம் கதையின் பிற்பகுதியாகவும் இடம்பெறுகிறது. என் எஸ் எம் இராமையா 20 வரையான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் அவை அனைத்துமே தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளையே மையமாகக் கொண்டவை என்று கூறப்படுகின்றது.

பாத்திரத் சித்திரிப்பு
ஒரு கூடைக் கொழுந்தின் பிரதான கதாபாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்படுகின்றாள். அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக கங்காணிக்கிழவன், கணக்குப்பிள்ளை மற்றும் கதையோட்டத்திற்கு இணையாக உதிரியாக வரும் பாத்திரங்களாக ஆறுமுகம், லட்சுமியின் தாய், கொழுந்தெடுக்கும் பெண்கள், வயதான கிழவி ஆகிய பாத்திரங்களையும் கூறலாம்.

லட்சுமி

ஒரு கூடைக்கொழுந்தின் பிரதான பாத்திரமாக லட்சுமி சித்திரிக்கப்பட்டுள்ளாள். லட்சுமி இயல்பிலேயே கலகலப்பானவளாகவும், எல்லோருடனும் சகஜமாகப் பழகுபவளாகவும் உள்ளாள். தன் வேலையில் கண்ணியம் மிக்கவளாகவும் இலட்சியத்தை அடைவதற்காக கடுமையாக உழைப்பவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். இரண்டாம் தடவை அவள் அதிக நிறை எடுத்து நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பத்திலே தன்னில் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, தன் உண்மையான உழைப்பை நிரூபிப்பதற்காக தயங்காமல் முன்வருகின்றாள்.
அதனால்தான், தனது உழைப்பை நிரூபித்ததன் பின்பும் தனக்கு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகவும் வரப்போகின்ற பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு மலைக்குச் செல்வதாகக் கருதக்கூடியதாக உள்ளது.
அதுமாத்திரமன்றி வருங்காலத்தில் திருமணம் செய்யவிருக்கும் ஆறுமுகம் அவளின் குடும்பத்தினருடன் அந்நியோன்யமாக தொடர்புகொண்டிருப்பது கதையோட்டத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது. 57 றாத்தல் பிரச்சினைக்கு ஆறுமுகமும் காரணமாக இருந்து விட்டால் அவனுக்கு வேலை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதாலும் அதனைக் காட்டிக் கொடுக்காமல் தற்துணிவுடன் செயற்படுகிறாள்.
அவர்களின் சந்தேகம் தீர்ந்த பின்னரும் கூட தொடர்ந்தும் அந்த மலையில் நின்று வேலை செய்யாது வேறு மலைக்கு மாறிப் போக விரும்புவது தனது காதலைக் காப்பாற்றுவதற்கும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் ஆகும். இவ்வாறாக லட்சுமி என்ற பாத்திரம் கதையோட்டத்திற்கு ஏற்ப மிக யதார்த்தமாகவும் முற்போக்காகவும் படைக்கப்பட்டுள்ளது.

கணக்குப் பிள்ளை

தோட்டத் தொழிலாளர்கள் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங்காணி கணக்குப் பிள்ளைக்குக் கட்டுப்பட்டவர். கணக்குப் பிள்ளை தனக்கு மேல்நிலையில் இருக்கும் தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவர். இந்த அதிகாரநிலையில் தன் வேலையில் தனது கடமையை நிரூபிக்கவேண்டிய கடப்பாடு கணக்குப்பிள்ளைக்குரியது.
தெரிந்தவர் அல்லது உறவினர் என்று கூடுதல் கணக்கெழுத முடியாது. அது அவரது வேலைக்கு ஆபத்தைத் தேடித்தரும். அதனாலேயே லட்சுமி எடுத்த அதிக நிறையை நிரூபிக்க வேண்டிய சங்கடம் கணக்குப் பிள்ளைக்கு ஏற்படுகின்றது. தனது தோட்ட முதலாளிக்கு தன்னை உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் நிரூபிப்பதற்காக லட்சுமியை வருத்தி மீண்டும் 57 றாத்தல் கொழுந்தெடுக்க வைக்கிறார் கணக்குப்பிள்ளை.
மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு தான் ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு இவரிடம் மிகுந்திருப்பதைக் காணலாம். இதனை மலையில் இருக்கும் மற்றவர்கள் ஆங்காங்கு கதைப்பதில் இருந்தும் எல்லாத் தொழிலாளர் முன்னிலையில் லட்சுமியின் பிரச்சனையைக் கூறுவதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
நான்குபேர் முன்னிலையில் திரும்பவும் லட்சுமியின் உழைப்பு உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டதும் கணக்குப்பிள்ளைக்கு அவளில் உண்மையான விருப்பம் ஏற்படுகின்றது. ஆனால் அந்த விருப்பம் அவரின் மனதளவில் மட்டுமே சம்பந்தப்பட்டது. லட்சுமிக்கோ மற்றவர்களுக்கோ இது தெரிய வாய்ப்பில்லை. இதை லட்சுமியும் கூட அறியாதவளே.
இவ்வாறாக கணக்குப்பிள்ளை என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

கங்காணிக்கிழவன்

இச்சிறுகதையில் தொடக்கமும் முடிவும் ஒரு வகையில் கங்காணிக் கிழவனுடன் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. ஆரம்பத்தில் கங்காணிக்கிழவன் பற்றிய மனப்பதிவு ஆத்திரத்தைத் தரத்தக்கதாகவும் சிறுகதையின் இறுதியில் கங்காணிக்கிழவன் தன்னை நியாயத்திற்காக குரல் கொடுப்பவராக வெளிக்காட்டும் போதும், ஆரம்பத்தில் இருந்ததை விட கங்காணிக் கிழவன் பாத்திரத்தில் ஒரு விருப்பம் ஏற்படுகிறது.
வேலைக்கு நேரம் கழித்து லட்சுமி வந்தபோது அவள் அதிக நிறையுள்ள கொழுந்தை எடுத்தாள் என்பதற்காக கோபமாகவும் எரிச்சலாகவும் வேண்டாவெறுப்பாகவும் பேசும் கங்காணிக் கிழவன், அதிகார வர்க்கத்தோடு சேர்ந்து தன்னையும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்கிறார். லட்சுமியின் உண்மையான உழைப்பையும் நேர்மையையும் அறிந்த பின்னர் கங்காணிக்கிழவரும் இறுதியில் தொழிலாளரின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகத் தன்னை வெளிக்காட்டுகின்றார். இது அவருடைய நேர்மையினையும், மனிதாபிமான உணர்வினையும் எடுத்துக் காட்டுகின்றது.
நகைச்சுவையாக உரையாடக்கூடியவராகவும் எல்லோரும் விருப்புக் கொள்ளக்கூடிய பாத்திரமாகவும் வருகின்ற கங்காணிக்கிழவன் தன் வேலையில் மிக்க கண்ணியமானவராகவும் தன் கடமையினை செவ்வனே நிறைவேற்றுபவராகவும் இருக்கின்றார்.
கதையில் இறுதியில் வருகின்ற ‘இதைபார்த்து விட்டுப் பேசுங்கள் ஐயா நல்ல கொழுந்தோ கூடாத கொழுந்தோ எல்லாவற்றையும் எடுத்தது இந்தக் கையி’ என்ற கூற்று உயிர்ப்பு மிகுந்த வரிகள். இந்த வரிகளே கங்காணிக் கிழவனை நிலைநிறுத்தப் போதுமானவையாகும்.

உதிரிப் பாத்திரங்கள்

ஆறுமுகம்
லட்சுமியின் எதிர்காலக் கணவன் ஆறுமுகம். லட்சுமி வேலை முடிந்து வந்த அந்தி நேரம் அவளின் வீட்டில் அன்றைய பிரச்சனை பற்றி அக்கறையாக உரையாடுகிறான். லட்சுமியின் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்று எண்ணுகிறான். 57 றாத்தல் பிரச்சனைக்கு தானும் ஒரு காரணம் என்பதனால் கணக்குப் பிள்ளையிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்றும் யோசனை கூறுகிறான்.
அவன் அன்றையதினம் சாப்பாட்டுக்கு வரும் வழியில் லட்சுமி தனியாக நின்று கொழுந்து எடுத்தபோது சற்றுநேரம் அவளுடன் உரையாடியபடி எடுத்த கொழுந்தே இந்தப் பிரச்சினையை இப்போது கிளப்பி விட்டிருந்தது. இதிலிருந்து ஆறுமுகம் என்ற பாத்திரம் லட்சுமியில் அக்கறை உள்ள பாத்திரமாகவும் உழைப்பு மிகுந்த பாத்திரமாகவும் அவளின் பிரச்சினை தனக்கு ஏற்பட்ட பிரச்சினையாகவும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற யோசனையை கூறும் பாத்திரமாகவும் ஆசிரியர் ஆறுமுகம் என்ற பாத்திரத்தைச் சித்திரித்துள்ளார்.
எதிர்காலத்தில் லட்சுமியைத் திருமணம் செய்ய இருக்கின்றவன் என்பதனால் அவன் காதல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினையைக் கதைக்காமல் லட்சுமியின் தாய் தந்தையருடன் பொதுவாக உரையாடிவிட்டு லட்சுமியுடனும் உரையாடுவான். இதிலிருந்து தன்னை பொறுப்புள்ள ஓர் ஆடவனாகக் காட்டிக்கொள்கிறான்.

லட்சுமியின் தாய்
லட்சுமியின் தாய் தன் மகளிலும் அவளின் எதிர்காலக் கணவன் ஆறுமுகத்திலும் மிகுந்த அன்புடையவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிறுகதையில் ஓரிடத்தில் மட்டும் ‘ஆயி அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா?” என்று கேட்பதாக ஒர் உரையாடல் வருகிறது. தன் மகளுக்கு வரப்போகின்ற மருமகனிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட நிலை இதனூடாகத் தொpகிறது. ஆறுமுகம் வேலை முடிந்த பின்னர் சற்று ஆறுதலாக லட்சுமியுடன் வந்து உரையாடுவது வழக்கம். அது போன்ற நேரங்களில் மரியாதையாக லட்சுமியின் தாயும் தகப்பனும் சற்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

தோழிப்பெண்கள்
தோழிப்பெண்கள் லட்சுமியுடன் கலகலப்பாக உரையாடுபவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அவள் வழக்கமாகக் கொழுந்தெடுக்க வரும்போதே லட்சுமிக்காக நிறைபிடித்து வைத்திருந்தும் தங்களுக்கு பக்கத்தில் நிறை பிடிக்க வேண்டும் என்றும் விருப்பப்படுபவர்கள் லட்சுமியின் தோழிப்பெண்கள். அவளுடன் குழந்தைகள் போல் உரையாடுவது கதையோட்டத்தில் தெரிகிறது.
“இங்கே வாடி லெட்சுமி! ஏன்கிட்டே நிறைதாரேன்” என்று கூறுவதும்,
“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”
என்றும் குழையக் குழையக் கதைப்பவர்கள். அதேபோல் லட்சுமியும் அவர்களை முறை சொல்லி ‘அக்கா எனக்கு எது நெறை’ என்று கேட்பதிலிருந்தும் தெரிகிறது.
ஆனால் முதற்சம்பளம் வாங்குபவளை எரிச்சலுடன் பார்ப்பவர்கள்போல் லட்சுமியுடன் கதைக்காது முகத்தைத் திருப்பிக் கொள்வதிலிருந்து மற்றவரின் உயர்வில் எரிச்சற்படுகின்ற மனிதஇயல்பு அந்தத் தோழிப்பெண்களுக்கு ஊடாக வெளிப்படுகின்றது. அந்த வகையில் மனிதர்களுக்கு இருக்கவேண்டிய இயல்பான உணர்வுகளுடன் ஆசிரியர் தோழிப்பெண்களைப் படைத்திருக்கின்றார்.

கிழவி

லட்சுமியின் அருகில் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் பொக்கைவாய்க் கிழவி லட்சுமியுடன் உரையாடும் சந்தர்ப்பம் ஒன்று கதையில் வருகின்றது. கடைசி நிறையிலே நின்று தான் தளர்ந்து போனபோதும் கூட பனிக்குளிரில் நடுங்கும் கைகளால் கொழுந்தெடுத்து உழைத்து, தன் வாழ்வை ஓட்ட வேண்டிய வயதான நிலை இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
அதிசயமாகவும் ஆதரவாகவும் அன்பாகவும் கதைகேட்கும் பண்பினை கிழவியிடம் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் லட்சுமி தான் எடுத்த முதற்பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது “அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்” என்று லட்சுமி கேட்ட போது “போடு அப்பனே, சம்முகா! பொலியோ…பொலி – பொலி – பொலி” என்று அன்பாகவும் பக்தியுணர்வோடும் அனுபவத்தோடும் கூறுகிறாள்.
உண்மையில் ஒரு சிறிய பாத்திரத்தைப் படைத்தாலும் மிக நுட்பமாக அப்பாத்திரத்தை பண்பாட்டு மரபுகளோடு படைத்துள்ளமை ஆசிரியரின் கதை கூறும் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

மலையக மக்களின் வாழ்க்கை அம்சம்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டு முகத்தை மிக கனகச்சிதமாக ஆசிரியர் வாசகர் மனக்கண்முன் கொண்டு வருகின்றார். லட்சுமியின் ஒருநாள் வாழ்வு சொல்லப்படுவதனூடாக இந்தப் போக்கை அறிந்து கொள்ள முடிகின்றது.
காலையில் கொழுந்தெடுக்கச் செல்லுதல், அங்கு கங்காணிமாரின் மேற்பார்வையில் வேலை செய்தல், பின்னர் நிறுவைக்காக ஸ்டோர் முன் எடுத்த கொழுந்துக் கூடைகளுடன் காத்திருத்தல், பின்னர் கணக்குப்பிள்ளை நிறை பார்த்தல், காலைமுதல் மாலை வரை கஷ்டப்பட்டு எடுத்த கொழுந்தில் பழுது கண்டுபிடித்து நிறைவெட்டுவேன் என அவர்களை ஏங்க வைத்தல், அதன் பின்னர்தான் தமது லயன்களுக்குச் சென்று சாப்பாடு மற்றும் தமது வீட்டு வேலைகளைச் செய்தல் என்பன கதையோட்டத்திற்கு ஊடாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

சிறுகதையின் சிறப்புக் கூறுகள்
1. தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை வெளிப்படுத்துதல்
தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழிப்பதற்குப் படும் பாடுகள் மிக நுட்பமாக கதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. நாட்கூலிக்கு வேலைசெய்யும் அவர்கள் தமது தொழிலில் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் கூறப்படுகின்றன. கொழுந்தெடுப்பதில் இருக்கும் சிரமம், தொழிலின் நிச்சயமற்ற தன்மை, மேலதிகாரிகளின் கண்காணிப்பிற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு வேலைசெய்ய வேண்டிய நிலை ஆகியன கூறப்படுகின்றன.
கொழுந்தெடுத்தல் மற்றைய வேலைகள் போல் இலகுவான தொழிலல்ல. நிறை பிடித்தல், கொழுந்தெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் செய்தல், படங்குச்சாக்கை இடுப்பைச் சுற்றிக் கட்டுதல், கூடையின் கயிற்றை தலைக்கூடாக மாட்டுதல், கொழுந்தெடுத்தல், முற்றல் இலைகளைத் தவிர்த்தல், எடுத்த கொழுந்தை நிறைபார்ப்பதற்கு கொண்டு செல்லல், அங்கு காத்திருந்து அதன் பின்னர் நிறைக்குரிய துண்டைப்பெற்றுக் கொண்டு செல்லல், ஆகியன இந்தத் தொழிலின் படிநிலை அம்சங்களாகச் சுட்டப்படுகின்றன.
எப்படித்தான் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் மேலதிகாரிகளின் கழுகுக் கண்களுக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தம் உண்மையான உழைப்பை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

மற்றும் இவ்வேலையில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. தமது வேலையில்; அதிகாரிகள் பிழை பிடித்துவிட்டால் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டு விடுவோம் என்ற அந்தர நிலையும் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.
வயதானவர்கள், பிள்ளைக்காரிகள்கூட அன்றாடம் தொழில் செய்தாலே தம் வயிற்றுப் பாட்டைப் பார்க்க முடியும் என்ற நிலையும் தெரிகிறது.
எனவே, உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து சுரண்டப்படுவதும் அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதென்பதும் வெறும் கானல் நீராகவே இருப்பது இக்கதையூடாக வெளிப்படுகின்றது.

2. பிரதேசப் பண்பாட்டை வெளிப்படுத்துதல்
இச்சிறுகதையூடாக மலையக மக்களின் பிரதேசப் பண்பாடு வெளிப்படுகின்றது. எந்தவொரு தொழிலானாலும் கடவுளைத் தொழுதே எல்லோரும் செய்வது வழக்கம். இது மரபாகவும் கைக்கொள்ளப்படுகின்றது. லட்சுமி கொழுந்தெடுக்க ஆரம்பிக்கும்போது தேயிலைச்செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்குகின்றாள். அதேநேரம் முதற்கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது அருகில் நிற்பவர்கள் ‘பொலி’ சொல்வது வழக்கம் அந்த மரபு இங்கும் கைக்கொள்ளப்படுவது தெரிகின்றது.
இந்த வகையில் கிராமிய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ‘பொலி’ சொல்லும் மரபினையும் ‘ஒப்புராணை’ என்ற சத்தியம் செய்யும் நம்பிக்கையினையும் கருத முடிகின்றது.
உறவு நிலைத் தொடர்புகள் மிக நாகரிகமாகப் பேணப்படுவதும் இக்கதையில் வெளிக்காட்டப்படுகின்றது. லட்சுமியும் ஆறுமுகமும் வீட்டில் உரையாடும் போது லட்சுமியின் தாயும் தந்தையும் மரியாதையாக ஒதுங்கிக் கொள்வது கதையின் போக்கினூடே எடுத்துச் சொல்லப்படுகின்றது.

உறவினர் அயலவர் தெரிந்தவர் ஆகியோரை முறை சொல்லி அழைக்கும் வழக்கம் இக்கதையில் இழையோடுகின்றது. வயதானவர்களை அப்பச்சி, அம்மாயி என்று அழைப்பதும், இளம்பெண்களை ஆயி என்று பெரியவர்கள் அழைப்பதும்; இளம்பெண்கள் தங்கள் சகபாடிகளை குட்டி, பொட்டைச்சி, செட்டுகள் என்று அழைப்பதும் இது அவர்களின் உரையாடலைப் பொறுத்தும் உரையாடுபவரின் மனநிலைக்கு ஏற்ப மாறுவதும் அவதானிக்கத் தக்கது.

3. தொழில் சார்ந்த நுணுக்கத்தை வெளிப்படுத்துதல்
தேயிலைத் தோட்டத்தொழிலைப் பொறுத்த வரையில் கொழுந்தெடுத்தல் இங்கு பிரதானமான தொழிலாக உள்ளது. என்றாலும் தேயிலைத் தோட்டங்களில் இதனுடன் இணைந்த வேறு வேலைகளும் செய்யப்படுவதுண்டு. புல்வெட்டுதல், கவ்வாத்து வெட்டுதல், முள்ளுக் குத்துதல், கான் வெட்டுதல், உரம் போடுதல், மருந்தடித்தல், பழைய தேயிலையை பிடுங்கி விட்டு நிலத்தைப் பண்படுத்தி புதிய கன்றுகளை நாட்டுதல் ஆகிய பாரம்பரியத் தோட்டச் சில்லறை வேலைகளும் மலையக தோட்டங்களில் செய்யப்படுவதுண்டு.
இச்சிறுகதையில் கொழுந்தெடுத்தல், இலை பொறுக்குதல் ஆகியனவே சுட்டிக்காட்டப்படுகின்றன. கொழுந்தெடுக்கும்போது அது முறையாகச் செய்யப்படும் வேலையாகவும் கொழுந்தெடுப்பதற்கு முன்னர் அவர்களின் ஆயத்தமும் கதையில் புலப்படுகின்றது. அதிலிருந்து சில பகுதிளை எடுத்துக் காட்டலாம்.
“கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்கு மேலே தூக்கி - இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்து விடுமே! மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞாண் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள் இருந்த தலைத்துண்டை உதறி, ….தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக் கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள்.”
“மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, பனியில் நனைந்து நின்ற கொழுந்துகளைக் கிள்ளத் தொடங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்து விட்டது. காம்புப் பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக் காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை…இளந்தளிர்கள் ‘சடசட’ வென ஒடிந்து கொண்டிருந்தன.”
பொதுவாக அதிக கொழுந்தெடுத்து எடை போட விரும்புபவர்கள் முதற்தொங்கலுக்கோ அல்லது கடைசித் தொங்கலுக்கோ போக விரும்புவதில்லை. காரணம் முதற்தொங்கல் என்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறைநிறைகளாகவே இருக்கும். அதிக தடவைகள் ஏறி இறங்க வேண்டியிருக்கும்.
அதேபோல் கடைசித் தொங்கல் என்றால் வயதானவர்களுடனும் பிள்ளைக்காரிகளுடனும் கொழுந்தெடுக்க வேண்டியிருக்கும். பிள்ளைக்காரிகள் ஆடி அசைந்து நேரம் கழித்து வந்து சில மணிநேரம் எடுத்து விட்டு லயத்திற்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அத்தோடு அவர்களின் நிறையையும் சேர்த்து எடுத்துக் கொள்வதோடு அவர்களின் கூடையையும் தூக்கிச்சென்று எடை பார்க்க வேண்டும்.
நல்ல கொழுந்து உள்ள மலையெனில் சாப்பிடக்கூடப் போகாமல் கொழுந்தெடுப்பார்கள். ஒவ்வொருவரும் நாற்பது ஐம்பது றாத்தல் என எடுப்பார்கள்.
இவ்வாறாக வேலை தொடர்பான நுணுக்கமான பார்வைகளைக் கொண்டதாக இக்கதை அமைந்துள்ளது.


4. மொழிப்பயன்பாடு
ஒரு கூடைக் கொழுந்து சிறுகதையில் விரவியிருக்கும் மொழிப்பயன்பாடு பற்றித் தனியாக எழுதலாம். அந்த அளவுக்கு அதிகமான மலையகப் பிரதேச மொழிச்சொற்கள் கையாளப்பட்டுள்ளன. மலையகப் பிரதேச வழக்குச் சொற்களை பேச்சு வழக்குச் சொற்கள், உறவுநிலைச் சொற்றொடர்கள், பிறமொழிச் சொற்கள் என மூன்றாக வகுத்து நோக்கலாம். அத்தோடு தொழில்சார் சொற்றொடர்களும் தனித்துவமான சொற்பயன்பாட்டை உடையனவாக உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து இக்கதைக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுக்கின்றன.

(அ) மலையகப் பிரதேச வழக்குச் சொற்கள்
1. பேச்சுவழக்குச் சொற்கள்:-
நெறை, கொந்தரப்பு, சுணங்கி, ஒப்புரணை, செட்டு, வதிலு, மொகறை, ஆவுது, பிள்ளைக்காம்பிறா, ஆளுக, பேரு, குத்தம், ஒப்புராணை, எழவு, ஊடே, நெசம்னு, வெனை, அவுகளை, மொறைக்கிறே, பேசிடாப்புலே, போறாக, பொறகு, சாச்சி, கையி, பொடசக்காரி, ஒனக்கு, நெனச்சேன்

2. உறவுநிலைச் சொல்/சொற்றொடர்
அம்மா, அம்மாயி, அப்பச்சி, அய்யா, அப்பன், ஆயி, ஆயா, ஆயான், ஆத்தா, ஜயா, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிழவி, குட்டிக, தொரைச்சாணி, ஙொப்பன், சாக்குக்காரன், பிள்ளைக்காரிகள், பொட்டைச்சி, விடலைப்பிள்ளை, பொம்புளை, புள்ளே, வயசுப்பெண்கள்

3. பிறமொழிச்சொற்கள்
கிராக்கி, றாத்தல், செக்ரோல், லேபர், ஸ்டோர், டமில், கண்ட்றி, ஜபர்தஸ்து, சர்வீசு, மப்ளர், இஸ்டோர், கேஸ், பப்ளிக்கா, ஆசாமி, மாமுல்படி, லயம், ஜூவாலை.

(ஆ) தொழில்சார் சொற்றொடர்கள்
தலைக்கயிறு, கறுப்புநிறக்கயிறு, படங்குச்சாக்கு, தலைத்துண்டு, கூடைக்கயிறு, காம்புப் பகுதி, பிஞ்சுக்காம்பு, நார்க்குச்சி, இளந்தளிர், அந்திக்கொழுந்து, ஒருமணிக்கொழுந்து, சங்கு ஊதுதல், தராசுமரம், தட்டுக்கூடை, தட்டுக்கொட்டுதல், தேயிலை மிலாருக் குவியல், ரப்பு, எல பொறுக்குதல், முற்றல் இலை, பொலி, எடுவைக்காரிகள், குறைநிறை

5. அணிச்சிறப்பு
கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பாகவே அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதையின் இன்னொரு சிறப்புக் கூறாக உள்ளது. வர்ணனை, உவமை, உருவகம், மரபுத் தொடர் ஆகியன குறிப்பிடத்தக்கன.
வர்ணனைகளுள் தேயிலைத் தோட்ட வர்ணனையும் லட்சுமி குடியிருக்கும் லயன் வர்ணனையும் எடுத்துக்காட்டத்தக்கவை.
“பங்குனிமாதப் பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெற்றி கண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப் போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது”
என்று தேயிலைத் தோட்டத்தையும்

“சின்னதொரு தகரலாம்பு மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக் கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதி விட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக்’ கென்று ஒடித்து, அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும், அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைத்தான் எதிர்பார்ப்பதுபோல் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். ‘ஆமா அப்ப என்னதான் செய்யப்போறே?’ கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜூவாலை ஒளி அவன்மீது வர்ணப் பூச்சு செய்து கொண்டிருந்தது”
என்று லட்சுமியும் ஆறுமுகமும் லயத்தில் இருந்து கதைக்கும் அழகினையும் நுட்பமாக வர்ணித்துள்ளார்.
உவமை உருவகங்கள் கதையின் போக்குக்கு ஏற்ப கையாளப்பட்டிருந்தல் கவனிக்கத்தக்கது. இங்கு உவமைத் தொடர்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை விரித்து உவமையணியாகக் கொள்ள முடியும்.

உவமை:-
காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப் போயிருந்தது
உவமைத்தொடர்கள் :-
முதல் சம்பளம் வாங்குபவளை எரிச்சலோடு பார்க்கும் பிள்ளைக்காரிகள் மாதிரி
ஆடி அசைந்து அம்மன் பவனி வருவது போல
மேட்டிலிருந்து பள்ளத்துக்குச் சரேலென இறங்கும் சாரைப்பாம்பு மாதிரி

உருவகம்:-
லெட்சுமியின் புருவங்கள் கேள்விக் குறியாக வளைந்தன
றாத்தல் விஷமாக ஏறிக் கொண்டிருந்தது
அரிசிப்பல் தெரியச் சிரித்தாள்
வெளிக்குப் பசுவாக நின்று கொண்டிருந்தார்கள்
கல்லாகக் கனத்தது
சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக் கொண்டிருந்தது
கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது

மரபுத்தொடர்கள்:-
பல்லைக் காட்டுதல், சூழ்கொட்டுதல், மாரடித்தல் (மாரடிக்க) ஆகிய மரபுத் தொடர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக கதையின் நகர்வுக்கு ஏற்ப அணிநலன்கள் கையாளப்பட்டிருத்தல் இச்சிறுகதைக்கு ஓர் இலக்கியச் சிறப்பை வழங்குகின்றது.

6. கதைகூறும் உத்தி

ஒரு கூடைக் கொழுந்து யதார்த்தமான கதைப் போக்கினைக் கொண்டது. கதைச்சம்பவங்கள் நிகழ்வுகளுக்கு ஊடாக கதை நகர்த்தப்படுகின்றது. ஒரு சிறுகதைக்கேயுரிய தொடக்கம் வளர்ச்சி முடிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
லெட்சுமி எடுத்த 57 றாத்தல் கொழுந்து பற்றிய விசாரணையில் அதேபோல் மீளவும் கொழுந்து எடுத்துக் காட்டவேண்டும் என்று கணக்குப் பிள்ளை கூறுகின்ற கதைப்பகுதியும், லெட்சுமி பின்னர் எடுத்த 61 றாத்தல் கொழுந்து நிறையில் 20 றாத்தல் கழிப்பேன் எனக் கூறுகின்ற நிலையிலே கங்காணிக்கிழவன் லெட்சுமியின் விரலைக்காட்டி நியாயம் கேட்பதுமாகிய இரண்டு சம்பவங்களும் இச்சிறுகதையின் மிக முக்கியமாக கதைக்கூறுகள் ஆகும்.
பிரதேச மொழிவழக்கினை அதிகமாகக் கையாண்டு இயல்பாகவே எந்தவொரு செயற்கைத்தனமும் இல்லாது கதைகூறும் உத்திமுறை கவனிக்கத்தக்கது. இது பிரதேச இலக்கியங்களுக்கு உள்ள சிறப்பம்சங்களில் முக்கியமானது. ஒரு கூடைக் கொழுந்து அதிகமான மலையகப் பிரதேச வழக்குச்சொற்களுக்கு ஊடாக கதை கூறினாலும் மிக எளிமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பொருத்தமான இடங்களில் வர்ணணையும் இடம்பெற்றுள்ளது.
கதையின் சில இடங்களில் எள்ளல் தொனிக்கின்றது. கங்காணியையும், கணக்குப் பிள்ளையையும் எள்ளலாக குறிப்பிடும்போது
“ஐயா ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார்.அவர் அரைந்து வந்த தோரணையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்து விட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவன் சிரமப்பட்டு ‘டமில்’ பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். ‘அது’கள் ‘லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் ‘கண்ட்றி’ களுக்கு? ‘அது’ களுக்கு முன்னால் இப்படி ஜபர்தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் இது!”

என்று கணக்குப் பிள்ளையின் செயற்பாட்டை எள்ளல் தொனிக்க ஆசிரியர் விபரிக்கிறார். அதேபோல் கங்காணியையும்,
“….அவரின் செயல்களைக் கவனித்துக் கொண்டு என்னவோ ஏதோவென்று நின்ற கங்காணி ஓடிவந்து ‘ஐயா’ என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏன்தான் முதுகு கூனுகிறதோ?”
என்று கிண்டல் செய்கிறார்.

தொகுப்பாக
என். எஸ். எம். இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து என்ற இச்சிறுகதையானது இலங்கையின் மலையகப் பிரதேச மக்களின் குறிப்பாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கதையாக உள்ளது. தோட்ட நிர்வாகத்தினால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதனையும் அவர்களின் வாழ்க்கை முறையின் சில அம்சங்களையும் ஒரு குறுக்குவெட்டுமுகப் பார்வையாக இக்கதை முன்வைக்கின்றது.
இங்கு மக்களின் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஊடாகவே மலையக மக்களின் வாழ்க்கையின் சில கூறுகள் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம். இலங்கையில் மலையக மக்கள் இதுபோன்ற இன்னும் சொல்லமுடியாத பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை விளங்கிக் கொள்வதற்கான முதற்படியாக இக்கதையைக் கொள்ளலாம். அம்மக்களின் உயிர்த்துடிப்பான வாழ்வை யதார்த்தமாக தனது மொழியினூடே கொண்டு வந்து எம் மனக்கண்முன் நிறுத்தும் பாங்கு சிறுகதையாசிரியரின் வெற்றி என்றே கூறலாம்.
நன்றி :- ஜீவநதி, வைகாசி, 2010
---

Sunday, July 12, 2009

இருளும் மெளனமும் இணைந்த வாழ்வு










ந. சத்தியபாலனின் - இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

-சு. குணேஸ்வரன்

கவிஞர் ந. சத்தியபாலன் (1956) அடிப்படையில் ஓர் ஆங்கில ஆசிரியர். கவிதை, சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தனது ஆளுமையைச் செலுத்தி வருபவர். இவரின் ‘இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்’ என்ற கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.

2006 ற்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்த காத்திரமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதுவதற்குரிய அதிகபட்ச சாத்தியக் கூறுகளை சத்தியபாலனின் கவிதைகள் கொண்டுள்ளன. 1986 இல் இருந்து 2008 வரை எழுதப்பட்டவற்றுள் 41 கவிதைகளைக் கொண்டமைந்த இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்துமே மனித வாழ்வின் துயரத்தையும் ஆற்ற முடியாத சோகத்தையும் அதிகாரத்தால் அமிழ்ந்து போகும் மெளனத்தையும் பேசுவனவாக உள்ளன.

பார்த்தவுடன் அதிர்ச்சியூட்டக்கூடிய அட்டைப்படம். முகத்தின் மண்டையோட்டுப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆணி அறையப்பட்ட ‘நிக்சி நெக் ஒண்டி’ மரச்சிற்ப புகைப்படத்துடன் கூடிய தொகுப்பைப் பார்த்தபோது மிகவும் இறுகிய மனத்துடனேயே கவிதைகளுள் நுழைய முடிகின்றது.

இந்த நூற்றாண்டுத் துயரங்களில் ஒன்றாகிப் போன மனித அவலங்களையே அதிகமான கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் இருளையும் அதன் மெளனத்தையும், சொற்களும், சொற்களுள் தொங்கிக் கொண்டிருக்கும் வரிகளும், வரிகளுள் உறைந்திருக்கின்ற உணர்வுகளும் பேசமுயல்கின்றன. பேச முடியாத சொற்கள் கண்ணாடி முன் தெரியும் விம்பமாகி ஒரு கணத்திலேயே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இந்த நிலையிலேயே வாழ்வு பற்றிப் பாடுகிறார்.

“ஓசையெழாமல்

குழாய் வழி வழிந்து

வெளியேறிவிட்ட

தாங்கிக் தண்ணீராய்

வீணாகிப் போன வாழ்வு பற்றி

ஒரு கணம் துணுக்குறும் நெஞ்சு”

(மூன்று பொம்மைகள்)

வாழ்வு காலத்தோடு கரைந்து போகின்றது. அதுவே கருணையற்ற காலமாக எம்முன் விரிந்து கிடக்கிறது. இந்தக் காலங்களால் மனித வாழ்வு அலைக்கழிக்கப்படுகின்றது. என்றாலும் வாழவேண்டும் என்ற ஆசை, செடிகளின் வேரில் படிந்திருக்கும் ஈரம்போல் நெஞ்சில் கசிகிறது.

மெளனமாக நடந்து சந்தைக்குச் செல்லும்போது ‘அப்பா எனக்கு சொக்காவும்’ என்ற குழந்தையின் குரலும், நெஞ்சின் வலி பாரமாய்க் கனக்க மருந்தாய் தடவுண்ட தாயின் வார்த்தைகளும், பிரிந்து போன நட்பும் உறவும் மீண்டும் கைகோர்த்து மீள வருகின்ற போது வாழவேண்டும் என்ற ஆசை மனமூலையி;ல் ஓர் ஒளிப்பொட்டாக உள்ளிறங்குகின்றன. அழைப்பு, சிறகடிப்பு, பிறப்பு, தரிசனம் 1, கனவு ஆகிய கவிதைகளில் இந்தப் பண்பைக் கண்டு கொள்ளலாம்.

அரிதாரம் பூசி மெழுகப்பட்ட மனிதர்களின் பொய்முகங்கள் பற்றியும்> அவர்கள் அணிந்து கொள்கின்ற கிரீடங்கள் பற்றியும்> முகம் கொடுப்பதா முதுகு காட்டுவதா என்ற வினாக்களோடு மனிதர்களின் இரக்கமின்மையினையும் புறக்கணிப்பையும், தருணம் பார்த்துக் கழுத்தறுக்கும் நிலையினையும் பல கவிதைகளில் தோலுரித்துக் காட்டுகின்றார்.

அதனாற்தான் இயற்கை கூட ஈரமும் மழையும் கண்டாலே துளிர்விட நினைக்கின்ற கணங்களிலே இந்த மனித மனங்கள் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று கேட்கிறார்.

“ஈரமும் மண்ணும் கண்டாலே

வெட்டுத் துண்டமாய்க் கிடக்கும்

பூஞ்செடியின் சிறுகம்பு

வேர்விட நாள் பார்க்கிறது

அறிவு சுமந்த எமது

மனித இதயங்கள் மட்டும்

ஏன் இப்படி?”

(ஏன்)

மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் முடிவிலியாய்த் தொடர்கின்ற தொடரிசை போல் பல கவிதைகளில் தொடர்வதைக் கண்டு கொள்ளலாம். அவற்றுள் முக்கியமானது: பல அர்த்தத் தளத்தில் பயணிப்பது. விடுதலையாகி, அர்த்தம், ஒரு புழுக்கூட்டின் கதை, நெடியோடு வீசும் காற்று ஆகிய கவிதைகளை ஆதாரமாகக் காட்டலாம்.

‘இருள்’ ஒரு படிமமாகவே பல கவிதைகளில் தொடர்வதைக் காணலாம். இருள்: கவிதைகளின் பாடுபொருளாக அமைகின்ற அதேவேளையில் மக்களைத் தொடர்ச்சியாக வாட்டும் அவலத்திற்கும் அதிகாரத்திற்கும் குறியீடாகவும் வருகின்றது.

“கோரப்பற்கள் துருத்திய வாயொடு

குதித்தாடத் தொடங்கியது இருள்”

(கூத்து)

இருள் எல்லோரையும் பயம்கொள்ள வைக்கிறது. பகல் குறுகி விடுகிறது. இருளும் பேய்க்காற்றும் கைகோர்த்துத் தம் ஊழிக் கூத்தை நிறைவு செய்து வெளியேறுகின்றன. அடுத்தநாள் காலைப்பொழுது மிக அமைதியாக விடிகின்றது.

“நோயொடு புலர்ந்த காலையில்

தெருக்களும் நிலங்களும்

கழுவப்பட்டிருந்தன

சுவர்கள் புது வர்ணம் தீட்டப்பட்டிருந்தன

குளித்துப் புத்தாடை அணிந்து

போய்க் கொண்டிருந்தோரின்

கவனத்திற்குத் தப்பிய கால்விரல்

இறைகளுக்குள்

உலர்ந்து போயிருந்தது

இரத்தம்”

(கூத்து)

ஒரு வழிப்போக்கன்போல் காற்று யாரையும் கேட்காமல் யன்னல் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டுப் போகிறது. நீண்ட பகல் ஒரு குட்டிநாய் போல் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஒதுங்கிக் கொள்கின்றது. இவையெல்லாம் சத்தியபாலனின் கவிதைகளை முழுமையாகத் தரிசிக்கும்போது எமக்குள் வந்து சேரும் நுண்ணிய அனுபவங்கள்.

‘அர்த்தம்’ என்ற கவிதை அதிகாரத்தை இயல்பாகவே பேசும். இங்கு மொழியின் செதுக்கலை மிகக் கூர்மையாக அவதானிக்கலாம்.

“சென்ற திசையிலேயே

திகைத்தலைந்தன சில

வில்லங்கமாய்ப் பிடித்து

அமர்த்தப்பட்டன சில

தவறான இடத்தில்

அவமதிக்கப்பட்டு

முகஞ்சிவந்து திரும்பின சில

உரிய திசையின்

இடமோ

வெறுமையாய் எஞ்ச

எனது சொற்களின் கதி

இப்படியாயிற்று

நூற்றியோராவது தடவையும்”

(அர்த்தம்)

இந்த இறுக்கத்திற்கும் மத்தியில் சில கணங்கள் என்றாலும் கவிஞனால் உயிர்ப்பாய் இருக்க முடிகிறதென்றால் அது உறவுகளின் வாழ்விலேயே என்பார்.

வெளியே செல்லும் வழியில் நடைபெறும் சம்பவத்திற்குப் பின்னர் மிக வேகமாக வீடு வந்து சேரும் கவிமனத்தை இக்கவிதையில் காணலாம். வேலி, மதில், சுவர், கதவு இவற்றையெல்லாம் ஒரு காவலென எண்ணி வீட்டை நோக்கி விரைகின்றன கால்கள். கவிமனம் தன் வீடு தனக்கு பாதுகாப்புத் தருமென எண்ணுகிறது. இது ஒரு குருட்டு நம்பிக்கைதான். தன் மனத்தைத் தானே தேற்ற நினைப்பது போன்றது. காற்றும் இருளும் கால்முளைத்து நடந்து வந்து கதவு யன்னல்களை வேகவேகமாக மூடிவிட்டுப் போக இருளில் முக்காடு போட்டு மூடிக்கொண்டிருக்கும் குருட்டு மனம் வீட்டை எப்படிக் காவலென எண்ண முடியும்? இவையெல்லாம் சத்தியபாலன் கவிதைகளின் மெளனங்களுக்கான விடைகளாக இருக்க முடியும்.

மனிதனின் அகமும் புறமும் இணைந்து அடங்கிய வாழ்வினைக் கவிதைகள் பேசுகின்றன. தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் அதிகமெனினும் அவை கவித்துவத்தில் குறைவானவையெனக் கூறமுடியாது. சத்தியபாலன் அகத்தைப் பாடினாலும் அவர் அதற்குத் தேர்ந்து கொள்ளும் மொழியில் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றார்.

தட்டையானதும் வெளிப்படையானதும் நீர்த்துப் போனதுமான சொற்களுடன் கூடியவையே கவிதைகள் என்ற தவறான கருத்து; சத்தியபாலன் போன்றோரின் கவிதைகள் புரியவில்லை என்ற ஆபத்தையும் விதைத்து விட்டுச் செல்லலாம். அதற்குப் படைப்பாளியைக் குற்றம் சுமத்த முடியாது.

இங்கு சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது. உணர்வுக்கூடாகவே கவிதைகள் தமக்குரிய வெளியைத் தேடுகின்றன. மண்ணிலிருந்து கிளம்பி பிரபஞ்ச வெளியைத் தேடியபடியிருக்கின்றன. கண்ணாடி முன்னால் நொறுங்கிப் போன விம்பமாய், கழிந்து போன காலங்களை ஈடுசெய்வதற்கு முனையும் எத்தனங்களாய் கவிஞனின் மனம் அந்த வெளிகளில் சஞ்சாpக்கிறது.

நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், இரண்டு பேர், மூன்று பொம்மைகள், அர்த்தம், கூத்து, காவல், கனவு, ஏன் இதுபோன்ற பல கவிதைகளைக் கவித்துவமும் உணர்வும் பொதிந்த வரிகளுக்கு உதாரணமாகக் காட்டலாம்.

பொய்யும் போலித்தனமும் துதிபாடும் மரபும் மிக மலிந்து போயுள்ள தற்கால ஈழத்து இலக்கியச் சூழலில்; எமது காலங்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்து கொள்வதற்குரிய ஒரு எத்தனமாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ்க் கவிதைகளின் வெளியை நோக்கி சத்தியபாலனின் கவிதைகளும் பயணிக்கும் என்று கருதலாம்.

நன்றி:- ஜீவநதி, இதழ் 13, ஆடி - ஆவணி 2009

Tuesday, May 5, 2009

தாட்சாயணியின் சிறுகதைகளில் பெண் சித்திரிப்பு









ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்ட ஓர் ஆரம்ப வாசிப்பு

----------சு. குணேஸ்வரன்

தாட்சாயணி 90 களில் இருந்து எழுதி வருகின்றார். இவரின் ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்டு பெண் பற்றிய சித்திரிப்பினை இக்கட்டுரை நோக்க முயல்கின்றது.

இரண்டு தொகுப்புகளிலும் 24 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. எனினும் நுண்மையாக நோக்கும் பொருட்டு பெண் பற்றிய கதைகள் மாத்திரம் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றன.

தாட்சாயணியின் கதைகளானது 90 களின் பின்னர் மக்கள் எதிர்கொண்ட போர்க்கால வாழ்வின் நெருக்கடிகளைப் பதிவு செய்கின்றன. போரின் ஊடான மக்களின் வாழ்வு அவர்களுக்கு உடல் உளரீதியாக எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதனை இவரின் அதிகமான சிறுகதைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இதற்கூடாகவே பெண் என்ற நிலையில்; இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் தாட்சாயணி மிக நுண்மையாகப் பதிவு செய்துள்ளார்.

ஒரு மரணமும் சில மனிதர்களும் தொகுப்பிலுள்ள ‘சோதனைகள்> மழை> பெண்> தீ விளிம்பு’ ஆகிய நான்கு கதைகளும் இளவேனில் மீண்டும் வரும் தொகுப்பிலுள்ள ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> அவளும் இவளும்> சலனம்> கண்ணீர்ப்பூக்கள்> மழையில் உதிர்ந்த மலர்> அவள் கண்ணகி இல்லை> இளவேனில் மீண்டும் வரும்’ ஆகிய எட்டுக் கதைகளும் இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பெண்களை தனது கதைகளின் பாத்திரங்களாக தாட்சாயணி நிறுத்துகின்றார். பத்து வயதுச் சிறுமி முதல் பாட்டி வரை பெண்கள் என்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளைப் பேசும் பாத்திரங்களாக அவர்கள் உலாவருகின்றனர்.

தாட்சாயணி தன் கதைகளில் முன்நிறுத்தும் பெண்களின் ஒடுக்கு முறையாளர்களாக மூன்று பிரிவினரை இனங்காண முடிகின்றது.

1. குடும்பம் மற்றும் சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள்

2. அதிகாரமும் ஆதிக்க வலுவுமுள்ள ஆண்கள்

3. சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள் தவிர்ந்த ஏனையவர்கள்

இங்கு முதலாவதாகக் குறிப்பிட்ட ஆண்களில் விடலைப் பையன்> பல்கலைக்கழக மாணவர்கள்> வாலிபன்> தகப்பன் நிலையில் உள்ளோர்> அலுவலக வேலை செய்யும் ஆண்கள்> காதலனாக உருவெடுக்கும் ஆண்கள்> மற்றும் முதிய நிலையில் உள்ள ஆண்கள் (அவள் கண்ணகி இல்லை என்ற சிறுகதையில் கலியாணப் புறோக்கராக வருபவரும் ஆணாதிக்கப் பிரதிநிதியாகவே சித்தாpக்கப்படுகி;றார்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.


இரண்டாவது நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரமும் ஆதிக்க வலுவும் உள்ள ஆண்களைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு முதல் உதாரணமாக வரக்கூடியவர்கள் ஆயுதம் தாங்கிய அதிகார வலுவுள்ளவர்கள்> மற்றும் குடும்பத்தில் அதிகார வலுவுள்ள ஆண்கள்> பணம் படைத்தோர் (மழையில் உதிர்ந்த மலர் கதையில் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தும் கடைக்காரன் பணக்காரனாகச் சித்தாpக்கப்படல்)

மூன்றாவது நிலையில் உள்ளவர்களுக்கு எமது சமூக அமைப்பிலுள்ள ஆண்கள் தவிர்ந்த மற்றெல்லோரையும் குறிப்பிடலாம். இவர்களில் அம்மா ஸ்தானத்திலுள்ள பெண்கள்> மாமிமார்கள்> சகோதாpகள்> முக்கியமானவர்கள்.

தாட்சாயணி முன்நிறுத்தும் பெண்கள் எவ்வாறானவர்கள் என்று நோக்கும்போது பெண்ணின் பல நிலையில் உள்ளவர்களும் இவரது கதைகளில் சிக்கலை எதிர்கொள்பவர்களாக வருகின்றனர்.

1. ஸ்கொலசிப் எடுக்கவிருக்கும் பத்து வயதுச் சிறுமி (மழையில் உதிர்ந்த மலர்)

2. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> தீ விளிம்பு)

3. தொழில் புரியும் இளம் பெண்கள் (அவளும் இவளும்> கண்ணீர்ப்பூக்கள்> சலனம்> பிஞ்சுமனம்)

4. காதலித்;து ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> சலனம்> இளவேனில் மீண்டும் வரும்)

5. திருமண வாழ்வில் உள்ள குடும்பப் பெண் (அவளும் இவளும்)

6. கணவனை இழந்த பெண்கள் (கண்ணீர்ப் பூக்கள்> வெளியில் வாழ்தல்)

7. வயது முதிர்ந்த தாய் (மழை)

இந்தப் பெண்களின் பிரச்சனைகளைப் பின்வரும் வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.

காதலித்து ஏமாற்றப்பட்ட பெண்கள்> காதலித்து விட்டுச் சீதனத்தைக் காரணமாகக் காட்டி வேறு பெண்ணைத் திருமணம் செய்யும் ஆண்களால் கைவிடப்பட்ட பெண்கள்> பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு மனம் பேதலித்த பெண்> ஆணால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி> ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்கள்> குடும்ப வாழ்வில் கணவனை இழந்த பெண்> குடும்ப வாழ்வில் கணவனைத் தொலைத்து விட்டுச் சமூகத்தின் வசைக்கு ஆளான பெண்> பிரச்சனையால் கணவனை இழந்த (காணாமற்போன) பெண்> விரும்பியவனை மணம் முடித்தும் கூட ஆணின் வசைக்கு ஆட்படும் பெண்> என்றவாறு இக்கதைகளில் வரும் பெண்களின் பிரச்சனைகளை வகுத்துக் கொள்ள முடியும்.

வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் பற்றிய கதைகளில் ‘மழையில் உதிர்ந்த மலர்;’ ‘மழை’ ஆகிய இரண்டு கதைகளை எடுத்துக் காட்டலாம்.

மழையில் உதிர்ந்த மலர் என்ற சிறுகதையில் குடிகாரத் தகப்பனையும் நான்கு சகோதரிகளையும் நோய்வாய்ப்பட்ட தாயையையும் கொண்ட குடும்பத்திலிருந்து பத்து வயதுச் சிறுமியின் பாத்திரத்தை தாட்சாயணி எம்முன் நிறுத்துகிறார்.

தகப்பன் எந்தச் சிந்தனையும் இல்லாது குடித்துவிட்டுத் தாயை அடித்து உதைத்து வரும் குடும்பத்தில் இந்தச் சிறுமி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றாள். ஒருமுறை தாய்க்கு ஏற்பட்ட உடற்சுகயீனம் காரணமாக 5 ரூபா காசுடன் பனடோல் வாங்குவதற்கு மழையில் நனைந்து கொண்டு கடைக்குச் செல்லும் சிறுமி சந்தர்ப்பவசத்தால் அந்தக் கடைக்காரனால் ஏமாற்றப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். மயக்கம் தெளிந்த சிறுமிக்கு தனக்கு ஏதோ நடந்து விட்டது தெரிகின்றது.

இரண்டும் கெட்டான் வயதில் ஒன்றும் புரியாமல் தன்னிடம் எதையோ இழந்துவிட்ட அந்தச் சிறுமியை அவள் அலங்கோலமாய்க் கட்டிலில் கிடக்கும் கோலத்தை அவன் சிகரட் குடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

சுpகரட் மணம் அவள் நாசியை நன்றாகவே தாக்கிற்று தடிமனாயிருந்த போதும் கூட கைகள் தன்பாட்டில் உரசிக் கொள்ளக் கையில் இறுக்கிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய் குற்றி கீழே விழுந்தது அந்தச் சத்தத்தில் திடீரென்று உருவப்பட்ட அவள் சட்டென்று நிமிர்ந்தாள். அவன் பார்வைக்குள் விழுந்தாள். ஒன்றும் பேசாமல் எழுந்தாள் நடந்ததெல்லாம் ஏதோ தப்பான விஷயங்கள் தானென்று விளங்கின.

து}ரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார் வெறியில் தள்ளாடும் நடை ‘இந்த அப்பா செத்துப் போனால் தான் என்ன?’ குரூரமான ஒரு ஆசை.. ……இன்னும் எத்தனை புயல்களுக்கிடையில் அவள் பூவாய் உதிர்வாளோ?

இந்தக் கதையைப் போல் சமகாலத்தில் எழுதி வரும் நிருபா> சுமதி ரூபன் ஆகியோரின் சிறுகதைகளையும் இதற்கு இணையாகக் காட்ட முடியும்.

இதேபோல் ஆதிக்கக்கரங்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த நிலையில் உள்ள பெண்ணை ‘மழை’ என்ற இன்னொரு சிறுகதையில் ஆசிரியர் சித்திரிக்கிறார்.

‘மழை’ அடிப்படையில் ஒரு குறியீட்டுக் கதை. செம்மையான மொழிநடை இக்கதைக்கு வலுவாக உள்ளது. ஒரு பெண் ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சாகும் நிலையில் விட்டுச் செல்லப்படுகின்றாள். வயது முதிர்ந்த பேத்தியின் பாதுகாப்புடன் உயிர்மீள்கிறாள். காலஓட்டத்தில் மனம் பேதலித்த நிலையில் அவள் பஸ் ஸ்ராண்டுகளில் அலைவதாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

…பலாமரங்களுக்கிடையே அவளை விழுத்தி சதிராடிற்று மழை. பெரிய பெரிய கரும்பூத மேகங்கள் திரள்களாக மோதி அவளை மிதித்துச் சிதைத்தன. இவள் கைகளைக் கட்டிற்று மழை…இவள் குரல்வளை இறுக்கிற்று மழை… இவள் மானம் பறித்துச் கெக்கலித்தது மழை..

‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ அடிநெஞ்சிலிருந்து அழுகை தெறிக்கும் குரலில் ஒரு பதைபதைப்பு.

இங்கு மழை கதையில் வரும் ‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ என்ற ஆச்சியின் இந்த உருக்கமாக குரல் படிப்போரை மனம் நெகிழச் செய்யும்.

உண்மையில் இந்தக் கதையைப் படிப்பவர்களுக்கு தாட்சாயணி காட்டியதுபோல் எத்தனையோ பெண்களை உதாரணம் காட்டக்கூடியதாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமாக> நாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட காலங்கள் குற்றவாளியாக எங்கள் முன் நிற்பதனை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.

இந்தக் காலங்கள் பெண்களைப் பைத்தியமாக்கி விட்டிருக்கின்றன. ஆதிக்கக் கரங்களின் கைகள் எங்கெங்கு பெண்களின் மேல் விழுகின்றதோ அங்கெல்லாம் பெண் எதிர்க்க முடியாமல் பைத்தியமாகின்றாள். இதேபோல் ஒரு புல்லாங்குழல் ஊமையானது என்ற மற்றும் ஒரு சிறுகதையிலும் மனம் பேதலித்து வெறும் ஜடமாகத் திரியும் பெண்ணை தாட்சாயணி சித்திரிக்கிறார்.

ஒரு மரணமும் சில மனிதர்களும் என்ற தொகுப்பிலேயே வித்தியாசமான கதை சொல்லும் அனுபவமாக நான் ‘மழை’ யைக் கருதுகிறேன். மழை என்ற குறியீடு கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை வளர்த்துச் செல்லப்பட்டதா என்பது இக்கதையைப் பொறுத்தவரையில் ஒரு மயக்கம் உள்ளது. மற்றும்படி தாட்சாயணி தன் கதைசொல்லும் நடையில் மேலுமொரு உத்தியை இங்கு முயன்று பார்த்துள்ளார் என்றே கூறல் வேண்டும். இந்த முறை நல்லபடியாக எதிர்காலத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நவீன கதை சொல்லல் உத்தியில் கவிதை போலவே மொழியைக் கையாண்டிருக்கிறார். இக்கதையின் பலமாகக்கூட மொழியே மேலோங்கி நிற்கிறது.

கதைக்கருவைப் பொறுத்தவரை மழை என்ற கதைக்கு மிக அருகில் வரக்கூடிய இன்னொரு கதையே ‘தீ விளிம்பு’ ஆகும். இங்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி வீட்டுக்குத் திரும்புகிறாள் இடையில் காணாமற்போகிறாள்.

சமூகத்தின் வசைக்கு ஆளாகி மனம் பேதலித்த பெண்ணையும் அந்தச் சுவடுகளோடு உலாவரும் பெண்களையும் இவரின் கதைகளின் இன்னொரு அம்சமாகச் சுட்ட முடியும். ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது’ என்ற கதையானது பலவிதமான கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் ராதா என்ற பெண்ணைச் சித்திரிக்கிறது.

இயல்பிலேயே அமைதியும் பயந்த சுபாவமும் உள்ள ராதா மருத்துவத்துறைக்குத் தெரிவாகிப் பல்கலைக்கழகம் நுழைகின்றாள் அங்கு சில மாணவர்களால் பகிடிவதைக்கு ஆளாகி பலவித மன உழைச்சல்களை எதிர்கொள்கிறாள். ராதா சிறுமியாக இருக்கும்போது தாய் இறந்துவிட தகப்பன் இரண்டாந் தாரமாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ராதா தன் ஊரிலேயே கண்ணன் என்ற முறை மச்சானைக் காதலித்த நிலையில் பல்கலைக்கழகம் செல்கிறாள். இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படியோ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்குக் கிடைத்துவிட இவற்றைச் சாட்டாக வைத்து பலவித கதைகளை இம்மாணவர்கள் இவளிடம் பகிடிவதைக் காலத்தில் மனம் நோகுமாறு கேட்பது இவளைப் பாதிக்கின்றது.

‘அப்பனுக்கேத்த மகள்தானை> அப்பன் ரெண்டாவதா ஒண்டைக் கட்டிப்போட்டான். மகள் இன்னும் எத்தனை பேரை..’

‘அதுசரி அப்பன் தான் போய் பொம்பிளை பாத்தவனோ…இல்லாட்டி நீயும் கூடப்போய்ப் பார்த்து நீதான் செய்து வைச்சனியோ?’

இதேபோல் மேலும் பல தாக்கங்களினூடாக இவற்றை நினைத்து நினைத்து மனம் பேதலித்துப் போகிறாள். இறுதியில் கண்ணனின் தாய் தன் மகனை லண்டனில் வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். ராதா அப்படியே ஜடமாக உலாவருகிறாள்.

இச்சிறுகதையில் ராதா மீதான பல்கலைக்கழக மாணவர்களின் கேலிப்பேச்சு> இவள் பற்றிய சமூகத்தின் பார்வை> இவளைக் காதலித்தவன் ஏற்றுக்கொள்ளாத ஏமாற்றம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றமையை காணமுடியும். இவையெல்லாம் சமகால மனித மனங்களின் நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

‘சோதனைகள்’ என்ற கதை ஒரு பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத அசெளகரியங்களைக் கூறுகின்றது. சோதனைச் சாவடியில் பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத துன்பங்கள் என்று தான் கூறவேண்டும். ஒருபுறம் ஆண்களால் படுகின்ற வேதனைகள் போதாதென்று மறுபுறம் அம்பலத்தில் நின்று கொண்டு எதிர்த்துப் பேசமுடியாமல் எதுவும் கூறமுடியாத நிலை என்று வருகின்றபோது அந்தப்பெண் செத்துவிடலாம் என்று கூட நினைக்கிறாள்.

‘அவள் கண்ணகி இல்லை’ என்ற கதை வெளிநாட்டு மாப்பிள்ளையை மணம் முடித்துச் செல்லும் பெண்ணின் நிலைபற்றிக் கூறுகின்றது. பெண்பிள்ளை என்றாலே எங்காவது கட்டிக் கொடுத்துவிட்டால் தங்கள் சுமை குறைந்து விடும் என்று எண்ணும் பெற்றோர் மத்தியிலிருந்து வருகின்ற இக்கதையில், செவ்வந்தி A/L எடுத்தவுடன் லண்டன் மாப்பிளைக்குக் கலியாணம் செய்து கொடுக்கப்படுகி;றாள். மாப்பிள்ளை வந்து தடல்புடலாக கலியாணம் செய்து கூட்டிப் போகின்றான்.

இவளுக்கு இப்போ அவன்தான் உலகம். அவன்தான் தெரிந்த ஒருவன் என்றாகிவிடுகிறது. லண்டனுக்குச் சென்றதும் அவனுக்கு ஒரு வெள்ளைக்கார மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உடனேயே செவ்வந்திக்குத் தெரியவருகிறது. அங்கு செவ்வந்தியை வெள்ளைக்கார மனைவிக்குத் தமது வேலைக்காரி என்று அவன் கூறிவைக்கின்றான்.

She is sevvanthy, our servent. Cylon girl. உடை மாற்றிவிட்டு வந்தவன் அவளுடைய இறுகிய மெளனம் கண்களைக் குத்த வேறுபுறம் பார்த்தபடி சொன்னான். ‘I am sorry sevvanthy ’ அம்மா அப்பாவைக்கு நான் ஜென்னியைச் செய்தது தெரியாது. அவையளுக்காகத்தான் உம்மைச் செய்தனான்…’

என்று இவளைக் கல்யாணம் செய்ததற்குக் ஒரு குருட்டுக் காரணம் கற்பிக்கின்றான். இந்நிலை எமது சமூகத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பல திருமணங்கள் இவ்வாறு நடைபெற்றும் உள்ளன. இதனைத் தாட்சாயணி தன் கதைகளுக்குக் கருவாகக் கொள்வதிலிருந்து எமது சமூகத்தில் பெண்கள் என்றாலே சுமையாகக் கருதுகின்ற மாயையில் என்ன நடந்தாலும் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு விடுவதனை உணரக் கூடியதாக உள்ளது. இதுவே எமது சமூகத்தின் துயரமாகிப் போனமையும் ஏற்றுக் கொள்ளமுடியாத உண்மையாகும்.

இந்தக் கதையுடன் இணைத்து வேறும் சில கதைகளைக் கருத்திற் கொள்ள முடியும். அவற்றை காதல்> திருமணம்> மற்றும் ஏமாற்றமான குடும்ப வாழ்வு சார்ந்தன என்ற பகுப்பினுள் அடக்க முடியும்.

‘சலனம்’ என்ற சிறுகதையில் வரும் பாலினி சித்திரன் என்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பின்னர் திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் தன் தங்கைமாருக்காக வாழும் நிலையை தாட்சாயணி எடுத்துக் காட்டுகின்றார். சித்திரன் பெற்றோருக்குக் கட்டுப்பட்டு பாலினிக்கு எதுவும் சொல்லாமற் கொள்ளாமல் வெளிநாடு சென்று விடுகின்றான்.

பெண்கள் என்றாலே ஆண்களை வளைத்துப் போடுபவர்கள் என்ற எதிர்பார்ப்பு சமூகச்சார்ந்த ஒரு கருத்தாக இருப்பதனை அவனின் பெற்றோர் மூலம் அறிகின்றாள். தான் விரும்பிய வாழ்வு தனக்குக் கிடைக்கவில்லை. இனியென்ன என்ற எண்ணத்துடன் வாழ்கிறாள்.

‘அவளும் இவளும்’ என்ற சிறுகதையில் சித்திரா நீலவேணி என்ற இரண்டு பெண்கள் வருகின்றனர். சித்ரா தன்னில் காதல் கொண்டவனின் காதலைத் (சாதிப்பிரச்சனை காரணமாக) தன் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்காக விருப்பம் இருந்தும் நிராகரிக்கின்றாள். ஆசிரியத் தொழில் கிடைத்தது. வேறு திருமணம் பற்றியே சிந்திக்க அவளுக்கு மனம் இடங்கொடுக்காததால் அப்படியே வாழ முடிவு செய்கிறாள்.

அதேநேரம் சித்திராவின் தோழியாகிய நீலவேணி பெற்றோருக்குக் கட்டுப்படாமல் தான் விரும்பியவனுடன் ஓடிவந்து திருமணம் செய்கிறாள். கால ஓட்டத்தில் நீலவேணியின் பெற்றோர் வந்து போனாலும் பெரிய ஒட்டுறவைக் காட்டிக்கொள்ளவில்லை. இக்கதையில் எல்லோரையும் உதறிவிட்டுத் தன் இஷ்டம் போல் வந்தபடியால் சமூகத்திற்கு வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஓர்மம் நீலவேணியிடம் இருக்கின்;றது. ஆனால் குடும்பத்தில் சந்தோசமற்ற வாழ்வே அவளுக்குக் கிடைக்கிறது. இதனை சித்ராவுக்குக்கூட சொல்லாமல் வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறுகிறாள்.

இந்த இரண்டு பெண்களின் உணர்வுகளையும் தாட்சாயணி எதிரும் புதிருமாக இக்கதையில் எடுத்துக் காட்டுகிறார்.

‘இளவேனில் மீண்டும் வரும்’ என்ற சிறுகதையில் வெண்ணிலா என்ற பெண்@ சங்கர் என்பவனைக் காதலிக்கின்றாள். திருமணம் என்று வரும்போது சங்கர் தன் பெற்றோர் தன்னைப் படிப்பித்த செலவு மற்றும் சீதனம் வேண்டும் என்ற காரணங்களைக் காட்டி வெண்ணிலாவை ஏமாற்றிவிட்டுப் பெற்றோர் பார்த்து வைத்த வேறு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கிறான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய நரேந்திரன் என்பவன் (இவன் சங்கரின் நண்பன்) இவற்றை அறிகிறான். வெண்ணிலா ‘தன்னுடைய காதல் உண்மைக்காதல் எப்படி நான் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முடியும்’ என்ற மனப்போராட்டத்துடன் வாழ்கிறாள். ஆனால் நரேந்திரனின் கருத்துக்கள் வெண்ணிலாவைப் புரிந்து கொண்ட தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் வெண்ணிலா நரேந்திரனைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவிக்கிறாள்.

இவ்வாறாக> அவள் கண்ணகி இல்லை> சலனம்> அவளும் இவளும்> இளவேனில் மீண்டும் வரும் ஆகிய நான்கு கதைகளையும் திருமணம்> மற்றும் காதல் சார்ந்த வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.

தாட்சாயணியின் இந்தக் கதைகளின் பலமாக நான் கருதுவது சமகால ஈழத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் யதார்த்தமாகப் பதிவு பெறுவதைத்தான். இந்நிலை, கதைகள் பற்றிய நம்பகத் தன்மையை சாதாரண வாசிப்புள்ள வாசகர் மட்டத்திற்கும் எடுத்துச் செல்கின்றது. இது மிக முக்கியமானது.

கதை சொல்லலில் இலாவகமான ஒரு நடையை தாட்சாயணி கையாள்கிறார். கதைகள் வாசகரை கதையோடு ஒன்றச் செய்கின்றன. கதையைப் படிக்கும் போது இது நாம் கேள்விப் பட்ட கதையாக இருக்கிறதே என நினைத்து கதிரையின் விளிம்பில் இருந்து படித்து விட முடிகிறது. அதனுள்ளும் கதை நகர்வில் காட்டுகின்ற ஆர்வம் அதிகமும் பாத்திர உரையாடலுக்கு ஊடாகவே வெளிப்படுகின்றது. தாட்சாயணியின் கதைகளில் ஒப்பீட்டளவில் இது அதிகம். (இதில் வேறுபட்ட கருத்தும் உள்ளது) அவ்வாறு வெளிப்படும் போது கதையோட்டத்துடன் மிக நெருக்கமாக வர முடிவதும் இந்தக் கதைகளின் சிறப்பு எனலாம்.

அடுத்து பெண்கள் பற்றிய இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது என்பதனை பல கதைகளில் வெளிப்படுத்தி விடுகின்றார். இடப்பெயர்வின் காரணமாக கணவன் வன்னியில் குண்டடிபட்டுத் தனித்துப் போக அவனைத் தேடித் தனது உறவினர் ஒருவருடன் செல்லும் பெண்ணை (வெளியில் வாழ்தல்) அவனுடன் ஓடிப்போய்விட்டதாக கதைகட்டி அவளின் குழந்தையின் காதில் விழும்படி கதைக்கும் சனங்கள் பற்றிய சித்திரிப்பு இவற்றுக்கு இன்னோர் எடுத்துக்காட்டாகும். இதேபோல் பெண் பற்றிய கதைகள் மட்டுமல்லாமல் இவரின் வேறு கதைகளிலும் இந்தப் பண்பினைக் காணமுடியும்.

இந்தக் கதைகளில் எல்லாம் பெண்களின் மீது தமது அதிகாரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகிப்பவர்களாகவே ஆண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அதே நேரம் பெண் அந்த அடக்குமுறையினுள் இருந்து வெளியே வரமுடியாதவளாக> அதிகமும் மற்றவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்பவளாக இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றார்.

ஆனால் எல்லா நிலைகளிலும் பெண் அவ்வாறு அடங்கி;ப் போகின்றவளாக இல்லாமல் தன்னைப் பற்றிச் சிந்திப்பவளாகவும் இருக்கின்றாள். திருமணம்தான் என் வாழ்வைச் சமப்படுத்துமானால் எனக்குத் திருமணமே தேவையில்லை என வாழ்கின்ற பெண்ணை

‘உன் வரைக்கும் ஒரு கல்யாணம் என் உள்ளத்தை சமப்படுத்தி விடும் என்று யோசிக்கிறாயோ?’

என்று கேட்பதாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அதே நேரம் சூழலைப் புரிந்து கொண்டு மிகப் புத்திசாலித்தனமாகச் செயற்படும் பெண்களையும் நிலைநிறுத்துகின்றார். அவள் கண்ணகி இல்லை என்ற கதையில் வரும் பெண் பாத்;திரம் அற்புதமான சித்திரிப்பு.

இவ்வாறாக தாட்சாயணி பெண் சார்ந்த கதைகளில் பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற அடக்குமுறைகளையும் துயரங்களையும் யதார்த்தமாகச் சித்திரிக்கின்றார். இவற்றை ஒரு பெண் படைப்பாளியாலேயே பதிவு செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதைகள் ஆதாரமாகத் திகழ்கின்றன.

90 களின் பின்னரான ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான ஒரு பெண் படைப்பாளியை அடையாளங் காட்டுவனவாகவே இந்த இரண்டு தொகுப்புகளும் அமைந்துள்ளன. புதிய களங்களையும் புதிய கதைகளையும் புதிய உத்திகளையும் நோக்கி தாட்சாயணி தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். அப்போது வடிவச் செழுமையும் பெண்களின் உணர்வுநிலைகளை மேலும் ஆழமாகப் பதிவுசெய்யும் பெண்மொழியுடன் கூடிய கதைகளும் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அந்த எல்லைகளை நோக்கி தாட்சாயணி நகரும் போது எங்கள் தமிழ் அனுபவங்கள் உலகப் படைப்புகளுக்குச் சென்று சேரும் ஒரு வாய்ப்பையும் வழங்கக்கூடும்.

நன்றி :- ஜீவநதி இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்> வைகாசி ஆனி 2009> பதிவுகள் இணைய இதழ்.

Monday, April 20, 2009

ஆயிஷா நூல் அறிமுகம்















-----------சு. குணேஸ்வரன்

ஆயிஷா என்ற குறுநாவல் அண்மையில் வெளிவந்துள்ளது. தமிழ் நாட்;டைச் சேர்ந்த இரா. நடராசன் எழுதி 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை அதன் தேவை கருதி அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாக கொண்டு வந்துள்ளனர்.

ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவுதான். என்றாலும்@ மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது.

எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.

இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இருந்து பாடசாலை> மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை மாணவர்களின் சொந்தக் கருத்துக்களையோ> தேடல்களையோ> வரையறுத்து தேய்ந்துபோன ஒலித்தட்டுப்போல் ஆசிரியர் கூறுவதையே மீண்டும் மீண்டும் கேட்கும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாணவர்களிடம் இருந்து சீரிய சிந்தனைகளோ>அல்லது ஆயிஷா கேட்பதுபோல்@

“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்? ”

என்று கேட்கத் து}ண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும்> அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.

ஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்!

நமது ஈழநாடு 25-10-2004

Saturday, March 28, 2009

புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு



சு.குணேஸ்வரன்..................................

புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென்படும். அந்த வகையிலே இக்கட்டுரையானது புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது.

1983 இன் பின்னர் இலங்கையில் உத்வேகம் பெற்ற இனவுணர்வுச் சூழல் பெருமளவான ஈழத் தமிழர்களை மேற்குலக நாடுகளை நோக்கிப் புலம்பெயர வைத்தது.

புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவங்களாகிய கவிதை சிறுகதை நாவல் ஆகியவற்றையே முதன்மையாக கருத்திற் கொள்கின்றோம். அவற்றின் உள்ளடக்க ரீதியான பண்புகளைச் சுட்டும்போது ஒரு பொதுமைக்குள் நின்றுகொண்டே இதுவரை விவாதித்திருக்கின்றோம்.

ஈழத்து இலக்கியத்தின் போக்கினை மதிப்பிடும்போது எவ்வாறு பிரதேச அலகுகளை மனங்கொண்டு எமது மதிப்பீட்டினை முன்வைக்கிறோமோ அதேபோல் புலம்பெயர் இலக்கியத்தின் பிரதேச வேறுபாடுகளை மனங்கொண்டு புலம்பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கும்போது சில தெளிவீனங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படும் என்று கருதலாம்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மூன்று கண்டங்களிலும் (அவுஸ்திரேலியா,அமெரிக்கா,ஐரோப்பா) உள்ள நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் சூழலியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவை குறிக்கும் உள்ளடக்கத்தை மிக நுண்மையாக வகைப்படுத்தவும் முடியும்.

அவுஸ்திரேலியா தனியாகவும்,அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடா, அமெரிக்கா தனித்தனியாகவும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் நோக்க முடியும்.

புலம்பெயர் படைப்புலகின் உள்ளடக்கத்தினை தாயகநினைவு, அகதிநிலை, தொழிற்தள அநுபவம், புதிய பண்பாட்டுச் சூழல், நிறவாதம், இனவாதம், புவியியற்சூழல், வித்தியாசமான வாழ்வுலகு, அந்நியமயப்பாடு, அனைத்துலக நோக்கு, என பொதுமைப் பண்பிற்கூடாகச் சுட்டினாலும் இவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்று கருத முடியாது. சில நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் சில பண்புகள் மிக அதிகமாகவும் மற்றைய நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் இப்பண்புகள் மிகக் குறைவாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

உதாரணமாக இனவாதம் நிறவாதம் சார்ந்த பிரச்சனைகளை ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. அதேபோல் பிரான்ஸ் ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் மொழிசார்ந்து தமிழர்கள் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கும் இலண்டன் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இதுபோல்தான் புவியியல் சார்ந்த இயற்கை அமைப்பிலும் வேறுபாடு உண்டு.

இவற்றை தனித்தனியான நுண்ஆய்வின் மூலமே கண்டு கொள்ள முடியும். இதற்கு அமைவாக இக்கட்டுரையானது ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு புலம்பெயர் படைப்புலகில் காணப்படுகின்றது என்பதனை ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக எடுத்துக் காட்ட முயல்கின்றது.

முதலில் கவிதைகளில் நோக்குவோம்.

“பலா இலை மடித்துக் கோலி

ஈர்க்கில் துண்டை முறித்துச் செருகி

ஓடியல் மீன் கூழை வார்த்து

அம்மா அப்பா தம்பி ஆச்சி என

சுற்றமும் சூழ இருந்து

உறிஞ்சிக் குடித்த நாட்கள்”

என்று தன் உறவுகளுடன் சொந்த மண்ணில் இருந்து மகிழ்வாக உண்டு களித்த நாட்களை நினைவுகளாக மீட்டுப் பார்க்கின்றார் கவிஞர் செழியன். இங்கு எமது மண்ணுக்கேயுரிய உணவுப் பழக்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது.

தாயகத்தை விட்டுப் பிரிந்து புவியியற் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ முற்படும்போது, சொந்தநாட்டு மண்மீதான நினைவும் ஏக்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும். பனிநிறைந்த வீதிகளும் வானளாவிய கட்டடங்களும் நிறைந்த தேசத்திலே இயந்திர வாழ்வுடன் போராடி மூச்சுத் திணறி வாழும் வாழ்க்கையிலே கவிஞா;கள் தமது தேசத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றார்கள்

தாயக மண்ணின் இயற்கை அழகும் அதனோடு இயைந்த வாழ்வும் நினைவுகளை மீட்கின்றன. கிடுகுவேலி. பனைவடலி, கிணறு, வயல், வீடு, முற்றம், கோவில், எல்லாமே நினைவுகளாகின்றன. இதனாலேயே கவிஞர் செல்வம் ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

“சிறுகுருவி வீடு கட்டும்

தென்னோலை பாட்டிசைக்கும்

சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை

புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.

அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்

செம்மண் பாதையோரம்

ஓர் தோட்டமும்

கனவுப் பணம் தேட

கடல் கடந்தோம்

நானும் நாங்களும்

அகதித் தரையில்

முகமிழந்தோம்.”

என்று கட்டிடக் காடாகிப் போன அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டு ஊரின் நினைவினை மீட்டுப் பார்க்கின்றார். தாயக மண்ணுடனான உறவில் இருந்து பிரிந்து ஆண்டுகள் பலவாகிய பின்னரும் காலவெள்ளம் எதையெல்லாம் புரட்டிப் பார்க்கின்றது என்பதனை பின்வரும் கவிதை வரிகள் ஊடாக நோக்கலாம்.


“வித்து வெடித்து முளைத்து விட்ட மண்ணிலிருந்து

பிடுங்கி எறியப்பட்டு

ஆண்டுகள் பத்தாயிற்று

நான் புரண்ட செம்பாடு

வியர்வையில் குழைத்து எழுப்பிய வீடு

மூலைக் கன்று மா

முற்றத்து மல்லிகை

எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம்

ஊர் சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை

சூரன் நாய்

காலவெள்ளம் எதையெல்லாம்

புரட்டிச் செல்கிறது.”

என்று ‘பனிவயல்; உழவு’ தொகுப்பின் முன்னுரையில் கவிதை வரிகளாகவே எழுதுகின்றார் திருமாவளவன்.


இவ்வாறாக ஈழத்து மண்ணின் வாழ்வும் வளமும் தாயக நினைவு சார்ந்த கவிதைகளிலே பிரதேசச் செல்வாக்குடன் பதிவுபெறுவதனை கண்டு கொள்ளலாம்.

இதேபோல் புனைகதைகளில் ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனையும் நோக்கமுடியும்.

அ. இரவியின் ‘காலம் ஆகி வந்;த கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பில் யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு சிறுவனின் உளநிலையில் கூறப்படும் கதையூடாக கதைக்குரிய காலத்தையும், எம் மண்ணுடன் இரண்டறக்கலந்த வாழ்வையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

பிள்ளைப் பருவ நினைவுகளுடாக (child hood) பாடசாலைப் பருவ வாழ்க்கை, கோயிற் சம்பவங்கள், ஊர் நினைவுகள் (இதனுள் கோயிற்பண்பாடு, சமூகத்தொடர்பு, மரபு, நம்பிக்கை, கலை என்பன ஊடுபாவாக கதைகளில் உள்ளடங்கியுள்ளன) என எல்லாவற்றையும் சம்பவங்களாக அடுக்கிச் செல்கிறார். ஈழத்துப் படைப்பிலக்கியத்திலே இவ்வாறான பிள்ளைப் பருவ நினைவினூடாக, பிரதேசச் செல்வாக்குடன் கதை கூறியவர்கள் மிகக் குறைவென்றே கூறலாம்.

இதேபோல் அ. முத்துலிங்கத்தின் பல சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மணங்கமழ சித்தாpக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கத்திடம் புறவுலகம் சார்ந்த சித்தாpப்பு மிக நுண்மையாக இருந்தபோதும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் இரத்தமும் சதையுமான வாழ்வனுபவம் மிகக் குறைவு என்றே கூறலாம். ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, சக்கரவர்த்தி, பொ. கருணாகரமூர்த்தி ஆகியோர் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் முத்துலிங்கம் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் இடையில் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன.

முத்துலிங்கத்திடம் காணக்கூடிய பல விசேட அம்சங்களில் ஒன்றாக ஈழத்து அடுக்கமைவுகளைத் தீண்டாத கதைகூறும் பாணி மிக முக்கியமானது. முத்துலிங்கத்தின் மனக்கிடங்கின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பல கதைகளில் யாழ்ப்பாணத்து வாழ்வினோடு ஒட்டிய பிரதேசச் செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும். ‘தில்லையம்பல பிள்ளையார் கோயில், அம்மாவின் பாவாடை’ ஆகிய கதைகளை இவற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

‘அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போட்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறு கை வெளியே தொங்க சின்னமாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன் போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

‘காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழிவிட்டனர். மூட்டை சுமப்பவர்களும்> பாதசாரிகளும் வேலிக்கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்ற பின்னும்> பார்த்தபடி நி;ன்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளி;ன் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்துபோல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

இன்னோர் புறமாக, முத்துலிங்கம் தன் உலகளாவிய பயண அநுபவத்தின் மூலம் தமிழுக்குத் தரும் புதிய கதைகள் கவனத்திற் கொள்ளத்தக்கவை. அவை அந்தந்த நாட்டுப் பிரதேச அனுபவங்களாக விரிகின்றன. பாகிஸ்தான் பிரதேச அநுபவத்திற்கூடாகக் கூறப்படும் ‘ஒட்டகம்’ கதை இதற்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் ஏனையநாட்டு அனுபவங்களினூடாகவும் வரும் பல கதைகள் இவரிடம் உள்ளன. இவையெல்லாம் தனித்த பார்வைக்குரியன.

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற விமல் குழந்தைவேலின் ‘அசதி’ தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் மட்டக்களப்பின் அக்கரைப்பற்று கோளாவூர் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பிரதேசச் செல்வாக்கினை நமக்குக் காட்டுகின்றன. இவரி;ன் அசதி தொகுப்பிலுள்ள ‘ஆச்சியும் பூசாரியும், சின்னாம்பி, அசதி, பேய் நாவை, வெள்ளாவி’ ஆகிய சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கலாம்.

விமல் குழந்தைவேலிடம் ஈழத்தின் கிராமியச் செல்வாக்குடன் கூடிய வாழ்வனுபவம் அவரின் படைப்புக்க@டாக வெளிப்படுதல் மிக முக்கியமானது. மரபுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், என்பவற்றுடன் அவர் கையாளும் வட்டார வழக்கு மொழிநடையும் முக்கியமானது.

இதேபோல்தான் இவரின் ‘வெள்ளாவி’ என்ற நாவலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்நாவலில் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் கிராமியச் செல்வாக்கு உள்ளமை கண்டுகொள்ளலாம். கோளாவில், அக்கரைப்பற்று. தீவுக்காலை, பனங்காடு ஆகிய சிறு சிறு கிராமங்களைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்து மக்களின் வாழ்வுடன் சலவைத்தொழிலாளர் சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வும், தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சுரண்டி வாழும் போடியார் சமூகம் பற்றிய பதிவும் இந்நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

இந்நாவலின் மொழிநடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக,

முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை பிரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க> ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக் கொண்டு பொண்டுகள் நடக்க மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண் ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகராமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண்ணூட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப்போகோணும் எண்டு சொல்லுவாங்க (வெள்ளாவி)

‘இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்போமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சி வரச் சொல்லுகா’ (வெள்ளாவி)

மேலே எடுத்துக் காட்டிய ஆசிரியரின் எடுத்துரைப்பு மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் விமல் குழந்தைவேலின் நாவலில் மிக அருகருகாக வருவதனைக் கண்டு கொள்ளலாம். இந்த வட்டாரத்தன்மை விமல் குழந்தைவேலின் நாவலில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாகும்.

டென்மார்க்கில் இருந்து எழுதும் கி. செ. துரை சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரின் ‘திரியாப்பாரை’ சிறுகதையும் ‘சுயம்வரம்’ என்ற நாவலும் இவ்வகையில் கவனத்திற்கு உரியனவாகின்றன. ‘சுயம்வரம்’ நாவலில் வடமராட்சி கடற்கரைப் பிரதேச மக்களின் வாழ்வும் அவர்களின் மொழியும் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்.

“பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில் பன்னிரெண்டாம் நம்பர் து}ண்டில்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. தங்கூசியை நன்றாக இழுத்து, விரலிடுக்குகளால் நீவி பக்குவமாக தூண்டில்களில் பெருக்கிக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலின் அநுபவமும், பொறுமையும் அவர் போடும் முடிச்சுக்களின் இறுக்கத்தில் பரிமளிக்கும். ஆகையால் தான் தூண்டில் போடும் கிட்டத்திற்கு அரிப்புக்கட்டி ஈயக்குண்டு போடுவதில் அந்த வட்டாரத்தில் மயிலருக்குத் தனிப்பெயருண்டு.” (சுயம்வரம்)

‘இந்த முறை விளைமீன் சீசனை ஒரு கை பார்த்துப்போடவேணும்’ என்று நினைத்துக் கொண்டே கிட்டத்தையும் தூண்டில்களைப் பிணைத்திருந்த அரிப்பையும் இணைத்துப் போட்ட பிரதான முடிச்சையும் ஒரு மூச்சுக் கொடுத்து இறுக்கிக் கொண்டபோது: வெளியே அவரது மனைவி ஆச்சிமுத்துக் கிழவி யாரையோ திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார்’ (சுயம்வரம்)

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ நாவலும் பிரதேசச் செல்வாக்கைக் கொண்ட நாவலாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்பிள்ளைகளின் கதையைக் கிராமிய மணங்கமழ சொல்ல வருகின்ற ஆசிரியர் அம்மண்ணுக்கோpய வழிவழியாக வந்த மரபுகளை வழக்கடிபாடுகளை எடுத்துக் காட்டுகி;ன்றார்.

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலின் மொழிநடையை தீவகத்திற்குரியது என்ற ஒரு கூற்றும் உள்ளது. இந்நாவலில் மொழி தீவகத்திற்குரியதாக இருந்தாலும் அப்பிரதேச மக்களின் உரையாடல் மொழியும், தமிழ்ப்போராளி அமைப்புக்கள் தமக்கேயுரிய ஒரு மொழிநடையினை கையாள்வதனை இந்நாவல் பதிவுசெய்வதனை அவதானிக்க முடியும்.

‘ஹெய் நிலத்தில வடிவா சப்பாணி கொட்டி இரும் ஐஸே’ காலில குந்தியிருந்த ரொக்கிராஜ் பொத்தெண்டு நிலத்தில சப்பாணிகொட்டி சக்கப்பணிய இருந்தான். ‘என்ன சவம் வந்தது வராததுமாய் மாஸ்டரிட்ட ஏச்சு வாங்கி;ப் போட்டேனே’ எண்டு அவன் சாpயாய்க் கவலைப்பட்டான். (கொரில்லா, ப. 66)

“ஐயோ தம்பியவை இஞ்ச ரத்தத்தைப் பார்த்தீங்களோ? நான் பிள்ள குட்டிக்காரன் கண்டீங்களோ? இந்தக் கொரில்லா எண்டுறவன் நெடுக நெடுக கடையில வந்து வெத்திலை, பீடி, சுருட்டு எண்டு நித்தம் ஒரு அரியண்டம் குடுத்துக் கொண்டேயிருக்கிறான். நானும் வயித்துப்பாட்டுக்காய் ஊர் விட்டு ஊர் வந்து கடை திறந்த இந்த ரெண்டு வரியத்திலயும் ஒரு நாள் எண்டாலும் அவனுக்கு குடுத்த சாமான்களுக்கு ஒரு சதமெண்டாலும் வேண்டியறியன்….” (கொரில்லா, ப. 94)

இந்த இரண்டு உரையாடலுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதனைக் கண்டு கொள்ளலாம். ஒரு வகையில் இளைஞர்களின் உரையாடல் ஈழத்துக்கேயுரிய பொதுவான நியமத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இவையும் கூட பிரதேசச் செல்வாக்காகக் கருதலாம்.

இவ்வகையில் புலம்பெயர் இலக்கியத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதேசச் செல்வாக்கினை கண்டுகொள்ள முடியும். ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் வாழ்வும் அந்த வாழ்வினோடு இரண்டறக் கலந்துவிட்ட தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளும் மிக அழகாகப் புலம்பெயர் படைப்புக்களில் பதிவு பெற்றுள்ளன. இவை பற்றிய மேலதிக பார்வைகளும் முன்வைக்கப்படவேண்டும். அதேபோல் புலம்பெயர் படைப்புக்களின் அந்தந்த நாட்டு வாழ்வனுபவங்களும் அப்பிரதேசத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளும் எடுத்து நோக்கப்படவேண்டும். அப்போதுதான் பொதுமைப் பண்புகளுள்ளே பல சிறப்புக் கூறுகள் இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும். அதற்கு ஓரு அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

நன்றி :- ஞானம் 100 வது இதழ்/ pathivukal.com