Monday, November 26, 2012

உயிரின் வாசம் - “பெயரிடாத நட்சத்திரங்கள்”

- சு. குணேஸ்வரன் 


  
 போர்ப்பகைப்புலத்தில் இருந்த பெண்கவிஞைகளின் வரிகளாக உயிரின் வாசத்தோடும், உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளோடும் வந்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்களின் கவிதைகள்.  பெண் படைப்புக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவத்தோடு எளிய மாந்தர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளோடு தாய்மையுணர்வுமுதல் தாயகநேசிப்பு வரையான கவிதைகளைக் கொண்டிருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள்.  

   ஊடறுவும் விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 26 கவிஞைகளின் 70 கவிதைகள் உள்ளன. அதிகமும் அறியப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி ஆகியோருடன் அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் ஆகிய ஒவ்வொருவரினதும் மூன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. 

   மேலும்; காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞானமதி, புரட்சிகா, கிருபா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபி மார்க்கட், சிரஞ்சீவி, தயாமதி ஆகியோரின் ஒவ்வொரு கவிதைகளைக் கொண்டதாகவும் தொகுப்பு உள்ளது.

   ஒரு போராட்ட அமைப்பு என்ற சார்புநிலைக்கு அப்பாலிருந்து தொகுக்கப்பட்ட தொகுதியாக இது இருப்பதை முதலில் குறிப்பிடவேண்டும். அமைப்பு, அதன் கொள்கை, அதன் பிரச்சாரத்தேவை என்ற முன்னுதாரணங்களை விலக்கிவிட்டுப் பார்ப்போமானால் பெண் படைப்புக்களின் வரிசையிலே போர்க்காலப் படைப்புக்களுக்கு வலிமைசேர்க்கக்கூடிய தொகுப்பாக அமைகிறது. 

   
 போர்க்கால இலக்கியப் போக்கினை மதிப்பிடுகின்றபோது அவற்றை பொதுவாக மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று சார்புநிலையாக வெளிப்படும் படைப்புக்கள். மற்றையது எதிர்நிலையில் இருந்து வெளிப்படும் படைப்புக்கள் - இவற்றை அரசியல் விமர்சனம் சார்ந்த படைப்புக்கள் என்றும் கூறலாம். மூன்றாவது, சார்பும் எதிருமின்றி நியாயத்தைப் பேசும் படைப்புக்கள் - இவற்றை காலங்கடந்தும் வாழக்கூடிய படைப்புக்கள் என்றும் சொல்லலாம். சார்புநிலையைப் பேசும் படைப்புக்கள்; குறித்த அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவோ அல்லது அதன் கொள்கை பரப்பலாகவே இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அது மறுபுறத்தில் அபத்தமாகப் படலாம். 

   ஆனால் இத்தொகுப்பில் வந்துள்ள கவிதைகள் போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அவலங்களையும் அந்த அவலங்களைத் தீர்ப்பதற்கு புறப்பட்டவர்களின் உணர்வுகளையும் பேசுவனவாக உள்ளன. போராடுபவர்களின் பக்கம் நின்றுகொண்டு அதற்கான நியாயப்பாடுகளைப் பேசுகின்றன. 

ஒட்டுமொத்தமாக தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கவிதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். 

1.       போரினால் மக்கள் படும் அவலங்களைப் பேசுதல்
2.       பெண் அடக்குமுறை, சமூகத்தின் போலியை எதிர்த்தல்
3.       விடுதலை வேட்கையைப் பாடுதல்
4.       வீடு, உறவு, இளமைக்காலம் ஆகியவற்றை மீட்டுப் பார்த்தல்
5.       உலகு பற்றிய பார்வை

   இந்தப்போர் மக்களை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதனை பல பெண்கவிஞைகள் பாடியுள்ளனர். காலங்காலமாக வாழ்ந்த பூர்வீகத் தேசத்தைவிட்டு ஏதிலிகளாக அலைந்துலைந்து வாழவேண்டிய நிலையினையும், போரால் இழந்துவிட்ட உயிர்கள் பற்றியும் பலவிதத்திலும் பேரின் கரங்கள் மக்களின் மீது தொடர்ந்துகொண்டிருக்கும் அவலநிலையினையும் பாடுகின்றனர். 

“பாலியல் வன்முறைக்கு
இரையான
பள்ளிக்கூட மாணவி நீ
உன்னைச் சூழ்ந்து நின்று
மிருகங்கள் சுவை பார்த்து
சிரித்த பொழுது
நீ சத்தமிட முடியாமல்
சாவோடு போராடினாய் - உன்
விழிகளிரண்டும்
வான்நோக்கி நிலைத்தபோது
என்னம்மா நினைத்திருப்பாய்?” (ஆதிலட்சுமி) 

   என்ற வரிகள் கிருஷாந்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகின்றன. மக்களை ஒடுக்குவதற்கு பாலியல் ரீதியான அடக்குமுறை ஒரு ஆயுதமாக அடக்கப்படுபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களுக்கு மிகுந்த அச்சத்தையும் இயலாத்தனத்தையும் ஏற்படுத்துகிறது. 

   ஒரு சாதாரண குடிமகன் என்ன நினைத்திருப்பான். தானும் தன் வீடும் தன் பிள்ளையும் தோட்டமும் என்று ஒரு குடிலில் வாழ்ந்த மனிதர்கள் சாவின் எல்லைவரை விரட்டப்படுகிறார்கள் இது இன்னொரு கவிஞையிடம் 

“உயிர் வாழ்வதன்றி வேறொன்றறியா
எம் உறவுகள்
மண்ணோடு போக
உளம் புண்ணாகி உடல் சோர்ந்து
வீதியிறங்கி
வியர்வைத் துவாரங்களால் இரத்தம் கசிய
கதறியழுது அலையும் வாழ்வு
ஏன் எனக்கு வந்தது?” (மலைமகள்) 

   இவ்வாறான துன்பங்கள் தொடர்வதற்குத்தான் காரணங்கள் என்ன? அந்தத் துன்பத்தை வலிமை பெற்றவர்கள் கூட்டாக எளியவர்கள் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் இந்தக் கவிஞைகள் பாடுகின்றனர். மக்களின் துன்பம் தொடர்வதற்கு படிப்படியாக மாறிக்கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள். 


ஆட்சியாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டு வந்த வல்லரசுகள் மக்களைக் கொன்று குவிக்க உதவியமையை கவிதையொன்று சுட்டிக்காட்டுகிறது. 

“அனைத்து நாடுகளும்
அண்ணாந்து பார்த்து நிற்க
உயரத்தில் விழுந்தன
உணவுப் பொட்டலங்கள்.
ஒருதலைப்பட்சமாய் உள்ளே வந்த வல்லரசால்
அரிசிப் பொதிகள் விழுந்த
அதே குச்சொழுங்கைகளில்
குப்பெனப் பீறிட்டது குருதியாறு” (கஸ்தூரி)

 என்று வரலாற்றில் நடந்த ஒர் அவலத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர். 

“தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்றுபோயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்
கையொன்று வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ குற்றம் சாட்டுவதாய்.

சில நிமிடங்கள் தான்
அம்புலன்ஸ் எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டுபோனது
எஞ்சியதாய்
அவனது இரத்தம் கொஞ்சம்
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
செல் துண்டுகள் அவ்வளவுதான்.” (நாமகள்) 

   என்ற கவிதை எமது மக்கள் ஊமையாய் உக்கிப்போய் செத்துப்போன நிலைகளை எடுத்துக்காட்டுகிறது. சேரன் 80 களின் தொடக்கத்தில் எழுதிய ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’  என்ற கவிதையினையும் இவ்வரிகள் ஞாபகப்படுத்துகின்றன. 

   இவை தவிர மலையக மக்களின் பிரச்சினைகளுடன் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுதல் பற்றிய கவிதையும் இத்தொகுப்பில் உள்ளமை கவனிக்கத்தக்கது. எங்கள் சொந்தச் சகோதரர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர்?

 “சுரண்டல் தராசுகளில்
கொழுந்துக் கூடைகளை
கொழுவிவிட்டு
தேனீருக்கான ஏங்கும்
இத் தேயிலைச் செடிகள்
அக்கினியாய் அணிவகுத்து
அவலங்களை எரிப்பதெந்நாள்?” (கஸ்தூரி) 

என்று ‘கொழுந்துக் கூடைகள்’ கவிதையில் எழுதுகிறார். 
   இன்னொரு கவிதை புலம்பெயர்ந்து சென்ற ஈழமகன் ஒருவனைப் பற்றிய சித்திரத்தை அழகாகத் தருகிறது. புலம்பெயர்ந்து செல்லமுன் ஒர் ஆண்மகன் வீட்டில் இருந்த நிலை, புலம்பெயர்ந்தவர்கள் அங்கு எதிர்கொள்கின்ற வாழ்க்கை முரண்கள், அவர்களின் தாயகஉறவு பற்றிய அந்தரநிலை என்று பல விடயங்களை பாடுகிறார். 

   வீட்டில் சாப்பிட்ட கோப்பையே கழுவாதவன் ஹோட்டலில் தட்டுக் கழுவிச் சம்பாதித்து தன் உறவுகளுக்கும் தாயகத்திற்கும் உதவுவதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்; மனிதர்களை எவ்வாறெல்லாம் மாற்றி விடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இக்கவிதை.  

“கழிப்பறைக்கு நீர் சுமக்கவும் மறுத்த
தம்பியின் வாழ்வு
குளிர் பனிக்குள்
கழிப்பறைத் தூய்மையிலே கரைந்தது.
திண்ட கோப்பைகூடக்
கழுவத் தெரியாத பிள்ளை
ரெஸ்ரோரண்டில்
அதைக் கழுவிப் பிழைத்தே
காசு அனுப்பியது” (அம்புலி) 

   என்று இன்னும் பல சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். உறவைப் பிரிந்துபோன ஏக்கம், தனிமைவாழ்வு, மொழிக்கலப்பு ஆகியனவும் பேசப்படுகின்றன. ‘தூரவிருந்து குரலை உயர்த்தி கரத்தையிணைத்து துணையிருக்கும் உறவுகள்’ எனவும் புலம்பெயர்ந்துபோன ஈழத்தமிழ் மக்களை நன்றியுடன் நினைக்கின்ற கவிதையாகவும் இது அமைந்திருக்கின்றது. 

   சமூகக் கொடுமைகள் பற்றிச் சுட்டும்போது சீதனம் பெறுதல் மற்றும் பெண்அடிமைத்தனம் பற்றிப் பாடுகின்றனர். பெண்ணைப் பார்த்துக் குட்டக் குட்டக் குனிந்து கொண்டு (வானதி) குசினிக்குள்ளே முடக்கிப் போகாமல் சமூகத் தளைகளை உடைக்க வெளியே வா என சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக எழுமாறு அறைக்கூவும் கவிதைகளும் உள்ளன. 

   மகாகவி பாரதியை முன்னிறுத்திப் பாடுவதுபோல் அமைந்த கவிதையில் இன்று சீதனம் வாங்கும் ஆண்களின் நிலையை பின்வரும் கவிதை சுட்டிக்காட்டுகிறது. 

“காசு பெரிதில்லை
நெஞ்சிலுள்ள காதல் பெரிதென்றாய்
இங்கோ கண்ணன்கள்
காசு பெரிதென்று
காதலை முறிக்கிறார்கள்” (ஆதிலட்சுமி) 

   விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் கவிதைகள் என்ற வகையில் பார்ப்போமானால் போராளிகளின் விடுதலையுணர்வு, அவர்களின் தியாகம், அவர்களிடம் இருக்கக்கூடிய நம்பிக்கை, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தற்துணிவு என்பன இக்கவிதைகளில் பேசப்படுகின்றன. 

   ஓராயிரம் விழிகளின் உறக்கத்திற்காக தங்கள் காவல் முக்கியம் என்று அம்புலி எழுதுவார். இரவு பகல் வெய்யில் மழை என்றும் பாராமல் அவர்களின் காத்திருப்பும் கவலிருப்பும் குறிப்பிடப்படுகிறது. கொள்ளி வைக்க இருந்த பிள்ளையும் போய்விட்டதே என்று கலங்கும் தந்தைக்கு தாயினூடாகப் பதிலுரைக்கும்போது இறந்தபின்னர் அடக்கம்செய்யும் மயானத்திற்காகவும் தான் நான் காவலிருக்கிறேன் (‘அப்புறமாய் வருகிறேன்’ - ரூபி மார்க்கிரட்) என்று பாடுகிறார். 

“ஓர் அழகிய காலையை
உனக்கு
காட்டமுடியாத வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்குப் பரிசளிக்கிறேன்” (அம்புலி)

   என்று ஒரு தாயின் உணர்வுநிலையில் இருந்து கொண்டு குழந்தைக்குச் சொல்லும் வரிகளாக அவை அமைந்து விடுகின்றன. 

   இதேபோன்று வானதியின் ‘எழுதாத கவிதை’ விடுதலை உணர்வையும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பினையும் ஊட்டுகின்ற கவிதையாக அது அமைந்திருக்கிறது. 

“சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்
ஆனால் என்
உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும் அது.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.” (வானதி) 

   என்று எழுதுகிறார். இதனை நாதினி என்ற இன்னொரு கவிஞை எழுதாதுபோன உன் கவிதையை எழுதுவதற்காக உயிரைக் கோலாக்கி உதிரத்தை மையாக்கி அணிவகுத்து நிற்பவர்களைச்  சுட்டிக்காட்டுகின்றார். 

   இவர்களிடம் உலகு பற்றிய பார்வையும் உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நடந்த இனவழிப்பை இலங்கையில் நடந்த இனவழிப்புடன் ஒப்பிட்டுப் பாடுகின்றனர். 

“மொழிவேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்றுதானே.
அகதிமுகாம் வாசலிலே
அம்மாவைத் தேடு என்று
ஐ.நா கூறியதாமே
யாரைப் பார்த்தாலும்
அம்மாவாய்த் தெரிகிறதா?
சின்ன வயதில் உங்கள் தோள்களிலே
சிலுவையை ஏற்றி வைத்தது யார்?” (ஆதிலட்சுமி) 

   சர்வதேசம் பற்றிக் கூறும்போது அது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி விடுகின்றன. இதனை ‘வல்லரசுகள்’ என்ற கவிதையிலே 
பாடும்போது

“சமாதான நாடுகளில்
சாமர்த்தியமாய் நுழைந்து
ஆணிவேரை அறுத்துவிட்டு
வாடாது நிற்க
நீர் ஊற்றுபவர்கள் நீங்கள்.
உங்கள் தலையீடுகளால்
தரைமட்டமாகிப் போன தேசங்களே அதிகம்.” (கஸ்தூரி) 

   தாயகம், வீடு, உறவு பற்றிய உணர்வுநிலைகள் மிக அழகாக வந்துள்ளன. ‘அன்பான அம்மா’ என்ற பாரதியின் கவிதையில் சிறுவயது நினைவுகள், வீடு மற்றும் கிராமத்து நினைவுகள் வருவதனைக் காணலாம். 

   இளமை நினைவுகள், பள்ளிக்கூட வாழ்க்கை, அதன்பின்னர் பல நண்பர்களை தாம் இழந்துவிட்டமை, கால் இழந்து விட்ட நிலையிலே அசையமுடியாது மரத்துப்போனதுபோல் இருக்கின்ற நிலை… என கவிதையின் போக்குப்பற்றி மேலும் குறிப்பிடலாம். அம்மா பற்றிய கவிதைகளும் அம்மா பற்றிய படிமமும் பல கவிஞைகளின் கவிதைகளில் அற்புதமாக வந்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கவை. தாயின் அன்பும் அவளின் அரவணைப்பும் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அவள் தங்களை வளர்த்து ஆளாக்கியமையும் இக்கவிதைகளில் பாடப்படுகின்றன. மேலும் தமது உணர்வுகளைத் தாயை முன்னிறுத்திப் பாடும் கவிதைகள் அதிகமாக உள்ளமையும் கவனிக்கத்தக்கது. தந்தையிடம் கூறவேண்டியதை தாயிடம் கூறுதல், அவளை விட்டுப் பிரிந்து வந்த சோகத்தைக் கூறுதல் என்பன இங்கு முக்கியமானவை. 

“அன்பான அம்மாவே
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கிறேன்
அதனிலும் பார்க்க
நான் ஓடி விளையாடிய
என் வீட்டு முற்றத்தை
நான் கால் பதித்த
ஒற்றையடிப் பாதைகளை
செம்பாட்டு மண்படிந்த என்
தெருக்களை
சணல் பூத்துக் குலுங்கும் என் தேசத்தை
தோட்ட வெளிகளை
இப்படி இப்படியாய்
எத்தனையோ.” (பாரதி)

“ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச நான் தயார்.
நிம்மதியான பூமியிலே நித்திரைகொள்ள
எனக்கும் விருப்புண்டு” (அம்புலி) 

   என்று தாய் பற்றிய உணர்வையும் அவளின் அன்பையும் தவிர்க்கமுடியாமல் தாங்கள் புறப்பட்ட நிலையையும் எடுத்துக் காட்டுகின்றனர்.  

   நூலின் முன்னுரையில்
“பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பல கலாசாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுது பார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணிகளிலும் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி, இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி என பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள்.”

   என்று இக்காலத்தில் இருந்த பெண்களின் புதிய எழுச்சியை போர்க்காலத்தின் பதிவாகக் குறிப்பிடுகின்றனர் தொகுப்பாளர்கள்.

   இயல்புநிலை அழிக்கப்பட்ட சூழலிலிருந்து பாடப்பட்ட கவிதைகள் இவையென்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கவேண்டியதாகும். கவிதைகள் எளிமையாக இருக்கின்ற அதேவேளை அவற்றின் புனைதிறன் உத்தியிலும் ஓரளவு சாத்தியத்தை எட்டியிருக்கின்றன. தங்கள் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை, காலத்தின் தேவையை பாடியிருக்கிறார்கள். 

   உணர்வும் உயிரும் அற்ற வெற்றுவார்த்தைகளை மாபெரும் படைப்பெனக் கூறிக்கொண்டு நாங்களும் காலத்தின் வரலாற்று நாயகர்கள்தான் என எழுதிக்கொண்டிருப்பவர்களின் மத்தியில் இவை உண்மையான எழுத்துக்கள்தான் என்பதை இந்தக் கவிதைகள்  உணர்த்திக்கொண்டேயிருக்கும். 

   ‘மறையாத மறுபாதி’, ‘சொல்லாத சேதி’ போன்ற பெண் படைப்பாளிகளின் தொகுப்புக்களின் வரிசையில் போர்க்காலப் படைப்புக்களில் பெண்களின் குரல்களாக வந்திருக்கும் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ ஈழத்து இலக்கியப் போக்கில் கவனத்திற் கொள்ளவேண்டிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.
---
 நன்றி - 'ஞானம்' ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்/ 'திண்ணை' 26.11.2012

Tuesday, August 7, 2012

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி


- சு. குணேஸ்வரன்


அறிமுகம்

ஒரு இனக்குழுமத்தின் உயிர்ப்பின் அடையாளமாக இருப்பது மொழி. அது பண்பாட்டின் வழிவந்த ஊற்று. மொழியின்றேல் இனமில்லை. அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லை. பல்பண்பாட்டுச் சூழலில் புலம்பெயர்ந்து, தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும் தமிழைப்பேச வைப்பதற்கும் தமிழினூடாகத் தமிழர் என்ற அடையாளத்தைக் கையளிப்பதற்கும் பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆற்றிவருகின்றனர்.

இவ்வகையில் அந்நாடுகளில் வாழ்கின்ற இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனைக்குரியதாக இக்கட்டுரை அமைகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் - தலைமுறை

60 களில் இருந்தே இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பித்து விட்டதாயினும் அது பண்பாட்டு ரீதியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியதென்று கூறமுடியாது. ‘மூளைசாலிகள் வெளியேற்றம்’, ‘தொழிலுக்கான புலப்பெயர்வு’ என்ற வகையிலேயே அவை அமைந்திருந்தன. ஆனால் 80 களில் இருந்தான புலப்பெயர்வே இங்கு முக்கியமாக கருத்திற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை ‘தலைமுறை’ என்று வகுத்துப்பார்த்தால் தற்போது இரண்டாந் தலைமுறை தாண்டி மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது.

தலைமுறை என்பதை மேலைத்தேயத்தவர்கள் சராசரி 35 வருடங்களைக் கொண்ட காலப்பகுதியாகக் கொள்வர். குறிப்பாக 1983 யூலைக்கலவரங்களின் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று கண்டங்களிலும் உள்ள நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து, ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை இன்று முதலாந் தலைமுறையினர் என அழைக்கலாம். அதிகமும் இளைஞர்களே அப்போது புலம்பெயர்ந்தார்கள். அதற்கு பல்வேறு சமூக அரசியற்காரணங்கள் இருந்தன. அவர்களுள் வதிவிட அனுமதி கிடைத்தவர்கள் படிப்படியாகத் தமது சகோதரர்களை, தாய் தந்தையரை அழைத்தனர். பின்னர் தமக்கு மணப்பெண்களை அழைத்து திருமணமும் செய்து கொண்டனர்.

இரண்டாம் தலைமுறையினர் எனப்படுவோர் 80 களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள். அதாவது சிறுவர்களாக இருக்கும்போது புலம்பெயர்ந்தவர்கள். அல்லது அந்தந்த நாட்டில் பிறந்த பிள்ளைகள்.

இக்கட்டுரை இரண்டாம் தலைமுறையினரை மையப்படுத்தியதாகவே அமைகிறது.

இற்றைக்கு புலப்பெயர்வு ஏற்பட்டு கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இங்கு இரண்டாந் தலைமுறையினர் மத்தியில் தமிழ்மொழியைப் பேணுதலில் புலம்பெயர்ந்த தமிழர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் ‘தமிழ்மொழி’ யை இரண்டாம் மொழியாக அல்லது மூன்றாம் மொழியாகக் கற்கவேண்டிய கடப்பாடு ஏற்பட்டிருக்கிறது.


தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனை

புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தமிழ்க்கல்வி தொடர்பான சிந்தனை 90 களின் பின்னர்தான் ஏற்படுகிறது. முதலில் படிப்படியாகத் தம்மை நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அகதி அந்தஸ்து அல்லது வதிவிட உரிமை, அந்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ளல், தொழில் வாய்ப்பு, என்பன ஓரளவு வாய்த்தபின்னரே தமது குடும்பம் மற்றும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கின்றனர்.

அதன் பின்னர் இலங்கையில் இருந்து அவர்களுக்கு மணப்பெண்களை அனுப்புதல் தொடர்கிறது. இதனால் அவர்கள் குடும்பமாகத் தம்மை புகலிட நாடுகளில் நிலைநிறுத்திக் கொள்ளும்போதுதான் தமது பிள்ளைகளின் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு பற்றிச் சிந்திக்கின்றனர்.


திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் புகலிட நாடுகள்.

 இதுவரை தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து எழுதப்பட்ட படைப்புக்களை பொதுமைப்படுத்தியே அவை சுட்டுகின்ற பொருட்பரப்பு, மற்றும் உணர்வுநிலை ஆகியன பேசப்பட்டன. ஆனால் இனிவருங்காலங்களில் திணைகளுக்குரிய தனித்துவப் பண்புகள் போல புகலடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார சூழலியல் அம்சங்களையும் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்துவமானமான கூறுகள் உள்ளன.
 
 சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளுக்கு அடுத்ததாக தமிழர் புகலடைந்த நாடுகளை ‘ஆறாந்திணை’ என அழைக்கும் வழக்கம் உண்டு.

 ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகள் தட்பவெட்ப மாற்றத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகளாலும் முற்றிலும் வேறுபட்ட பண்புகளைக் கொண்டதாக அமைந்திருப்பதாலேயே ‘ஆறாந்திணை’ என அழைக்கின்றனர். இந்நிலையில் தமிழ்க்கல்வி பற்றி நோக்கும்போது இவ்வோறுபாடுகளை மனங்கொண்டுதான் பல செயற்பாடுகளை புலம்பெயர்ந்தவர்கள் ஆற்றவேண்டியுள்ளது.

 முதலாவது மொழியினூடாகக் கட்டமைக்கப்பட்ட நாடுகள் என்றால், மறுபுறம் சூழல் சார்ந்த வகைப்பாடு முக்கியம் பெறுகிறது.

 பிள்ளைகள் வாழும் சூழலைக் கருத்திற்கொள்ளாமல் இலங்கையில் அல்லது தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் ஆரம்பக்கல்விசார்ந்த நூல்களைக் கொண்டு தமிழ் கற்பிக்கமுடியாது. (உதாரணம் - வண்டில், கிடுகு, அஸ்டலக்சுமி போன்ற சொற்கள்) இந்நிலையில் தான் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்கவேண்டியுள்ளது.


புதிய தலைமுறையினர் தமிழை ஏன் கற்கவேண்டும் 

புகலடைந்த நாடுகளில் தமிழரின் பிள்ளைகள் தமிழை ஏன் கற்க வேண்டும்? அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை? அவர்களைத் தமிழ்க்கல்வி பயிலுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்த வேண்டியதற்கான தேவைகள் யாவை? என்பன முக்கியமான வினாக்களாகும். தமிழ்மொழியைப் புலம்பெயர்ந்த நாடுகளிலே இரண்டாந்தலைமுறையினர் ஏன் கற்கவேண்டும் என்பதற்குரிய முக்கியமான காரணம் ‘அடையாளம்’ தான்.

 முற்றிலும் மாறுபட்ட பிரதேசத்தில் அந்நியப்பட்டு தம்மை கறுப்பராகவும் நாடற்றவராகவும் அகதிகளாகவும் உணரும்போது, தாயகம் பற்றியும் தம் உறவுகள் பற்றியும் தம் பண்பாடு பற்றியும் நினைக்கத் தலைப்படுகின்றனர். கனடா போன்று ஒட்டுமொத்தமாக அதிகளவில் தமிழர் வாழக்கூடிய நாட்டில் தமது தாயகத்தை மீளுருவாக்கம்செய்து கொள்வதன் ஊடாக தாயகம் பற்றிய நினைவை தற்காலிக நினைவாகவேனும் பேண முயல்கின்றனர். தாம் எப்போதாவது இலங்கைக்கு திரும்பிச்செல்லும்போது தமது பிள்ளைகள் தமிழ் பேசவேண்டும் என்ற குறைந்த பட்ச விருப்பம், மற்றும் அந்நிய நாட்டில் தமது ஊரவரை உறவினரைச் சந்திக்கும்போதும் விழாக்களில் பங்கெடுக்கும்போதும் தமிழ் பேசவேண்டும் தமிழராய் உணர வேண்டும் என்ற வேணவாதான் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது.


 எல்லாவற்றுக்கும் மேலாக வேற்றுநாட்டு அடையாளம் முழுதாக தமிழைக் காவு கொள்ளும்முன்னர் உணர்வாலும் செயற்பாட்டாலும் தமிழராய் உணர்தல். இது புலம்பெயர்ந்த முதற்தலைமுறைக்கு பிரச்சினையல்ல. அவர்களின் இரண்டாந் தலைமுறையினருக்குரிய பிரச்சினை. எனவே மொழிவழியாகப் பண்பாட்டைக் கடத்துவதற்கு ஒரு முயற்சியாகத்தான் தமிழைக் கற்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றனர். நான் யார்? என் தாய்நாடு எது? எது என் தாய்மொழி? ஆகிய கேள்விகள் எழும்போதுதான் தாய்நாடு பற்றியும் தமது மொழி பற்றியும் தமது பண்பாடு பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய நிலையும் தமது வேர்களைத் தேடவேண்டிய நிலையும் வருகிறது.


மொழி அடிப்படையிலான வேறுபாடு

தாய்மொழி, முதல்மொழி, சிந்தனைமொழி, கல்விமொழி ஆகிய பதங்கள் புலம்பெயர்ந்த இரண்டாந் தலைமுறையினரின் தமிழ்க்கல்வி பற்றிச் சிந்திக்கும்போது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

“ஒரு பிள்ளை எந்த மொழியைத் தனது கல்வி மொழியாகக் கொள்கிறதோ அந்த மொழியே அப்பிள்ளையின் சிந்திப்பு நடைபெறுவதற்குமான மொழியாகும்” (கா. சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல்)

 தமிழர் அல்லாதோர் வாழும் ஓர் அந்நியச் சூழலில் அதுகாலவரையில் இல்லாத மொழியைப் பிள்ளைகள் பயிலுமிடத்து அது இரண்டாம் மொழியாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழரின் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தமிழ் இரண்டாம்மொழியாக அல்லது மூன்றாம் மொழியாகவே அமைகின்றது.

 தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளைப் பொதுப்படையாக மொழி சார்ந்து பார்ப்போமானால், ஆங்கிலம் பேசும் நாடுகள், ஆங்கிலம் அல்லாத ஏனைய மொழிபேசும் நாடுகள் என இரண்டாக வகுத்து நோக்கலாம்.


பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியவை ஆங்கிலத்தை அரசமொழிகளாகக் கொண்ட நாடுகள். அங்கு கல்வி மொழியும் ஆங்கிலம்தான். அங்கு புலம்பெயரும்போது ஏற்கனவே இலங்கை காலனித்துவ ஆட்சிக்குள் இருந்தமையால் தமிழர்களை, அவர்களின் பண்பாட்டை ஆங்கிலேயர் ஓரளவு புரிந்து கொள்வதற்கு இடமிருக்கிறது. அதேபோல் புலம்பெயர்ந்தவர்களும் ஆங்கில மொழி அறிவுள்ளவர்களாக இருக்கும்போது அவர்களுக்குரிய தொழிலைப் பெற்றுக்கொள்வதற்குரிய வாய்ப்புக்களும் இருந்துள்ளன.

 “கல்வி மட்டத்தில் தமிழ்மொழிப் பயில்வினை கல்விமொழி நிலைநின்று வகுக்கலாம். இந்த வகைப்பாட்டுக்குப் பெயரிடுவதிலேயே சிறியதொரு சிக்கலுண்டு. தமிழை ‘தாய்மொழி’ (mother – tougue) எனக்கொள்வதா அன்றேல் ‘முதல்மொழி’ (first language) எனக் கொள்வதா என்பதுவே அப்பிரச்சினையாகும். கல்விமொழி (educational medium) தமிழாக இல்லாதவிடத்துப் பாடசாலைச் சூழலிலேயே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குழந்தைப்பிள்ளை தமிழை அந்தக் கல்விச் சூழலில் இரண்டாவது மொழியாக (second language) அன்றேல் நோர்வே டென்மார்க்கில் நடப்பதுபோன்று மூன்றாவது மொழியாகவே (third language) பயிலவேண்டிய ஒரு நிலைமையுண்டு” (கா.சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல் ப8)

 கனடா அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகள் (குறிப்பாக ஆங்கிலம்) பிள்ளைக்கு முதல்மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

 நோர்வே, பிரான்ஸ், சுவீடன், டென்மார்க், சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் அந்தந்ந நாட்டு மொழிகள் முதன்மொழியாகவும் பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், இலத்தீன், டேனிஷ், சுவீடிஸ், உரோமன்ஸ் நொஸ்க் போன்ற மொழிகளில் ஏதாவது ஒன்று இரண்டாம் மொழியாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

 இந்நிலையில் ‘தமிழ்’ மூன்றாம் அல்லது நான்காம் நிலைக்கு தள்ளப்படும் நிலையே ஏற்படுகிறது. புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியிலேலே கல்வி பயில்கின்றனர். பிள்ளைகளின் சிந்தனைமொழியாகவும் கல்விமொழியாகவும் அந்நாட்டு மொழிகளே முதன்மொழியாகவும் உள்ளன.

 ஒரு பிள்ளை அந்நாட்டு மொழியிலேயே சிந்திக்கிறது. பேசுகிறது, கற்கிறது, பணி புரிகிறது. இந்நிலையில் மேலதிகமாக தமிழ் கற்க வேண்டிய தேவை ஏற்படும்போது ஆங்கிலம் பேசும் நாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழியாகவும். ஆங்கிலம் அல்லாத பிறமொழி பேசும் நாடுகளில் வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் மூன்றாவது மொழியாகவும் ஆகிவிடுகிறது. இது முடிந்த முடிபுமல்ல. சில பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மூன்றாவது மொழியாகக்கூட இல்லாத நிலையும் உள்ளது.


தமிழ்க்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள்

  புலம்பெயர்ந்த முதற்தலைமுறையினர் அடையாளத்தைத் தக்க வைப்பதற்காக பல செயற்பாடுகளை ஆற்றிவருகிறார்கள். அவற்றில் பிரதானமாக தமிழ்க்கல்வி கற்பிப்பதற்காக தமிழ்ப்பாடசாலைகளை நடாத்துகிறார்கள். வார இறுதி நாள்கள் பிள்ளைகள் தமிழ் கற்பதற்காக ஒதுக்கப்படுகிறது. சனி அல்லது ஞாயிறு நாள்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதற்கு தனியாகவும் நிறுவன ரீதியாகவும் பலர் பங்களித்து வருகிறார்கள். அதிகமாக தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 ஒருசில உதாரணங்களை நோக்கலாம். (பட்டியல் முழுமையானதல்ல)

 ஜேர்மனியைப் பொறுத்தவரையில் 1990 இல் பேர்ன் நகரில் உலகத் தமிழர் இயக்கத்தால் ‘தமிழாலயம்’ என்ற பெயரில் தமிழ் கற்பதற்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 134 வது தமிழாலயம் கடந்த ஏப்ரல் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழாலயம் இணையத்தினூடாக அறியப்படுகிறது. நிர்வாகக் கட்டமைப்புடன் 1ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை கல்வி கற்பிக்கிறார்கள்.

 பிரான்சில் ‘தமிழ்ச்சோலை’ என்ற அமைப்பு தமிழ்ப்பள்ளிகளை நடத்தி வருகிறது.லாசாப்பலில் இதன் தலைமையகம் இயங்குகிறது. 63 தமிழ்ப்பள்ளிகள் இதுவரை இருப்பதாக அறியப்படுகிறது.

 அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழிக் கல்விக்கான முயற்சிகள் பலவகையில் மேற்கொள்ளப்படுகின்றன. விக்ரோறியா பண்பாட்டுக்கழகம் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து வருகிறது. அதேபோல 1994 இல் இருந்து ‘பாரதிபள்ளி’ அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி வகுப்புக்களை நடத்தி வருகின்றது, இது நான்கு வளாகங்களைக் கொண்டுள்ளதாகவும் இதுபோல வேறுவேறு மொழிப்பாடசாலைகள் 50 வரையில் இயங்குவதாகவும் மாவை நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார்.

  கலிபோர்ணியாவில் தமிழ்க்கழகம் கடந்த 12 வருடங்களாக தமிழ்பயிற்றுவித்து வருகிறது. (tamilhl.org)

  “அறிவகம், தமிழ்க்கலை, தொழில்நுட்பக்கல்லூரி, அரச கல்விச் சபைகள், கத்தோலிக்கக் கல்விச் சபைகள், சிவனியக் கோயில்கள், தனியார் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழ்மொழியைக் கற்பித்து வருகின்றன” (கதிர்வேலு சண்முகம், செம்மொழி மாநாட்டு மலர், கனடாவில் “தமிழ்க்கல்வியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள்”, ப. 282)


  இவ்வாறான தகவல்களின் ஊடாக தமிழ்க்கல்விச் செயற்பாடு நடைபெறுவதனை அறியமுடிகிறது.


தமிழ்க்கல்வி கற்பித்தலில் குறைபாடுகள் 

ஆரம்பத்தில் பல குறைபாடுகளுடன் தொடங்கிய தமிழ் கற்பித்தல் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

 1 போராளி அமைப்புக்களால் வழிநடத்தப்பட்ட தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் கற்பித்தல் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தன.

  2 பிள்ளைகள் வாழ்கின்ற பிரதேசம் மற்றும் வாழ்க்கைச்சூழல் என்பன கருத்திற் கொள்ளப்படாத தமிழ் கற்பித்தல்.

 3 ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி இன்மை.

 4. பிள்ளைகளுக்கு சுமையைக் கொடுக்கக்கூடிய கல்விப்போதனை.

 5 எல்லாத் தமிழ்ப்பிள்ளைகளும் தமிழ் கற்பதற்குரிய வாய்ப்புக்கள் இன்மை.


 இவற்றோடு தமிழ் கற்றலில் பிள்ளைகள் ஆர்வம் காட்டாமைக்கு பின்வரும் காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.

  1. ஆங்கிலம் சார்ந்த நாடுகளில் இருக்கக்கூடிய ஆங்கிலமயச் சூழல் (கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா…)

 2. பெற்றோர் ஆர்வம் இன்மை – ‘தமிழ்’ கற்பதை தரக்குறைவாகக் கருதுதல்.

  3. தமிழ் கற்பது பிள்ளைகளுக்கு மேலதிக சுமையாக இருத்தல்.

  4. பிள்ளைகள் வாழுகின்ற சூழலைக் கருத்திற்கொள்ளாத அந்நியமான சொற்பதங்கள்.

 5. பாடத்திட்டம் மற்றும் உசாத்துணை நூல்கள் போதியளவு இன்மை.

  6. தமிழ்மொழியைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைதல்.

“கனடா பாடத்திட்டத்தின் கீழ் இயல்பாகவே மாணவர்களுக்குப் பெரும் கல்விச்சுமை காணப்படுகிறது. இந்நிலையில் அதிகம் பயனில்லாத மேலுமொரு தமிழ்க் கல்விச் சுமையை ஏன் கூட்டவேண்டும் என்று எண்ணித் தமிழைக் கற்காமல் விடுகின்றனர், கனடாப் பெருநகர்ப் பகுதிகளில் மட்டுமே தமிழைக் கற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. தொழில் கருதி நகர்களுக்கு வெளியே குடியேறி வாழும் தமிழ்மக்களது பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை” (கதிர்வேலு சண்முகம், செம்மொழி மாநாட்டு மலர், “கனடாவில் தமிழ்க்கல்வியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள்”, ப. 282)

  இவ்வாறாக தமிழ்மொழியைக் கற்பித்தலில் இருக்கக்கூடிய குறைபாடுகளும் பிள்ளைகள் தமிழ் கற்பதற்கு ஆர்வம் காட்டாமைக்குரிய காரணங்களும் புகலடைந்தவர்களாலேயே எடுத்துக் காட்டப்படுகின்றன.

 மேலும் பொ. கருணாகரமூர்த்தியின் அண்மைக்காலக் கட்டுரை ஒன்று இக்குறைபாட்டை மேலும் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

  “1990 களில் பெர்லினிலுள்ள தமிழ்ப்பாடசாலை ஒன்றில் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்து பிள்ளைகளின் கற்பித்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிச்சுவடி அட்டையில் அ- அதிர்ஷ்டலஷ்மி, ஐ- ஐங்கரன், என்று இருந்தது. கண்ணால் காணமுடியாதவற்றைக் குழந்தைகள் எப்படித்தான் மனதில் காட்சிப்படுத்தும், இன்னும் கலைச்சொல்லாக்கம் என்கிற பெயரில் நடைமுறையில் இல்லாத புதிய புதிய சொற்களைப்போட்டு அன்றாடம் அவர்களை வருத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக குமுகாயம்(குழுமம்), ஈருருளி, குளிர்பதனி, பொத்தகம், வெதுப்பகம், ஏதண்டை (கப்போர்ட்), நூலேதண்டை, வரியழியம்(அழிப்பர்), தண்ணுமை, மென்முழவு(மிருதங்கம்), அப்பர்குச்சி (ஊதுவத்தி) என்பன அவைகளில் சில” (பொ. கருணாகரமூர்த்தி, உயிர்மை 100 வது இதழ், 2011, ப.197)

  எனவே இவ்வாறான குறைபாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டு அவை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற திட்டமிடலை புலம்பெயர்ந்தவர்களின் கல்வி சார்ந்த அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.


 குறைபாடுகளைக் களைவதற்கான முயற்சிகள்

மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் படிப்படியாக சீர்செய்யப்படுவதாக கட்டுரைகளின் ஊடாக அறியப்படுகிறது.

  கல்விக் கொள்கை, ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி, தகுந்த ஆலோசனை வழிகாட்டலில் உருவாக்கப்படும் பாடநூல்கள் ஆகியன இவற்றுள் முக்கியமானவை. மேலும் 90 களில் இருந்து ஈழத்திலிருந்து நூல்களைப் பெற்று கல்வி கற்பித்தவர்கள் 2000 ற்குப் பின்னர் பல்வேறு தமிழ்க்கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து ITEC என்ற அமைப்பை உருவாக்கி பாடநூல்களைத் தயாரிக்கவும், தேர்வுகளை நடாத்தவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ளவும் வகை செய்திருக்கிறார்கள். (ஆதாரம் tbvgermany.com/tbv/)


 இதுபோன்ற முயற்சிகள் அவுஸ்திரேலியாவில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. (பார்க்க - கலாநிதி ஆ. கந்தையா ‘அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ )

 மேலும் சில நாடுகளில் கல்வி சார்ந்த ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பாடநூல்களை உருவாக்கியுள்ளார்கள். படைப்பாளிகள் மற்றும் தமிழ் அறிஞர்களும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதற்கு உதாரணமாக சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் வருடந்தோறும் மாநாடுகளை நடாத்தி வருவதும் இக்குறைபாடுகள் களைவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

 மாவை நித்தியானந்தன், கவிஞர் அம்பி, மறைந்த கலாநிதி ஆ. கந்தையா போன்ற சிலரின் ஆரம்ப முயற்சிகள் இவ்வகையில் கவனத்திற் கொள்ளத்தக்கன. பாடநூல்கள், கதைப்புத்தகங்கள், ஒலி ஒளி நாடாக்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். புகலிடத்தில் வாழ்பவர்கள் இதுபற்றி விரிவாகப் பகுத்து எழுதி ஆவணப்படுத்த வேண்டியிருக்கிறது.


 ஒரு பிள்ளை 30 கிறடிற் எடுத்தால்தான் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றமுடியும் என்ற விதிமுறை கனடாவில் உள்ளது. இதில் 3-4 கிறடிற் தமிழ்க்கல்வியில் பெற்றிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இருக்கிறது. இந்நிலையில் ஒரு பிள்ளை தமிழ் கற்பதன் ஊடாக இவ்வாறான நன்மை கிடைக்க வழி இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவும் தரம் 1- முதல் 10 வரை தமிழ்க்கல்வியை ஒரு பிள்ளை பெறவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.


 முடிவுரை

 ஆங்கிலம் பேசும் நாடுகளைப் பொறுத்தவரையில் வீட்டுமொழியாகக்கூட தமிழ் இல்லாத நிலையில் தமிழ் கற்பதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே உள்ளது. மாறாக ஐரோப்பிய நாடு ஒன்றில் கல்வி கற்கும் பிள்ளை முதல்மொழியாக அந்நாட்டு மொழியையும் இரண்டாம் மொழியாக சர்வதேச மொழியையும் கற்றுக்கொள்கிறது. மூன்றாம் மொழியாகத்தான் தமிழ் கற்கின்றது. இங்கு பிள்ளைக்கு தமிழ் சுமையாக அமைகின்றது.

 இந்நிலையில் வீட்டுமொழியாக தமிழைப்பேச வைப்பதே இப்போது இருக்கக்கூடிய மாற்றுவழியாக இருக்கின்றது. இதனைத்தான் தமிழின் மீதும் தமிழ் அடையாளத்தின் மீதும் அக்கறையுள்ள பலரும் வலியுறுத்துகின்றனர்.


 “தமிழ்மொழியின் இடம் என்ன, அதனைப் போதிப்பதன் முறையியல் என்ன? திணிப்பற்ற கல்வியாகத் தமிழ்மொழியை எப்படி ஊட்டுவது? என்கிற வகையில் அவற்றைத் திட்டமிடுவது அவசியம். தமிழ்மொழி ஊட்டப்படுவதன் அவசியம் என்ன என்பது குறித்த வரைவிலக்கணத்தை முதலில் புலம்பெயர்ந்த நாடுகளில் தெட்டத் தெளிவாகக் கொடுக்கப்படல் வேண்டும். (என். சரவணன் நோர்வே, நிலம்பெயர்ந்த தமிழர், ப231-232)


  மாணவர்களிடம் தமிழ்பேசும் திறனை வளர்ப்பதற்குரிய ஆலோசனைகளாக பின்வருவனவற்றை தனது ஆய்வு முடிவுகளாக இரா வேல்முருகன் முன்வைக்கிறார். (நிலம் பெயர்ந்த தமிழர் ப.243)

 1. தமிழ்ப்பற்றை வளர்த்தல்

  2. சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல்
 
  3. உரையாடுதல்

 4. கதை சொல்லுதல்

 5. பெற்றோர் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுதல்

  6. திரைப்படக்காட்சிகளை விளக்குதல்


 தமிழ்ச்சூழல் ஒன்றில் வளரக்கூடிய தமிழ்ப்பிள்ளை பள்ளிக்கு வரமுன்னரே வீட்டிலே தமிழ்மொழியைக் கற்கத் தொடங்குகிறது. எனவே ஒரு பிள்ளை தமிழில் பேசுவதற்கான சரியான அடித்தளத்தை பெற்றோரால் இடமுடியும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.


 இதனால்த்தான் “வீட்டுமொழியாகக் தமிழை வைத்திருந்தாலே தமிழ் வளரும்” என்று பொன் பூலோகசிங்கம் (எழுத்தாளர் மாநாடு - மலர்: 2002 சிட்னி) குறிப்பிடுகின்றார்.

 இன்றைக்கு தமிழர் செய்யக்கூடிய ஆகக்குறைந்த பட்ச முயற்சி இதுவாகத்தான் இருக்கும். இதற்கு உலகப்பரப்பில் எத்தனையோ உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.


 இறுதியாக எஸ்.பொ வின் கூற்று ஒன்று, வரலாற்றோடு தமிழையும் தமிழ்அடையாளத்தையும் இணைத்துப் பேசுவது எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பை வலியுறுத்தி நிற்கின்றது.


  “சபிக்கப்பட்ட இனமாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக அகதிகளாக நாட்டுக்கு நாடு அல்லாடித் திரிந்த யூத இனத்திற்கு இன்று நாடு கிடைத்துவிட்டது. தமது எபிரேய மொழியை மீட்டெடுத்து அரசு மொழியாக்கியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கற்றிருந்த மொழியை ஆட்சி மொழியாக்கி, அந்த மொழி பயிலப்பட்ட மண்ணிலே இஸ்ரேல் நாட்டினை தோற்றுவித்திருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் என்ன? யூதேய மதத்தினையும், யூத இனத்தின் தனித்துவத்தையும் அவர்கள் அகதிகளாக அலைந்த அனைத்து நாடுகளிலும் சுமந்து திரிந்தார்கள்.

புதிய வளங்களை அவர்கள் பெற்றிருந்தபோதிலும் புகுந்த நாடுகளிலே தங்களது தனித்துவ அடையாளங்களைக் கரைத்துக் கொள்ளாது அதனைத் தங்கள் உயிருடனும் உணர்வுடனும் சந்ததி சந்ததியாகப் பேணினார்கள். இப்பொழுது இஸ்ரேலிலும் பார்க்க அதிக யூதர்கள் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஓர்மமும், பணமும், சாதுர்யமும் இஸ்ரேல் மலருவதற்கு பெரும் பங்கு வகித்தது.” (எஸ்.பொ வின் ஏற்புரை http://akkinikkunchu.com)

எனவே இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற முதலாம் தலைமுறையினர் தமிழ் பற்றியும் தமிழ் அடையாளம் பற்றியும் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் அறிவுபூர்மாக மேலும் முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும்.

தமிழ்ப்பண்பாடு என்பது புதிய தலைமுறையினரிடத்தில் மொழிவழியல்லாத அடையாளமாகப் பேணப்படும் நிலை தற்போது உணரப்படுகிறது. இது மிக ஆபத்தானதாக இருக்கும். தமிழ்ப்பெயருடன் வாழும் பிள்ளைக்கு தமிழ் தெரியாத நிலைபோலவும் நடனம் மற்றும் ஆற்றுகைக் கலைகளுக்குரிய பாடத்தை பிரெஞ்சிலோ அல்லது ஆங்கிலத்திலோ மனனம் செய்துவிட்டு அளிக்கை செய்வது போலவும் இருக்கும். இந்நிலைதான் இன்று மொரீசியசிலும் ரியூனியன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த ஆபத்துக்களைக் களைவதற்கு தமிழ் மொழிசார்ந்து முதலில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆளுமைகள் சிந்திக்கவேண்டும். அவர்களிடம் இருந்துதான் எதனைப் பிள்ளைக்குப் போதிக்கலாம். அதற்கு எவ்வாறான ஒழுங்குமுறைகளை (அகராதிகள் உருவாக்குதல். சொற்களஞ்சியத்தை உருவாக்குதல், பொருத்தமான கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள்) செய்யலாம் ஆகிய திட்டங்கள் வரவேண்டும். இம்முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதும் அறியப்படுகிறது.

எனவே தமிழ் அடையாளத்தை தமிழ் மொழிவழியூடாக புதிய தலைமுறைகளுக்குக் கடத்துவதே இன்று எமக்குள்ள ஒரு வழியாகும். அதனூடாகத்தான் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இனத்தையும் எதிர்காலத்தில் வாழவைக்கமுடியும்.

(கொழும்பு தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை – யூன் 2012)

---

ஆதாரமாக எழுத்தாளப்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகள்

 1. சிவத்தம்பி. கா பேராசிரியர் :2007, தமிழ் கற்பித்தல், குமரன் புத்தக இல்லம், சென்னை.

2. நிலம் பெயர்ந்த தமிழர் – வேரும் விழுதும் : 2007, (பதிப்பாசிரியர்கள் - ப.கு சண்முகன், க.ப. அறவாணன், இரா. அறவேந்தன்), உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், மலேசியா.

3. கந்தையா. ஆ. கலாநிதி : 1999, ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், நான்காவது உலகத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை.

4. எழுத்தாளர் மாநாடு மலர்: 2002 சிட்னி.

5. கருணாகரமூர்த்தி. பொ: 2011, உயிர்மை 100 வது இதழ், ப.196-198)

6. எஸ்.பொ: 2006, பனிக்குள் நெருப்பு, மித்ர வெளியீடு, சென்னை.

7. இரயாகரன். பி: 2004, ‘புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி’ தமிழ் அரங்கம்.கொம்.

 8. சிவதாஸ் சிவலிங்கம் : ‘புகலிடத்து வாழ்நிலையில் தமிழ்மொழி’ http://www.nortamil.no

9. http://akkinikkunchu.com

10. www ta.wikipedia.com

11. புலம்பெயர்ந்தோரின் கல்விசார்ந்த அமைப்புக்களின் இணையத்தளங்கள்

---

நன்றி – உயிர்நிழல் (பிரான்ஸ்), இதழ் 35, 2012.

Friday, June 15, 2012


அதிகாரத்தில் அகப்பட்ட காலமும் வாழ்வும் - தீபச்செல்வனின் ‘கூடாரநிழல் ’ கவிதைகள் குறித்து…


 -துவாரகன்

    உலகில் எங்கெங்கு அடக்கப்பட்ட இனக்குழுமங்கள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனவோ அங்கெல்லாம் ‘அதிகாரம்’ தன் கரங்களை அகல விரித்து வைத்திருக்கின்றது. இந்தத் தொடர் ஓட்டத்தில்தான் அகதிவாழ்வும் அடையாளஅழிப்பும் இந்த நூற்றாண்டிலும் பேசப்படும் சொற்றொடர்கள் ஆகியிருக்கின்றன.

   இனம், மொழி, பண்பாடுகளுக்கு அப்பால் ஓரினம் சந்திக்கின்ற அதே பேரழிவை இன்று தமிழினமும் சந்தித்திருக்கிறது. அதன் அடிப்படையில் எழுந்துள்ள கவிதைகளாகவே தீபச்செல்வனின் ‘கூடாரநிழல்’ கவிதைகளைக் கருதமுடிகிறது.

   மக்களை எவ்வளவு தூரம் விளிம்புநிலைக்குக் கொண்டு வந்து விடமுடியுமோ அந்த வேலையை யுத்தம் செய்து முடித்திருக்கிறது. கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் வாட்டும் நோயிலும் பசியும் தாகமும் உந்தித்தள்ள நேரத்திற்கு நேரம் கையேந்தி வாழவேண்டிய அவலநிலையை அது உண்டாக்கியிருக்கிறது.

   தொடர்ச்சியான அகதிவாழ்வும் அவலங்களும் அடையாள அழிப்பும் இரக்கமில்லாதவர்களிடம் இரக்க வைத்திருக்கிறது. பேதலித்த மனங்கள் ஒருபுறமும் இழந்துவிட்ட உறவுகள் மறுபுறமும் இருப்பவர்களையும் காப்பாற்ற வழியில்லாது தவிக்கும் இரண்டகநிலை இன்னொருபுறமுமாக எல்லாம் சேர்ந்த குழப்பநிலையில் வாழ்ந்த மக்களின் கண்ணீர்க் கதைகள் தான் இந்தக் கவிதைகள்.

   தீபச்செல்வன் ஏற்கெனவே நான்கு தொகுப்புக்களைத் தந்திருக்கிறார். அந்தக் கவிதைகளில் சொல்லப்பட்ட மக்களின் அலைச்சலும் இழப்பும் இவற்றில் உச்சம் பெற்றுள்ளன. அந்த உச்சமே உயிரைக் காத்துக்கொள்வதற்காகக் கையேந்தி வாழவேண்டிய அகதி வாழ்வாக விரிகின்றது. இது பொதுவான உலகப் பிரச்சினையாகவும் தோற்றம் கொள்கிறது.

   அ.முத்துலிங்கத்தின் ‘நாளை’ என்றொரு சிறுகதை. அதில் போரின் காரணமாக அகதிவாழ்வு வாழும் இரண்டு சிறுவர்கள் பற்றிய சித்திரம் வருகிறது. கதையில் தனக்குக் கிடைத்த றொட்டியை மூத்தவன் தன் சட்டைப்பையில் இரண்டு பகுதிகளாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு மற்றையதைப் பங்கிட்டுக் கொடுக்கிறான். இரவில் சிறியவன் எழுந்து ‘அண்ணா பசிக்குது’ என்றழுதபோது மிகுதிப் பாதியை எடுத்துக் கொடுக்கிறான். எங்கள் வாழ்வில்கூட இதுபோல பெற்றோரையிழந்த சிறுவர்களே மிஞ்சிப்போகிறார்கள். குடும்ப அமைப்பு சிதறடிக்கப்படுகிறது. ஒன்றின்பின் ஒன்றாய் தொடர் துயரக்கதைகள் தொடர்கின்றன.

  இத்தொகுப்பிலும் தாய், சிறுவர்கள், குழந்தைகள் பற்றிய சித்திரம் ஒரு தொடராக வருகிறது.

   ‘எலும்பும் தோலுமாக

   தூரத்தில் முட்கம்பி ஒன்றில்

   அம்மா கொழுவப்பட்டிருந்தாள்’


   என்று அம்மா பற்றி வரும் படிமம் அதிர்ச்சிதரக்கூடியது. முட்கம்பி அதிகாரத்தின் குறியீடாகத் தொடர்கிறது. தெளிவற்ற, பிரகாசமற்ற, நீதியும் ஒழுங்குமற்ற ஒரு வாழ்வு காலங்காலமாக மக்களைத் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

    தொகுப்பின் கவிதைகள் அதிகமும் உண்மைச்சம்பவங்களின் அடியாகவே பிறந்திருக்கின்றன. அவை எதிர்பார்க்கக்கூடிய அந்த வாழ்வுச் சூழலுக்குள் இருந்துதான் வந்திருக்கின்றன. உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகள் அவை.

   பொதுவாக, கவிதைகளின் வர்ணிப்புக் கோலத்தில் மூன்று நிலைகளைக் குறிப்பிடுவார்கள். ஓன்று: உணர்வினைத் தொற்ற வைக்கும் தனிநிலைக்கவிதைகள். இரண்டாவது: அந்த உணர்வினைப் பல நிலைகளில் வர்ணிப்பது. மூன்றாவது: அதற்கூடாகவே கதை சொல்லுவது. இங்கு ‘கதை சொல்வது’ என்ற அம்சம் எமது பழந்தமிழ் இலக்கியத்திற்குரியது. காவியத்திற்கானது. இதனைக் கதைக்கவிதை என்றழைப்பார்கள் விமர்சகர்கள். தீபச்செல்வனிடமும் அது நிகழ்ந்திருக்கிறது. இவரது ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பு உணர்வின் நுட்பமான செறிவான அம்சங்களைக் கொண்ட கவிதைகளென்றால் ‘கூடாரநிழல்’ அதன் தொடர் வடிவங்களாகின்றன. இன்றுவரையும் நவீன கவிதைகள் இதனையும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

   இந்தக்கூறு தொகுப்பில் எவ்வாறு வருகிறதென்றால் கால் இழந்துபோன பெண் ஒருத்தி எந்நேரமும் யாரையாவது எதற்கும் எதிர்பார்த்திருக்கும் நேரமாக இருக்கட்டும், ஒலிபெருக்கியில் இருந்து வரும் செய்திகளைக் கவனமாகக் கேட்கும் தருணங்களாக இருக்கட்டும், முகாமில் இருந்து சொந்த ஊர்களுக்கு எப்போ ஏற்றப்போகிறார்கள் என்ற தவிப்பும் எதிர்பார்ப்புமாக இருக்கட்டும், எல்லாமே சம்பவங்கள்தான்.

    உணவுக்கும் நீருக்கும் மலத்தின் மணத்திற்கு மத்தியிலும் மழைக்கு மத்தியிலும் வரிசையாக நிற்கும் தருணங்கள் என்று இக்கவிதைகள் விரிகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதற்குள் ஒரு தொடரோட்டம் இருக்கிறது. கதை இருக்கிறது. அதனால்த்தான் இவை கதைக்கவிதைகளாக (Fictional Poetry) விரிகின்றன. இதற்குக்காரணம் கதைகளாகவே எழுதவேண்டிவை இங்கு கவிதைகளாக வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் சொல்லியே ஆகவேண்டும் என்ற மனஆவேசம், அதற்கான ஒரு சமூகத்தேவை தீபச்செல்வனை உந்தித் தள்ளியிருக்கிறது.

   இத்தொகுப்பில் இருக்கும் மற்றொரு அம்சம் கவிதைகள் அதிகமும் ‘புறநிலையாகவே’ அமைந்திருத்தல். மஹாகவியின் ‘தேரும் திங்களும்’ போலிருக்கிறது. தீபச்செல்வனின் முன்னைய தொகுப்புக்களில் ‘அகம்’ மிகத்தூலமாக உணர்வுடன் பேசப்பட்டது. இங்கு கவிஞருக்கு என்ன நிகழ்ந்தது என்ற வினா எழுகின்றது. இத்தொகுப்பின் கவிதைகள் அதிகமும் உணர்வை சொற்செட்டுடன் எடுத்துக் கூறாமல் சிதறுகின்றன. நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று இயைபுபடுகின்றன. ஒலிபெருக்கிச் சத்தமும் இராணுவஅதிகாரியின் சட்டையில் இருக்கும் சின்னமும் குழந்தையின் ஆரவாரமும் ஒன்றுபடுகின்றன. ஆனால் இதுவே இங்கு சொல்லப்பட்ட வாழ்வின் அகம் சார்ந்த கவிதைகள் பற்றிச் சிந்திப்பதற்கும் இடங்கொடுக்கிறது. அதனை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இன்னும் பேசப்படாத பக்கங்கள் நிரம்ப உள்ளன.

   இந்நிலையில்தான் சமகால கவிதைகள் பற்றியும் பார்க்கவேண்டி இருக்கிறது. அந்தக் கூடார வாழ்வு பற்றி வெளியே இருந்து எழுதப்பட்ட ஏனைய கவிஞர்களின் கவிதைகளையும் இவற்றுடன் ஒன்றுபடுத்திப் பார்க்கவேண்டிய தருணங்களை இத்தொகுப்பு வேண்டி நிற்கிறது. அவை தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கும்போது மீளவும் ஒரு ‘மரணத்துள் வாழ்வோம்’ வருவதற்குக்கூட இடமிருக்கிறது.

   அகதிவாழ்வு, இடம்பெயர்வாழ்வு, முகாம் வாழ்வு எமக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டவைதான். ஆனால் இது ஒரு துயரத்தின் பின்னரான காலம் இரண்டாம் உலகப்போரில் பின்னர் மக்களின் சிதைவு எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு சிதைவு. தீபச்செல்வனின் கவிதைகளில் பேசப்படும் பக்கங்கள் இவ்வளவுதானா? என்ற கேள்வியும் மறுபுறம் இருக்கிறது. இழப்பு, துயரம், பசி, துக்கம், விரக்தி, ஏமாற்றம், தன்னை இழத்தல், பெண் சார்ந்த பதிவுகளும் இங்கு முக்கியமானவை.

   “யாரிடமும் கருணையில்லை”

  “உலகத்தில் எங்களைப் போன்ற சனங்களுக்காகவே கூடாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன”

  “நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்”

    இதுபோன்ற வரிகள் முக்கியமானவை.

   சாதாரண பேச்சுவழக்குச் சொற்கள் மிக இயல்பாக கவிதைகளில் வெளிப்படுவது கவனிக்கத் தக்கது. தொகுப்பை ஒட்டுமொத்தமாகப் படித்து முடிக்கையில் மேற்சொன்ன அகதிவாழ்வு பற்றிய உணர்வு தெரிய வருகிறது. ஈழத்திலக்கிய வரலாற்றில் கட்டங்கட்டமாக இந்த வாழ்வு குறித்து ஏற்கனவே பல படைப்புக்கள் பேசியிருக்கின்றன.

   ஓவியர் சனாதனனின் நிலம் மற்றும் பெயர்வு குறித்த ஓவியங்கள், செங்கைஆழியானின் ‘இரவுநேரப் பயணிகள்’ என்ற இடம்பெயர் வாழ்வு குறித்த சிறுகதைகள், அருளரின் ‘லங்காராணி’ (முதற்பெயர்வும் விடுதலைப் போராட்டத்துக்கான எழுச்சி குறித்த ஆரம்ப பதிவுகளும் கொண்ட நாவல்) மற்றும் தாமரைச்செல்வியின் வன்னிப்பிரதேசம் குறித்த வாழ்வைப்பேசும் படைப்புக்கள் என எங்கள் மக்களின் பெயர்வும் அலைச்சலும் இழப்பும் குறித்த படைப்புக்கள் பல உள்ளன. இறுதியாக, புகலிடப்படைப்பாளிகள் அங்கிருந்து பேசினார்கள். இத்தொகுப்பில் இந்த ‘அலைவு குறித்த அகதி வாழ்வின் உச்சம்’ மிகத் தெளிவாகத் தெரிகிறது.

  இக்காலகட்டத்தில் கவிதை எழுதிவருகின்ற இளம் கவிஞர்களில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியமானவை. நிலம் குறித்தும் அந்த நிலத்தில் வாழ்கின்ற மக்கள் குறித்தும் அந்த மக்களின் இன்றைய வாழ்நிலை குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் தீபச்செல்வன், இன்று கவிதை எழுதிவரும் ஈழத்துக் கவிகளில் முக்கியமானவராய்த் தெரிகிறார். பேரின் வடுவைச் சுமந்து வாழ்ந்து வரும் மக்களில் ஒருவராக நின்று இந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இந்தவகையில் காலமும் வாழ்வும் குறித்த கவிதைகளில் பேசப்படும் தொகுப்புக்களில் ஒன்றாக ‘கூடாரநிழல்’ கவிதைகளும் அமையும் என எண்ணுகிறேன்.

 (உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தீபச்செல்வனின் “கூடாரநிழல்” கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)