Saturday, February 25, 2023

அடையாளம் குறித்த தேடல்

 வ.ந. கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ - ஒரு பார்வை



சு. குணேஸ்வரன்

.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’  பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.

மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள்  சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.

அடையாளம் குறித்த கதைகள்

அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

Where are you from? என்று தலைப்பிட்ட சிறுகதையானது, புகலிடத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களை அந்நாட்டவர்கள் முதலில் கேட்கும் கேள்வியாக அமைகின்றது. இந்தக் கேள்வியினை எதிர்கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சலை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் இவ்வாறு கேட்பதோடு அடுத்தடுத்த வினாக்களையும் தொடுப்பார்கள் ‘அண்ணை ஊரில எந்த இடம்?’ என்பார்கள். இவர்களின் வினாக்களில் தொக்கி நிற்பது சாதியத்தை அறியவேண்டும் என்பதே!

மேலைத்தேயத்தவர்கள் நிறவாத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் சாதிய அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள் என்று இச்சிறுகதையின் தொடக்கமும் முடிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தனிக்கதையாக எழுதப்பட்டாலும் ஏனைய கதைகளிலும் இதன் உணர்வோட்டம் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.


ஒளிப்படம் நன்றி : யாத்திரிகன்

வெளிநாட்டில் அறிமுகமில்லாத இருவர் சந்தித்தால் முதலில் காலநிலையினைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவார்கள். அடுத்து Where are you from? என்று கேட்பார்கள். அவ்வாறு கேட்பவரை நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்கிறார். அதற்கு அவர்கள் கோபப்படுகிறார்கள். அதேபோல் வயதில் குறைந்த இளைஞர் ஒருவர் Where are you from? என்று கேட்கும்போது  உமக்கு வயது 20 எனக்கு வயது 30. ஆகவே, நீ எங்கிருந்து வந்தாய் என்பதைச் சொல் என்கிறார். இக்கதையிலும் எங்கிருந்து வந்தாய் என்று அவனிடம் மட்டுமே இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எங்கள் பிள்ளைகளிடமும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். உன் மூலம் என்ன? ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்? உன் தாத்தா பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்று நான் திருப்பிக் கேட்கும்போது ‘இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கிறாய் … கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கிறாய்’ என்று கோபப்படுகிறார்கள்.

ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்  என்ற சிறுகதையில் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதற்கு முயன்று தோற்றுப்போன கலிபோர்ணியாவில் வாழும் நைஜீரியன் ஒருவன், தன் மண்ணே சொர்க்கம் எனக் கூறுகின்ற மனநிலையைக் காட்டுகிறார். அந்த நைஜீரியன், கனடா ஒரு நாடா? என வெறுத்துப் பேசுகிறான். அதற்கு அவன் கூறும் காரணம் தனது நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமில்லை என்பது. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் அதிக குடும்பச் சுமையைத் தாங்கவேண்டியுள்ளது. அவற்றுக்காக இரவு பகல் பாராது மாடாக உழைக்கவேண்டியுள்ளது. எனவேதான் விரைவில் கலிபோர்னியா சென்றுவிடுவேன் என்கிறான்.

யன்னல் என்ற மற்றுமொரு சிறுகதையில் கறுப்பு மனிதனும் வெள்ளை மனிதனும் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள். ஒருவரையொருவர் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் அவர்களது செல்லப் பிராணிகள் தங்கள் மகிழ்ச்சியை சிநேகித்தைத் தெரிவிக்கின்றன.

மனித மூலம் என்ற கதை ‘நான்’ என்ற பாத்திரம் தன்னைப்பற்றிக் கூறுகின்ற ஒரு விபரணமாக அமைந்துள்ளது. மனிதர்கள் நிறத்தாலும் குணத்தாலும் வேறுபட்டு நிற்கிறார்கள். அவன் நடந்து கொண்டேயிருக்கிறான். எதிரே வருபவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.



இவ்வாறாக அடையாளம் தொடர்பான கதைகள் நான் யார் என்பதையும் நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் வினாக்களாக எழுப்புகின்றன. அதேநேரம் நிறத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் வேறுபட்டு இருப்பவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனிதர்களை நிறத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். ஏளனப்படுத்துகிறார்கள். இவர்களும் மனிதர்கள்தான் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு நூற்றாண்டுத் துயரமாகத் தொடர்கின்ற கதைகளை கிரிதரன் கூறுகிறார். புலம்பெயர் தமிழ் எழுத்துக்களில் இவ்வாறான கதைகளை ஆரம்பகாலங்களில் பார்த்திபன், கருணாகரமூர்த்தி ஆகியோரும் பதிவு செய்திருக்கின்றனர். கவிதைகளில் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன. அடையாளம் இழத்தல் என்பதும் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு புலம்பெயர்ந்த மக்கள் படும் பாடுகளும் புகலிடக்கதைகளில் வலிமையாகப் பதிவாகியுள்ளன.

தனித்து விடப்பட்டோர் மற்றும் அகதிகள்

தனித்து விடப்பட்டோர், அகதிகள் என்று கூறப்படுபவர்கள் ஒரு வகையில் அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளாகியவர்களாகவே அமைகின்றனர். இந்த வகைப்பாடும் உலகப் பொதுவான போக்காகவுள்ளது. யமேய்க்கனுடன் சில கணங்கள், மான் ஹோல், சொந்தக்காரன், புலம்பெயர்தல், வீடற்றவன், கலாநிதியும் வீதி மனிதனும் முதலான சிறுகதைகளை இந்த வகைப்பாட்டுக்குள் அடக்கலாம்.

முழு யமேய்க்க சமூகத்தையும் சமூக விரோதக் கும்பலாகப் பார்ப்பது, அவர்களை இழிவுபடுத்துவது போன்றவற்றை மேற்குலகத்தினர் செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலகச் சூழலை தாங்கள் அசுத்தமாக்கிக் கொண்டும் காடுகளை அழித்துக் கொண்டும் மூன்றாம் உ லக நாட்டவர்கள் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது எவ்வகையில் நியாயமானது என யமேய்க்கனுடன் உரையாடும்போது வினாவெழுப்புகிறார்.

நடைபாதையில் வசிப்போர் மற்றும் வீடில்லாதவர்களைப் பற்றிய கதைகளாக மான்ஹோல், சொந்தக்காரன், புலம்பெயர்தல் ஆகிய மூன்று சிறுகதைகளையும் கூறலாம்.  ஆசிரியரின் சூழலியல் சார்ந்த நுண்மையான அவதானிப்பை இக்கதைகளில் வரும் பாத்திரங்களுக்கிடையிலான தொடர்பு நமக்கு உணர்த்துகிறது.

மான்ஹோலின் நடைபாதையில் இருந்து தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவன் சிகரெட் பிடிப்பது, யாரிடமாவது வாங்கிச் சாப்பிடுவது, அதிகநேரம் தியானத்தில் இருப்பதுபோல அசையாமல் இருப்பது, நேரே தெரியும் பாராளுமன்றக் கட்டத்தைப் பார்த்து ‘அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன’ என ஒரு சித்தன் போல் பேசிக் கொண்டிருப்பது முதலானவற்றை மிக அநாயாசமாகக் காட்டுவார்.

இதேபோல் சொந்தக்காரன் சிறுகதையில் இருப்பிடமில்லாமல் பாதாளக் கட்டத்தில் தங்கும் அமெரிக்க பூர்வீக அகதி ஒருவனைப் பற்றி கதையில் கூறும்போது ‘நானோ அந்நிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்.’ என்று அகதிவாழ்விற்கு கதியாகிப்போன சுதேசிகளைக் குறிப்பிடுவார்.

புலம்பெயர்தல் என்ற சிறுகதையில் மனநிலை  பாதிக்கப்பட்ட வீடற்ற வாசிகளில் ஒருவன்  ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மூலையில் படுத்திருப்பான். அவனைக் கண்ட வெள்ளையன் ஒருவன் ‘பாம்’ இருக்கிறது என ஏளனமாகக் காவலாளியிடம் கூறுகின்றான். வீடற்றவன் என்று தலைப்பிட்ட மற்றொரு சிறுகதையில் வந்தேறு குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் இங்கு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காக வீடற்ற புதிரான மனிதன் ஒருவன் நகர மேயராகப் போட்டியிடுகிறேன் என்கிறான்.

கலாநிதியும் வீதி மனிதனும் என்ற கதையில் வீடற்ற வெள்ளையன் ஒருவன் மூன்றாம் உலக நாட்டவர்களைப் பார்த்து உங்களால் எங்களுக்கு வேலை இல்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டியவற்றையெல்லாம் நீங்கள் களவாடிவிட்டீர்கள் என்று வசைச்சொற்களை வீசுகிறான்.

புகலிடத்தில் வாழ்கின்ற வீடற்றவர்கள், தனித்து விடப்பட்டோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் முதலானவர்களின் வாழ்நிலையையும் அவர்களின் மனநிலையையும் இக்கதைத் தொகுதியில் காணமுடிவது ஒரு வகையில் தமிழ்அனுபவச் சூழலில் புதிய களங்களையும் புதிய வாழ்க்கை நெருக்கடிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

பொற்கூண்டுக் கிளிகள் என்ற கதை முதுமையின் தனிமை பற்றிக் கூறுகிறது. முதிர்ந்த வயதில் ராஜரத்தினத்தார் தனித்து விடப்பட்டமை இக்கதையில் சொல்லப்படுகிறது.

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்ற சிறுகதை மிக நாசூக்காகச் சொல்லப்பட்டதாகும்.  கட்டடங்களில் தனித்து வாழும் மனிதர்கனின் ஆசைகள் நிராசையாகிப் போகின்றமை. தற்கொலை முயற்சிகள் முதலானவை பற்றி சிந்திப்பதற்கு இடமிருக்கிறது. முயல்களை இக்கதையில் உருவகமாகக் கொண்டு பார்த்தால் அவையுங்கூட மனித வாழ்வையே சொல்வதாக அமைகின்றது.

தமிழர் மனநிலை

புலம்பெயர்ந்த தமிழர் மனநிலையையும் பெண்களின் மாற்றங்களையும் மனோரஞ்சிதம், சீதாக்கா, கணவன், மனைவி, சாவித்திரி ஒரு சிறீலங்கன் ஆகிய கதைகள் ஊடாகக் காட்டுவார். இவை உளவியல் ரீதியிலும் அணுகப்படவேண்டிய கதைகளாக உ ள்ளன. 

மனோரஞ்சிதம் என்ற சிறுகதையில் பெண்ணுக்கு தாலி ஒரு வேலி எனவும், நடை உடை பாவனையில் புதுமையை விரும்புவதுமாக தாயகத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருத்தி, திருமணமாகிப் புகலிடம் வந்தபின்னர் முழுவதுமாக மாறி விடுகின்ற சந்தர்ப்பத்தைக் காட்டுவார். பொ. கருணாகரமூர்த்தியின் ‘மாற்றம்’ குறுநாவலில் இது போன்றதொரு பாத்திரத்தை அவதானிக்கலாம். பெண் திருமணமாகி வந்தபின்னர் கணவனுக்கு ஏற்றாற்போல மாற்றமுறுவதையும் குடும்ப நெருக்கடிகளால் தனது இலட்சியத்தை கைவிடும் அவலத்தையும் கிரிதரனின் இக்கதையும் சித்திரிக்கின்றது. இன்று பெண்சார்ந்த விடுதலையுணர்வை வெளிப்படுத்தும் படைப்புக்கள் அதிகம் வெளிவருவதையும் இத்தருணத்தில் நினைவுகொள்ளலாம்.


தமிழர் மனநிலையை சீதாக்கா, கணவன் ஆகிய சிறுகதைகள் காட்டுகின்றன. ஊரில் அறிமுகமான சீதாக்கா புலம்பெயர்ந்து வந்தபோது அவளுக்கு மற்றுமொரு தெரிந்தவ ஆண் உதவி செய்வதை தவறான பார்வையில் நோக்கி குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்தும் சக மனிதனின் இழிநிலையை கிரிதரன் காட்டுகிறார். நாம் புலம்பெயர்ந்தோம் புலன் பெயர்ந்தோமா? என்ற கேள்வியையும் கூடவே எழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார்.

கணவன் என்ற சிறுகதை ஏஜென்சி மூலம் சிங்கப்பூர் ஊடாக அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் மீது கணவன் சந்தேகம் கொள்ளுதலும்; ஏனைய இரண்டு கதைகளாகிய மனைவி, சாவித்திரி ஒரு சிறீலங்கன் ஆகியவற்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் குடும்பமுரண்பாடுகள் அவர்களின் பிள்ளைகளை எவ்விதம் பாதிக்கின்றது என்பதையும் காட்டுகின்றன.

எனவே,  தமிழர் மனநிலை அதிகமும் பெண்கள் தொடர்பான குடும்ப உறவு நிலையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பானவையாக அமைந்துள்ளன.

புகலிட வாழ்நிலை அனுபவங்கள் குறித்த கதையினையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். ஆசிரியரும் மாணவனும் என்ற கதையில் பொறியியலாளராகப் படித்த ஒருவன் புகலிடத்தில் துப்பரவுத்  தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுவதை நினைத்து வருந்துகிறான். அதேநேரம் அவனுக்குக் கற்பித்த ஆசிரியர் தானும் வேலை தேடும் படலத்தில் ஈடுபடுகிறார். இருவரும் தத்தமது நிலையை மறைத்து உரையாடுகின்றனர். இவ்வாறான அவலமான வாழ்நிலை அனுபவங்களும் இத்தொகுப்பில் உள்ளன.  அந்நியர்களாக இருந்தாலும் ஆபத்து வேளையில் உதவி செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை பொந்துப் பறவைகள் கதை கூறுகிறது. புலம்பெயர்ந்தோரின் நெருக்கடியாகன வாழ்வை கட்டடக்காடுகள் என்று காலம் செல்வம் உருவகித்ததுபோல் கிரிதரனும் அந்தக் கட்டடங்களில் வாழும் மனிதர்களைப் பொந்துப் பறவைகளாக உருவகித்துள்ளார்.

சூழலை வாழ்வியலுடன் ஒப்பிடுதல்

சூழலை வாழ்வியலுடன் ஒப்பிடும் சுண்டெலிகள், தப்பிப் பிழைத்தல், காங்ரீட் வனத்துக் குருவிகள், ஒரு மாநாட்டுப்பிரச்சினை ஆகிய நான்கு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

சுண்டெலிகளின் தொல்லையால் அதனை அழிப்பதற்காக அதன் ஒவ்வொரு அசைவையும் அறியக் காத்திருக்கிறார் ஒருவர். ஒருவேளை உணவுக்கான எலியின் தேடுதல், உயிர்வாழ்வதற்கு அது எடுக்கும் பிரயத்தனம் ஆகியன  எலியின் மீது இரக்கத்தை வரவழைக்கிறது. இக்கதையை மனித வாழ்வுடன் ஒப்பிடலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனால்தான் செ. கணேசலிங்கம் இக்கதை பற்றிக் குறிப்பிடும்போது ‘சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தை கூறுகிறது’ என்று எழுதுகிறார்.

தப்பிப் பிழைத்தல் என்ற கதையில் உணவுக் கழிவுகளைக் கொட்டும் பெட்டியில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அது ஏன் என்ற வினா எழுகிறது. இங்கும் ஓர் அணிலை மனித வாழ்வுடன் ஒப்பிட்டு எந்தச் சூழலிலும் உயிரினம் தப்பிப் பிழைப்பதற்கு வழியொன்று இருக்கும் என்பதை கதாசிரியர் உணர்த்துகிறார்.

காங்ரீட் வனத்துக் குருவிகள் என்ற கதையில் அதிக பனி நாள்களில் ஏனைய குருவிகள் தமக்கு ஏற்ற இடத்திற்கு பறந்து போயிருக்க ஒரு மரத்தில் வாழும் சில குருவிகள் தங்கள் இடத்தை மாற்றாமல் பனியில் உறைந்து சிலையாகி விடுகின்றன. எதற்காக இந்தக் குருவிகள் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தன என தாயக வாழ்நிலையோடு ஆசிரியர் ஒப்பிட்டுப் பார்த்து வினா எழுப்புகிறார்.


ஒரு மாநாட்டுப் பிரச்சினை என்ற சிறுகதை டொராண்டோ வீதியொன்றில் ‘மூஸ்’ என்னும் மானினத்தை ஏற்றிச் சென்ற ட்ரக்டர் டிரெயில’ரிருந்து தப்பிய மிருகத்தின் கதை. இதை இலங்கைச் சிறைக்கூடத்தில் அடைபட்டுக் கிடக்கும் தமிழர் மனநிலையுடன் ஒப்பிடுகிறார். ‘ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை. இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனையோ? அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள். தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்’  என்ற கூற்று இலங்கைச் சிறையில் வாடுபவர்களையும் அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்து வாழக்கூடியவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

மேற்காட்டிய கதைகள் சூழலியல் அனுபவங்கள் குறித்தனவாக அமைந்துள்ளன. தொடர்புபட்ட உயிரினங்களை மையமாக வைத்து எழுதப்பட்டாலும் அக்கதைகளில் இருப்பது மனித வாழ்விலும் ஏற்படக்கூடிய நெருக்கடிகள்தான். இக்கதைகள் புதிய கதைக்களங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

நிறைவாக

கிரிதரனின் இக்கதைகள் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளன. அதனால் 90 களின் ஆரம்பகாலக் கதைகளும் இதற்குள் அடங்கியிருக்கின்றன. தாயக வாழ்வு சார்ந்த கதைகளையும் அதனுடன் இணைந்த கதைகளையும் அதிகமான படைப்பாளிகள் எழுதியிருக்கின்றனர். ஆனால் கிரிதரனின் இக்கதைத் தொகுப்பு அதிகமும் புலம்பெயர்ந்த மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வியல் அனுபவங்களின் திரட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக மூன்றாம் உலக நாட்டவர்கள் சுதேச நாட்டவரால் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிக அதிகமான கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சூழலியல் அனுபவங்களுடன் தனிமனித வாழ்வனுபவங்களை ஒப்பீடு செய்வதும் முக்கியமானது. ஆரம்பகாலக் கதைகள் சிலவற்றில்  தன்னுணர்வு சார்ந்த வெளிப்பாடும் விபரணத் தன்மையும் தலைகாட்டுவதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட கதைகளில் அந்தக் குறைகள் களையப்பட்டுள்ளன. வ. ந. கிரிதரனின்  ஒவ்வொரு கதைகளில் வருகின்ற கதைசொல்லியும் ஒரு பார்வையாளனாக, ஒரு நடைபயணியாக  கனேடியத் தெருக்கள் முதல் ஒடுங்கலான பாதைகள் வரை வாசகரையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழரின் மனவுணர்வுகளை சூழலியல் அனுபவத்துடன் இணைத்துக் கதை கூறுகின்ற கிரிதரனின் கதைசொல்லும் நேர்த்தி வரவேற்கத்தக்கதாகும். கிரிதரனின் எழுத்துக்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் எழுத்துக்களுக்கு வளம் சேர்க்கக்கூடியவை என்பதற்கு இத்தொகுப்பும் சான்றாக அமைந்துள்ளது.

நன்றி : இலக்கியவெளி, இதழ் 2, கனடா

---

சயந்தனின் ஆறாவடு - ஒரு பார்வை



கலாநிதி சு. குணேஸ்வரன்

புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் அரசியல் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டனவாக 80கள் முதலே பல புனைவுகள் வெளிவந்துள்ளன. இதற்கு ஈழத்திலும் தமிழகத்திலும் வெளிவந்த ஈழத்தவரின் முன்னோடிப் படைப்புகளை ஒருமுறை நினைவு கொள்ளலாம். மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனிவீடு’ தொடக்கிவைத்த அரசியல் சார்ந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியை அருளரின் ‘லங்காராணி’யில் காணமுடிந்தது. அதேபோல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, செழியனின் ‘ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’ ஆகியவற்றுக்கூடாக போராட்ட இயக்கங்களின் உள்ளரசியல் பேசப்பட்டது. ஆனால் இவ்விரண்டு போக்குகளைக் கடந்தும் இணைந்தும் பல படைப்புக்கள் 2009 இற்கு முன்பின்னாக வெளிவந்துள்ளன. இவை யாவும் அரசியல் சார்ந்த புனைவுகள் என்ற ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடியவை.

ஈழத்தில் மண்வாசனை நாவல்கள் வெளிவந்த காலத்தைத் தொடர்ந்து 1950 கள் முதல் மொழியுரிமை மற்றும் இனமுரண்பாடு சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியும் பல நாவல்கள் தோன்றின. ஒரு புறத்தில் தமிழ்த்தேசிய ஆதரவு சார்ந்த எழுத்துகளும் மறுபுறத்தில் இயக்க உள்ளரசியல் முரண்பாடுகளைப் பேசிய படைப்புகளும் இன்றுவரையிலும் தொடர்கின்றன. அதேவேளையில் இரண்டு போக்குகளுக்கும் அப்பால் மாற்றுச் சிந்தனை என்ற வகையிலும் கணிசமான படைப்புகள் வந்துள்ளன. அவற்றுள்ளும் நுண்ணரசியலை வெளிப்படுத்தும் வித்தியாசங்களை அறியமுடியும். கருத்தியல் அடிப்படையிலும் புனைவின் தீவிரத்தன்மையிலும் தமிழ்ச்சூழலில் ஈழப்படைப்புகளைக் கவனங்கொள்ள வைத்த பல நாவல்களை இவற்றுக்கு உதாரணங் காட்டலாம். இந்த வகையில் ஒரு பொதுத்தளத்தில் கடந்த காலச் செயற்பாடுகளைப் பதிவு செய்த அல்லது விமர்சித்த நாவல்களின் வரிசையில் வந்து சேரக்கூடியதாகவே சயந்தனின் ஆறாவடு அமைந்திருக்கிறது.



1987 முதல் 2003ற்கு இடைப்பட்ட காலத்தைக் களமாகக் கொண்டு ஆறாவடு நாவல் இயங்குகின்றது. இரண்டு சமாதான ஒப்பந்தங்களுக்கு இடைப்பட்ட காலங்களிலுங்கூட தமிழ்மக்கள் எவ்வாறான இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதனையே நாவலின் கதைக்காலம் குறிக்கின்றது. 

“நிகழ்கால நடப்பியலைச் சித்திரிப்பதற்கு கடந்த காலத்தின் மீதான விசாரணைகள் அதன் தாக்கங்கள் அதன் மீதான தீர்ப்புகள் கடந்த காலம் முடிந்தேறிவிட்ட ஒன்றா அல்லது இன்னும் அது நிகழ்காலத்தின் மீது நிழல் விழுத்தி நிற்கிறதா என்பது பற்றிய தெளிவு என்பனவெல்லாம் அவசியமானவை.” (யமுனா ராஜேந்திரன், ஈழத்து அரசியல் நாவல்கள்) என்ற கூற்று கடந்த காலத்தை ஏன் எழுதவேண்டும் என்பதற்கான பதிலாக அமைந்திருக்கிறது.

இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலங்களிலும் அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள் நிகழ்ந்துள்ளன. இந்த நாவலை வாசிக்கின்றபோது அந்தக் காலங்களோடு விடலைப் பருவத்தில் எதிர்கொண்ட அனுபங்களும் கூடவே நினைவை அச்சுறுத்துகின்றன. அக்காலத்தைக் கடந்த அதிகமான இளைஞர்கள் அனுபவித்திருக்கக்கூடிய பொதுமையான ஒரு போக்காகவே இது அமைந்திருக்கின்றது. இந்த அச்சத்திற்கு இந்திய இராணுவத்துடன் இணைந்து இயங்கிய ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவும்கூட, காரணமாக இருந்திருக்கின்றது.

மறுபுறம் தமிழ் மக்களின் விடுதலைக்குத் தொடர்ச்சியாகப் போராட்டக்களத்தில் நின்ற தமிழ்ப் போராளிகளும் மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர். போராட்டகாலச் சம்பவங்கள், நிர்வாகக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஆகியன இந்நாவலின் கதைகளுக்கு ஊடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கும் இளைஞர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தனிமனித சுதந்திரம் என்பது அமைப்பின் பெயரால் கட்டுப்படுத்தப்பட்டது. ‘இது சரியில்லை அல்லவா?’ என்பதுபோல பல பாத்திரங்களின் ஊடாக சயந்தன் வெளிப்படுத்துவார். இயக்கத்திற்கு மொழிபெயர்ப்புப் பணி செய்கின்ற நேரு ஐயாவுக்கூடாகவும் அமுதன் என்ற பாத்திரத்திற்கூடாகவும் இந்த வெளிப்பாட்டை கச்சிதமாக சயந்தன் கொண்டு வருகிறார்.

நாவல் இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. ஒரு புறத்தில் நீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குப் படகுப்பயணம் மேற்கொள்கின்றபோது நிகழ்கின்ற சம்பவங்களினடியாகச் சொல்லுதல். மறுபுறத்தில் நனவோட்ட உத்தியாக 1987 - 2003 காலகட்ட அரசியல் நிலைமைகளை சொல்லுதல்.

1987- 1990 இந்திய அமைதிகாக்கும் படையினரின் சமாதான காலமாகவும் அதற்குப் பின்னர் 2003 காலகட்டம் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்த காலமாகவும் இருந்திருக்கின்றன. இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலும் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் கோர்வையாக இந்நாவல் அமைந்திருக்கிறது.

அமுதன் முதலான இளைஞர்கள் இத்தாலி செல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து புறப்படுகிறார்கள். படகுப்பயணம் அவர்களுக்கு சோர்வையும் துக்கத்தையும் அச்சத்தையும் கொடுக்கிறது. பயணத்தில் சிறுவன் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றான். அவனின் சடலத்தைக் கடலில் வீசிவிட்டுச் செல்லவேண்டிய அவலம் நேர்கிறது. இவர்களோடு பயணம் செய்த பெரியய்யாவும் புயற்காற்றினால் அடித்துச் செல்லப்படுகிறார். இவ்வாறு கடற்பயணத்தில் கூடவந்தவர்களை கண்முன்னாலேயே இழப்பது பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இது நாவலின் ஒருகட்ட நகர்வாக அமைந்திருக்கிறது.

நாவலின் மற்றைய நகர்வு நனவோடை உத்தியில் அமைந்துள்ளது. இதனூடாகவே இரண்டு சமாதான காலங்களின் நீட்சிக்கூடான மக்களின் வாழ்நிலை அவலம் சொல்லப்படுகிறது.

பெரும் எடுப்பில் யாழ்ப்பாண இடப்பெயர்வு நிகழ்கிறது. அதனால் மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிறார்கள். திலீபனின் இறப்புக்குப் பின்னரான போராளிகளின் தலைமறைவுச் செயற்பாடுகள், நிலாமதியின் கதை, இடம்பெயர்ந்த மக்கள் கோயில்களிலும் தங்குதல், சாதிய வேறுபாடுகள், குடாரப்பு தரையிறக்கம், இந்தியப் படைகளுடன் வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈழத்தமிழ்ப் போராளிக் குழு இணைந்திருத்தல், தேவியின் கதை, சமாதான காலம், ஏ9 பாதை திறப்பு,  சுகன்யா லோகன் கதை, இந்திய இராணுவம் வெளியேற்றம், முல்லைத்தீவுத் தாக்குதல், விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அரசியற் பணிகள் முதலானவற்றைச் சுற்றி கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எல்லாமே தனித்தனிச் சம்பவக் கோர்வைதான். அச்சம்பவங்கள் ஒன்றுசேர்ந்து நாவலாகக்கூடிய இழை பிரதான பாத்திரமாகிய அமுதனுக்கூடாகவே நிகழ்கின்றது. மற்றைய சில பாத்திரங்கள் தவிர ஏனையவற்றில் கதைத்தொடர்ச்சியோ சம்பவத் தொடர்ச்சியோ இல்லை. இதனாலேயே வடிவ அடிப்படையில் இது நாவலாக அமையவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இது நாவலென்ற வடிவத்தை எங்கே பெறுகிறது என்ற வினா முக்கியமாகின்றது. 

“பயணிகள் எதிர்பார்த்திருந்தபடி அவர்கள் இத்தாலி போய்ச் சேர்ந்திருந்தாலும் உட்பிரதியின் தன்மை மாற்றடையாமலேதான் இருந்திருக்கும். மொழியையும் மதத்தையும் இனம்சார் மற்றும் கூறுகளையும் ஒரு ஒற்றைவழிப் பயணமானது தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை ஒதுக்கி வைத்துவிடுகிறது. அது கப்பல் பயணமாக மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆறாவடு ஒரு சம்பவக்கோவை நூலாகவிருந்து நாவலாக நிமிர்கின்ற இடம் இந்த உட்பிரதிக் கூறினாலேயே நிகழ்கிறது.” (பதிவுகள்) என்று தேவகாந்தன் குறிப்பிடுகிறார். 

இவ்வாறான போக்கை Non linear narrative முறையிலமைந்த கதையெனக் குறிப்பிடுவர். நேர்கோட்டுப் பாணியில் அல்லாது வேறு வேறு சம்பவங்களைக் கூறிச்செல்வது. ஒரு வகையில் அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’, சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ முதலானவை தமிழ்ச்சூழலில் நல்ல உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.

இடப்பெயர்வின் காரணமாக உறவுகளை இழந்த அவலம் (படுத்த படுக்கையிலிருந்து நகர முடியாத தாயை விட்டு வந்த சிவராசன் கதை) உள்ளுர் இடப்பெயர்வின் காரணமாக ஒரு சாரார் ஒடுக்குதலுக்குள்ளான மக்களை கோயில்களில் தங்குவதற்கு முட்டுக்கட்டை போடுதல், புலப்பெயர்வின் காரணமாக (படகுப்பயணம்) சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து இறுதியில் எரித்திரியக் கடற்பகுதில் படகுவிபத்து ஏற்பட்டு படகில் சென்றவர்கள் உயிரிழத்தல்,  ஆயுதம் தாங்கிய அனைத்துத் தரப்பினராலும் ஏற்படுத்தப்படும் மரணங்கள், பண்பாட்டு அழிப்பு முதலானவற்றை மக்களின் பக்கம் நின்று சயந்தன் பேசுவது மிக முக்கியமானது.



சண்டிலிப்பாய் அளவெட்டி தாக்குதலுக்குப் பின்னர் இராணுவம் யாழ் குடாவைப் பிடிக்கின்றது. மக்களுடன் இயக்கத்தினரும் வன்னிக்கு நகர்கின்றனர். இந்த இடப்பெயர்வு பெருந்துயர் நிறைந்தது. அதனை ஒரு காட்சியில் சிவராசன் குடும்பத்திற்கு ஊடாக காட்டுகிறார். பாரிசவாத நோயாளியான தாயாரை பின்னர் சென்று அழைத்துவருவோம் என தனது மூன்று பெண்பிள்ளைகளையும் மனைவியுடன் அழைத்துக்கொண்டு செல்கிறார். செல்லும்போது தாயாருக்கு அருகில் தண்ணீர்ப் போத்தல் குளிசைகளையும் எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார். இயக்கப்பொடியள் முகவரியைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். அங்கு தப்பியொட்டி நிற்கும் யாராவது உதவி செய்யக்கூடும் என எண்ணுகிறான். இவையெல்லாம் யாராவது அம்மாவுக்கு உதவி செய்வார்கள் என்று நம்ப வைக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கை எவ்வாறு பொய்யாகிப் போகிறது என்பது நாவலின் ஒரு காட்சியில் மனதைக் கல்லாகும்படி சொல்லப்படுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம்.

“ஆறு மாதத்தில் றோட்டுகளும் ஒழுங்கைகளும் வளவுகளும் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தன. சருகுகளும் கஞ்சல்களும் குவிந்துபோய்க் கிடந்தன. வீட்டைக் கண்டதும் பொலபொலவென்று கண்ணீர் வந்தது. சிவராசன் படலையடியில் சைக்கிளைப் போட்டுவிட்டு அம்மா என்று கத்திக்கொண்டு கட்டில் அருகே ஓடினார். வளவிற்குள் ஒரு வித்தியாசமான மணம் பரவியிருந்தது. வெளி விறாந்தைக் கட்டிலில் இன்னமும் ஊனம் வடிந்து கொண்டிருந்த எலும்புக் கூடொன்று நீட்டி நிமிர்ந்து கிடந்தது. அருகில் சில மருந்து டப்பாக்களும் தண்ணீர் இல்லாத ஐந்து பெரிய க்ளாஸ்களும் இருந்தன. கட்டிலில் புழுக்கள் நெளிந்தன.”

இதனாலேயே “எமது சமூகத்தில் நிகழ்ந்த அவலங்களைப் பேசுகின்ற ஓர் மனச்சாட்சிதான் ஆறாவடு” (thuuu.net)  என்று அசுரா எழுதுகிறார்.

கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தல் என்பதற்கும் அப்பால் ஒருவன் உயிர்வாழ்வதற்கு எடுக்கக்கூடிய ஆகக்குறைந்த எத்தனங்களை இந்நாவலில் சயந்தன் பதிவு செய்வார்.

“சுடலையில் மத்தியான நேரத்துச் சவம் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. பிரேதத்தை எரிக்கிறபோது உடனடியாகக் கிளம்பும் மணங்கள் தணிந்திருந்தன. பஸ்ஸிலிருந்து ஆமிக்காரர்களும் மற்றையவர்களும் தொப் தொப் என்று குதித்தார்கள். இவர்கள் அவ்வளவு பேரையும் இழுத்துக் கீழே போட்டார்கள். இருளில் கரிய உருவங்களாக அவர்கள் அசைந்தார்கள்.

எல்லோரும் அப்பிடி அப்பிடியே குப்புறப் படுங்க

துப்பாக்கி லோட் செய்யப்படுகிற சத்தம் எதையோ முறிக்கிற மாதிரிக் கேட்டது.

இவனது இரத்தம் சில்லிட்டு உறைந்ததைப் போல உணர்ந்தான். அடிவயிற்றுக்குள் குளிர்ந்தது. வாயிலிருந்து எச்சில் தன் பாட்டில் வழிந்து கொண்டிருந்தது. பிறகு இன்னுமொரு வெடியொலி கேட்டது. ஒவ்வொரு சத்தத்தின்போதும் இவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். சத்தங்கள் ஒன்று இரண்டு மூன்று எனத் தொடர்ந்து கொண்டிருந்தன. அடுத்த குண்டு தனக்கானது என்ற நினைப்பு. ஒவ்வொரு முறையும் உள்ளே ஓடிற்று. ஏழு அல்லது எட்டுக் குண்டுகள் பாய்ந்த பிறகும் இவன் உயிரோடிருந்து அழுது கொண்டிருந்தான்.”

துப்பாக்கி மனிதர்கள் இவர்களை தங்களுடன் சேர்ந்தால் உயிருடன் விட்டுவிடுவதாகக் கூறுவது கேட்டு

“அவன் சின்ன இடைவெளி விட்டுத் தொடர்ந்தான். இல்லாட்டி வேறை வழி இல்லை எல்லாரும் இப்பொழுதே போய்ச்சேர வேண்டியதுதான். ம். யாரெல்லாம் வாறியள்.. யாரெல்லாம் போறியள்…

சந்திரன்தான் முதலில் கையை உயர்த்தினான். பிறகு தேவபாலு இரண்டு கைகளையும் சரண்டர் ஆவதைப்போல உயர்த்தினான். மூன்றாவதாக இவனது கை உயர்ந்தது.:”

உயிர்; போகக்கூடிய இறுதிக் கணத்தில் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் வாழ்வதற்கான வழியைத் திறக்கிறது. மற்றெவற்றையும் எண்ணிப் பார்க்கவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தினருடன் இணைந்திருந்த தமிழ்ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் தப்பித்தலுக்காக விடுதலைப் புலிகளுக்கு ஆதாரவாகவும் செயற்படுகிறான். இவற்றை நாவலின் பல சம்பவங்கள் விபரிக்கின்றன.

இந்நாவல் தொடர்பான விமர்சனங்களில் அதிகமானோர் குறிப்பிடுவது குறித்த காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை நாவல் கருத்திற் கொள்ளவில்லை அல்லது சொல்லாமல் விட்டது பற்றி. இதற்கூடாக சயந்தனும் தன்னிலைச் சார்புடன் சிலவற்றைத் தவிர்க்கிறாரா என. இது “ஒன்றைச் சொல்வதின் மூலம் எடுக்கும் சார்புநிலைபோலவே, எதுவொன்றையோ பலதையோ சொல்லாமல் விடுவதின்மூலமும் தன் சார்புநிலையைத் தக்க வைக்க முடியும்” (தேவகாந்தன், பதிவுகள்) என்ற கருத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சயந்தன் கூறுவதுபோல் இரண்டு சமாதான காலங்களிலும்கூட அதிகாரங்களினால் மக்கள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதும் சிதைக்கப்பட்டார்கள் என்பதும்தான். ஒருபுறம் தனிநபர் மீதான கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. எப்படியேனும் அதற்குக் கட்டுப்பட்டு ஒழுக வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக கொள்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உயிரை விடவேண்டிய அச்சநிலை ஏற்பட்டது. இவற்றை மிகச் சிறப்பாக இயக்கத்திற்கு மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யும் நேருஐயா பாத்திரத்திற்கு ஊடாகக் காட்டுகிறார்.

“இயக்கத்தைப் பிடிக்காது. இயக்கம் செய்யிற ஒண்டும் பிடிக்காது. பிறகெதுக்கு இயக்கத்துக்கு வேலை செய்யிறியள்.” என்று நான் நேரு ஐயாவிடம் கேட்டேன். .

அவர் சிம்பிளாக “சம்பளம் தாறியள்” என்றார். அப்படிச் சொல்லும்போது விரல்களால் பணத்தாள்களை எண்ணுவது போல காட்டினார்.

“அப்ப ஆமிக்காரனும் சம்பளம் தருவான். அவனிட்டையும் போய் வேலை செய்வியளோ” என்று றோட்டைப் பார்த்துக் கொண்டு நின்று கேட்டேன். 

“ஒப் கோர்ஸ்” என்ற சத்தம் பின்னால் கேட்டது.

எப்பொழுதும் இயக்கத்தைக் குற்றம் சொல்லும் நேரு ஐயா, பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் மேடையில் இயக்கத்தைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்ததை அமுதன் காண்கின்றான்.

கப்பல் பயணம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதற்கு சிறுவனின் சாவும் பெரியய்யாவின் சாவும் எடுத்துக்காட்டாக அமையக்கூடியவை. இறுதியில் கப்பல் எரித்திரிய நாட்டோரக் கடலில் மூழ்கிவிடுகின்றது. அங்கிருந்து மிதந்து வந்த அமுதனின் பிளாஸ்ரிக் கால், யுத்தத்தில் காலிழந்த எரித்திரியக் கிழவருக்குப் பொருந்துகிறது. எரித்திரியக் கிழவர் தனது நாட்டின் விடுதலை பற்றிய நிறைய கனவுகளோடு இருந்தவர். இறுதியில் அவரால் என்ன செய்ய முடிந்தது. கடற்கரையில் மீன்பிடிப் படகுக்காரருக்கு சில உதவிகள் செய்து அதிலிருந்து வருவதைக் கொண்டு பிழைத்துக் கொள்ளத்தான் முடிகிறது. இந்தச் சம்பவம் நாவலை வேறொரு கோணத்திற்கு நகர்த்துகின்றது. இந்த இறுதி அத்தியாயம் மிகக் கட்டிறுக்கமாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் அமைந்து விடுகிறது. அதிகமாக விடுதலைப் போராட்டங்கள் வெறும் கனவுகளாகவே கலைந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்களாக மிஞ்சப்போவன மனிதர்களின் வாழ்க்கைச் சிதைவுகள்தான் என்பதனை இது காட்டுகிறது.

நாவலின் இயல்பான மொழிநடைக்கும் பொருத்தமான இடங்களில் சொற்களைக் கொண்டு கட்டமைக்கின்ற உணர்வு வெளிப்பாடும் மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. நீர்கொழும்பிலிருந்து படகுப் பயணம் தொடங்கியபோது தங்களுடன் சிங்கள இளைஞர்களும் வருகிறார்கள் என்று அறிந்தபோது

“அவர்களும் தங்களோடு வரப்போகிறார்கள் என்பது இவனது மனதை அரிக்கத் தொடங்கியது. அதுவரை ஊறிநின்ற சந்தோசம் கால்களின் கீழே அலை நீரில் மணல் கரைவதைப் போல கரைவதை உணர்ந்தான்.” என்று கூறுவது ஒரு வேறுபட்ட மனநிலைதான்.

சிங்களவர்களைப் பார்த்து தமிழர் பயம்கொள்வதும் சிங்களவர் தமிழரைப் பார்த்து ஐயம் கொள்வதுமாகத்தான் இந்தக் காலங்கள் கடந்திருக்கின்றன. இந்த மனநிலை இங்கும் வருகிறது. சூழல்களின் தாக்கத்திலிருந்து உயிர்வேட்கையுடன் தப்பித்தலுக்குரிய காலங்களிலும்கூட படகில் சிங்களவர்களும் தமிழர்களும் வேறுவேறாகத்தான் இருக்கிறார்கள். பண்டாரவைத் தவிர அவ்வளவு இயல்பாக உரையாடல் நிகழவில்லை என்பதைத்தான் நாவல் தெரிவிக்கிறது.

எனவே, ஈழத்து இனவுணர்வுச் சூழலால் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தை அனுபவித்தார்கள் என்பதை ஒரு குறுக்கு வெட்டுமுகமாக இந்நாவல் காட்டுகிறது. இங்கு சொல்லப்பட்ட எல்லாச் சம்பவங்களும் தனித்தனியாக மக்களின் சமூக பண்பாட்டு அரசியல் வரலாற்றினைக் காட்டக்கூடியவை. விலைமதிக்கமுடியாத உயிர்களையும் மக்களின் நிம்மதியான வாழ்வையும் ஆயுதங்களும் ஆயுததாரிகளும் அதிகாரத்தைக் கையில் ஏந்தியவர்களும் உருத்தெரியாமற் சிதைத்துவிட்டார்கள். அந்தச் சிதைவிலிருந்து மீண்டெழுவதற்கும் மீளவும் இருளில் தள்ளப்படாமல் இருப்பதற்கான எச்சரிக்கைகளைக் காட்டுவதாகவும் ஆறாவடு அமைந்திருக்கிறது. எழுத்தாளர் ஷோபாசக்தி கூறுவதுபோல் இது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதியாக இருந்தாலும் குறித்த காலகட்ட அரசியலைப் பேசிய பிரதியாகவும் அமைந்திருக்கிறது.

நன்றி : ஜீவநதி, ஈழத்துஅரசியல் நாவல்கள் சிறப்பிதழ் – 1, தை 2023.