Saturday, July 26, 2025

வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிக்கும் நீ பி அருளானந்தத்தின் 'புண்ணியபுரம்'

 


- கலாநிதி சு. குணேஸ்வரன்

 தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.

   வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிப்பதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவில்லை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம்.

   ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. 'மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு' என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

  ஈழத்தில் மோகனாங்கியின் தொடர்ச்சியாக அவ்வப்போது பலர் வரலாற்று நாவல் எழுதுகையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சி.வை சின்னப்பபிள்ளையின் விஜயசீலம் (1916), செங்கை ஆழியானின் நந்திக்கடல் (1969), வ.அ. இராசரத்தினத்தின் கிரௌஞ்சப் பறவைகள் (1975), முல்லைமணியின் வன்னியர் திலகம் (1998), செங்கை ஆழியானின் குவேனி (2001), மு. சிவலிங்கத்தின் பஞ்சம் பிழைக்க வந்த சீமை (2015) முதலானவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

  ஆனால் தனியே வரலாற்று நவீனம் என்று அல்லாவிட்டாலும் சமூக வரலாற்றைப் பதிவு செய்தவர்களும் வரலாறு பற்றிய பிரக்ஞையுடன் இயங்கியதையும் இங்கு மனங் கொள்ளவேண்டும். மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம் (1914) வெளிவந்தபோது கல்வியின் ஊடாக பெண்களின் முன்னேற்றமும் அவர்களின் எழுச்சியும் தெரியவந்தது. டானியலின் எழுத்துக்கள் வந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கலகக் குரல்கள் வெளித்தெரிந்தன. அருளரின் லங்காராணி (1988) வந்தபோது இனமுரண்பாட்டின் காரணமாக, தமிழர்தம் உரிமைகள் பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இவ்வாறுதான் ஈழத்து நாவல்களின் ஊடாக சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன.

நீ பி அருளானந்தம் அவர்கள் புனைகதை இலக்கியத்தில் தொடச்சியாக ஈடுபட்டு வருபவர். தனது எழுத்துப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். அவர் சோழப் பேரரசின் வரலாற்றுக் காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டு வரலாற்று நூல்களில் நமக்கு உதிரியாகச் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளை, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் அடிப்படையாகக் கொண்டு மாருதப்புரவீகவல்லி - உக்கிரசிங்கன் வரலாற்று நாவலான 'புண்ணியபுரம்' என்ற புனைவைத் தந்திருக்கிறார்.

  திசையுக்கிரசோழன் தன் புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லிக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்கு எத்தனையோ பரிகாரங்களைச் செய்துங்கூட மகளின் துன்பம் தீராமை கண்டு மனங்கலங்கி வெதும்புகிறார். பின்னர் மந்திரியாரின் ஆலோசனைப்படி பிணி தீர்க்கும் புனித தீர்த்தத்தில் நீராடினால் மகளின் குறை தீரும் என்றறிந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறார். இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலுக்கு உள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நலம்பெற முடியும் என்று நம்பப்படுகிறது. மாருதப்புரவீகவல்லி இராமேஸ்வரம் வந்தபோது ஒரு மூதாட்டி வழிப்படுத்துகிறார். அவர் ஊடாக சாந்தலிங்கம் என்ற சந்நியாசியைச் சந்திக்கிறாள்.

'அந்த இலங்கா துவீபத்தின் வடபாகத்திலுள்ள ஒரு சிறு குறு நாட்டினுக்குள்ளே கீரிமலை என்கிற இடத்தின் பக்கம் ஒரு சிற்றாறு இருக்கிறது. அந்த இடத்திற்கு நீ யாத்திரை பண்ணி நற்தீர்த்தமாடினால் உன் ரோகமெல்லாம் மாறி நீ பழையபடி சௌந்தரவதியாகிவிடுவாய்' என்று சாந்தலிங்கம் சந்நியாசி கூறுகிறார்.

  இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு வந்து கீரிமலை அருகிலுள்ள குமாரத்திபள்ளம் என்ற இடத்தில் தங்கியிருந்து கீரிமலைக் கேணியில் நீராடி நகுலேஸ்வரத்தில் வழிபாடு இயற்றுகிறாள் இளவரசி. அதன்போது நகுலமுனிவர் பற்றி அறிந்து அவரைக் காணுகிறாள். நகுலமுனிவரால் அவளுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது. அந்த இடத்தின் மகிமையும் முன்னோர் கதைகளும் முனிவரால் சொல்லப்படுகின்றன.

  நகுலேசுவரம் வரலாற்றுக் காலங்களில் முன்னோர் வழிபட்ட தலம் என்பதும் நளன் முதலான அரசர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் முதலான வரலாறுகளும் அவளுக்கு சொல்லப்படுறது. அப்புனித நீரின் மகிமையாலும் வழிபாட்டாலும் இளவரசியின் நோய் படிப்படியாக நீங்கிவருகிறது. அதனால் பிரதியுபகாரமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை அமைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபடுகிறாள். இக்காலத்தில் கதிரமலையிலிருந்து அரசாண்ட உக்கிரசிங்கனின் வரவு நிகழ்கிறது. அதன் காரணமாக மாருதப்புரவீகவல்லி இலங்கை அரசனின் பட்டத்து ராணியாகும் நிலைமை ஏற்படுகிறது. குழப்பகரமான நிலை பின்னர் ஒருவாறு நீங்கப் பெறுவதோடு புனைவு முற்றுப் பெறுகிறது.

  இப்புதினத்தில் இராவணன் ஆட்சி, அவனின் முன் இருந்த அரசர்கள் பற்றிய சரித்திரச் சம்பவங்கள், நாகர்கள் பற்றிய கதைகள், குமரிக்கண்டம், பாண்டியர் ஆட்சி முதலானவை கூறப்படுகின்றன. இராவணன் பற்றி மிக விரிவான உரையாடல் மாருதப்புரவீக வல்லிக்கும் நகுலமுனிவருக்கும் இடையில் இடம்பெறுகிறது, நகுலேசர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கண்டகி தீர்த்தத்திற்குச் சென்று அங்கு நீராடி நகுலேசர் பெருமானையும் தரிசித்ததால் நளனின் கலி இடர் நீங்கப் பெற்றான் என்ற கதையும் முனிவரால் சொல்லப்படுகிறது.

  இவ்வாறான புராண இதிகாசக் கதைச் சம்பவங்களினடியாக இப்புனைவு பயணிக்கின்றது. ஈழத்தில் மக்களின் வாழ்வு முறை, பௌத்தமதச் செல்வாக்கு, இந்துக்களின் வழிபாடு முதலானவற்றை கதைப்போக்கில் சம்பவங்களின் அடியாக ஆசிரியர் சொல்கிறார்.

  ஈழத்து வரலாறு சம்மந்தமாக எழுதப்பட்ட நூல்களை நன்கு ஆராய்ந்து அவற்றில் வருகின்ற வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில் உரையாடல் ஊடாக எடுத்துக்காட்டி கதையை நகர்த்துகிறார். திசையுக்கிரசோழன் - அமைச்சன், மாருதப்புரவீக வல்லி – நகுலமுனிவர், மாருதப்புரவீக வல்லி – கயல்விழி, மாருதப்புரவீக வல்லி – குயிலி, மாருதப்புரவீகவல்லி - உக்கிரசோழன் ஆகியோரின் உரையாடல்களுக்கு ஊடாக புராண மற்றும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதிகமும் உரையாடல்கள் ஊடாகவே கடந்தகாலங்கள் மீட்கப்படுகின்றன.

  எழுத்தாளர் நீ பி அருளாந்தம் அவர்கள் ஈழத்துச் சூழலில் மங்கிப்போயிருந்த வரலாற்றுச் சம்பவம் ஒன்றினைப் புனைவினூடாகச் சொல்லியிருக்கிறார். நினைவுகளும் வரலாறுகளும் மறக்கடிக்கப்படும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற புனைவுகள் இளையவர்களை மாத்திரமன்றி பெரியவர்களையும் சென்று சேரவேண்டும். எங்கள் புராதன வரலாறுகளை மீட்டுப்பார்ப்பதற்கும் அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதற்கும் ஒரு வழியாக இதுபோன்ற புனைவுகளின் வருகை அவசியமாக உள்ளது. எழுத்தாளர் நீ. பி அருளானந்தம் அரிதில் முயன்று இப்பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். அவரின் முயற்சிகள் மேலும் தொடரவேண்டும்.



ஏவாளின் புன்னகைக்குள் ஒளிந்திருக்கும் அனல் வார்த்தைகள்

 


- சு. குணேஸ்வரன்

ஏவாளின் புன்னகைக்குள் ஒளிந்திருப்பது உண்மையில் புன்னகையே அல்ல, அனலாய்த் தெறிக்கும் வார்த்தைகள் என்பதை ஈழக்கவியின் இக்கவிதைத் தொகுப்பைப் படிப்போர் நிச்சயம் புரிந்து கொள்வர். 'இன்றைச் சூழலின் நெருக்கடிகளும், நெருக்கடிகளிலே அமிழ்ந்துபோய்விடாத திமிறல்களும் உணர்வுகளும் எதிர்வினை கொள்கிற ஒரு சமூகத் தேவையை நமக்குத் தந்திருக்கின்றன.' (கவிதையெனும் மொழி) என்கிறார் தி.சு நடராசன். அவ்வாறான ஒரு திமிறலையும் எதிர்வினையையும் இக்கவிதைத் தொகுப்பில் அவதானிக்கமுடிகிறது.
2015 இல் வெளிவந்த 'ஏவாளின் புன்னகை' அப்போதைய சமகாலப் போக்கைக் காட்டி நிற்கின்றது. ஒரு படைப்பு என்பது அதன் சமகாலத் தன்மையாலும் படைப்பாளியின் அகப்புற அனுபவங்களாலும் கட்டமைவதை பலரும் அறிவர். அந்த அடிப்படையில் அதிகார வர்க்கத்தினரின் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளையும் போலிமுகங்களையும் கேள்வி கேட்பனவாக இத்தொகுப்பின் கணிசமான கவிதைகள் அடங்கியுள்ளன. இயற்கை, அன்பு, காதல், மானிடநேயம் ஆகியவற்றையும் இத்தொகுப்புக் கொண்டிருந் தாலுங்கூட அதன் சமூகப் பார்வையால் கவனத்திற்குரியதாக அமைகின்றது.
இயற்கை மீதான ஈடுபாடும் அதனைத் தன்னுணர்வுக் கவிதைகளில் ஏற்றிவிடும் கவித்துவமும் ஈழக்கவிக்கு மிக நன்றாகக் கைவந்து விடுகிறது. 'கண்களுக்கு இனிப்பு ஊட்ட', 'கவிதையான கவிதைகள்' முதலானவற்றில் இயற்கையை கவித்துவமாக இணைத்து விடுகின்ற அம்சத்தினைக் கண்டுகொள்ள முடிகிறது.
'மின்னலாய்ச் சிரித்த வானம்
மறைத்து வைத்திருந்த கவிதைகளைக்
கொட்டத் தொடங்கியது.'
என்ற வரிகளை இங்கு எடுத்துக் காட்டலாம். மற்றுமோர் இடத்தில்
'வைகறைக் கூதலைத் துரத்த
வெயில் பால் அருந்தியவாறு
பனியில் முகம் கழுவிக் கொண்டிருக்கும்
பூக்களோடு பேசிக் கொண்டிருந்தோம்.'
என்று நவீன கவிதையின் உத்திகளோடு அழகாகச் சொல்லுவார்.
காதல், அன்பு முதலான கவிதைகள் உள்ளத்தை வருடியதுபோன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன. தொகுப்பின் இறுதியாக உள்ள தொடர்கவிதையிலும் இந்த உணர்வினைத் தரிசிக்க முடிகின்றது. தாயை இழந்த பின்பும் அந்த அன்பின் ஈரம் ஆறாத நிலைமைகளை
'நேற்று
உம்மாவின் அடக்கஸ்தலத்திற்குப் போனேன்
அங்கு ஒரு மரம்
அந்த மரத்திலுள்ள ஒவ்வொரு இலையும்
உம்மாவின் விழிகளாய்ப் பேசின
உம்மாவின் பாசமொழியை சொல்ல
ஏது வரிவடிவம்.'
கவிஞரைப் பெரிதும் அலைக்கழிக்கும் செயல்கள் கவிதைகளாக இங்கு பதிவாகியுள்ளன. அதிகாரத்தின் ஊடாக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குபவர் களையும் போலி முகங்களுடன் பொய்யான வார்த்தைகளை உதிர்ப்போரையும் விஷம், சாத்தான், எமன், பேய்கள், ஊத்தை வார்த்தை முதலான சொற்களின் ஊடாக சில கவிதைகளில் மீள மீள எடுத்துக் காட்டுவார். இவ்வார்த்தைகளை உதிர்க்க நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் அவற்றைக் கவிதைகளில் கவிஞர் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை வாசகர் நன்கு புரிந்து கொள்வர்.
'பறந்து பழகிய ஒரு பறவையின் இறகுகளில்
தீ மூட்டுதல்போல
நடுக்கடலில் ஒரு கப்பல்
தலைகீழாய் கவிழ்தல்போல
எல்லாம் எரிந்து
ஒரு பிடி சாம்பலோடு இருக்கிறேன்.'
என்று மானிட வாழ்வின் அலைக்கழிவினால் ஏற்பட்ட இழப்பினையும் நினைவுபடுத்துவார்.
வானப்பூனை, நினைவுமழை, மனச்சிற்றெறும்புகள், நிலாப்பால், கற்பனை விமானம், கண்ணென்ற கடல்; முதலான சொற்சேர்க்கைகள் புதிய அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. இவ்வாறான எளிமையான வார்த்தைகளில் இருப்பன எளிய மாந்தர்களின் அர்த்தம் பொதிந்த வாழ்வு அவலமாகிச் சிதைந்து போன வாழ்வின் வலிகளே.
'இரவு ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டியாய்
துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருந்தது.'
என்று மிக அழகியலுணர்வோடு கவிதை சொல்பவருக்குள் இவ்வளவு கோபமும் இருக்குமா? என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான். அதற்கு அவரே விடை கூறுவதுபோல் 'கோபம்' என்று தலைப்பிட்ட கவிதையிலே பதிவு செய்கிறார்.
'இரவு முழுக்க நிலவு சொன்னது
என் கோபத்தைக் குறைக்குமாறு
நான் சொன்னேன்
பிழைகளால் மட்டுமே
பிழைப்பு நடத்துபவர்களைக் காணும்போது
கோபம் தானாகவே பத்திவிடுகிறதே.'
விஷம்கொண்ட பாம்புகளைகளைக் கண்டு ஒதுங்குவதுபோல சில மனிதர்களைக் கண்டு ஒதுங்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் கோடி பாம்புகளால் ஆனவர்களாக கவிஞருக்குத் தெரிகின்றனர்.
மற்றவர்களின் உணர்வுகளை விற்று தங்கள் சுயநல ஆசைகளைத் தீர்த்துக் கொள்பவர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை பல கவிதைகளில் வெளிப்படையாகவே பேசிவிடுகிறார். இவர்கள் மீதான கோபம் இரட்டிப்பாகிவிடுகின்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகளும் மிகக் கடுமையானவையாக அமைந்துவிடுகின்றன. 'ரோஷ நரம்பை எடுத்தல்' என்ற கவிதையின் தலைப்பே மிக ஆக்ரோசமானதாக இருக்கின்றது. 'வாயால் சேறு பூசுதல்' என்ற கவிதையில்
'அரவங்களாய் இருந்த பொய்கள்
மாணிக்கங்களைக் கக்கின
வீடு முழுக்க வாக்குறுதிகளால் நிறைந்தன.'
சமகாலப் போக்கு, பொய்மையையும் போலியையும் தோலுரித்தல், அதிகாரத்தின் கைகளில் சிக்கி அவலப்படும் மாந்தரின் எண்ணங்களை வெளிப்படுத்துதல், அன்பிலும் காதலிலும் அகமகிழ்தல், இயற்கையின் மோகத்தில் லயித்தல் முதலான அம்சங்களைக் கவிதைகளின் பாடுபொருள்களாகக் கொண்டு எளிமையும் ஆழ்ந்த உணர்வும் கொண்ட வார்த்தைகள் அமையப்பெற்று நவீன கவிதையின் அழகியலோடு வெளிவந்துள்ள ஈழக்கவியின் 'ஏவாளின் புன்னகை' ஈழத்துக் கவிதை வரலாற்றில் பேசப்படவேண்டிய தொகுப்பாகவே இருக்கும் எனலாம்.
ஜீவநதி 261, ஏ.எச்.எம் நவாஸ் சிறப்பிதழ், 2025.