Saturday, August 30, 2014

கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது




- சு. குணேஸ்வரன்


அறிமுகம்
பொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச்சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்கமுடியும். அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப்பகுதியில் நோக்கலாம்.

கலாசாரம் – தமிழ்மனம் - தத்தளிப்பு
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி, வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும் கூறுவர். இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழமுற்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவையாக அமைகின்றன.

இந்தவகையில் கருணாகரமூர்த்தியின் பல புனைவுகளில் தமிழ்மனம் எதிர்கொள்ளும் கலாசாரத் தத்தளிப்பை அவதானிக்க முடியும். ‘வாழ்வு வசப்படும்’ என்ற குறுநாவலிலும்; சிறுகதைகளான ‘பர்வதங்களும் பாதாளங்களும்’, ‘வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்’ ஆகிய சிறுகதைகளிலும் மிகத்தெளிவாக இந்தப் பண்பை அவதானிக்கமுடியும். இக்கட்டுரையில் “வாழ்வு வசப்படும்” குறுநாவல் கருத்திற்கொள்ளப்படுகிறது.

உண்மையில் ‘தமிழ்மனம்’ என்பது தமிழ்வாழ்வைக் குறிப்பதாகவே அமைகிறது. அது தமிழ்ப்பண்பாட்டினால் கட்டமைக்கப்பட்ட சிந்தனையோட்டத்தையும் செயற்பாட்டையும் குறிப்பது. மிக நுண்மையாக நோக்கினால் அது தனது தமிழ்அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து சென்ற தேசமெங்கும் இன்னமும் சாதியையும் சமயத்தையும் துடக்கையும் தம் நினைவிலிருந்தும் வாழ்விலிருந்தும் அகற்றமுடியாது கட்டுண்டு கிடக்கின்றனர். இதற்குள்தான் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியலும் எழுதப்படாத விதியாக அமிழ்ந்திருக்கின்றது. இந்த நிலையில் முற்றிலும்; தமிழ், தமிழ்ப்பண்பாடு என்று வாழ்ந்தவர்கள் அந்நிய வாழ்வில் எதிர்கொள்ளும் தத்தளிப்புத்தான் இந்தக் குறுநாவலில் உள்ளது.

“ஏறத்தாழ எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேசக் கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேச கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது. அத்வைதன் முதல் அலெக்ஸ் வரை பல்வேறு நிலைகளில் அதை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாடு மூலம்தான் அவர்களுடைய குணச்சித்திரம் வெளிப்படுகிறது. கதாபாத்திரங்கள் மெல்லிய வேகமாக கோடுகள் மூலம் தீட்டப்படும் ஓவியங்களாக, சகஜமாகவும் வேகமாகவும் உருவாகும் விதம் இக்குறுநாவலின் மிக முக்கியமான குணம் என்று படுகிறது.” (1)

என்று எழுத்தாளர் ஜெயமோகன் இக்குறுநாவலின் முக்கியத்துவம் குறித்து எழுதுகிறார்.

முத்துராசண்ணை, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன், சுருவில் ஆகிய இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தபோது அவர்களை அந்நாட்டு அரசு; அகதிகளாகக் கருதி அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து சமூகநல உதவிப்பணமும் கொடுத்து வாழ வழிசெய்கிறது.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தபோது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இவர்கள் புலம்பெயர்கிறார்கள். ஒரு அறையில் இரண்டடுக்குக் கட்டில் அமைத்து ‘ப’ வடிவத்தில் ஆறுபேரை அங்கு தங்க ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களைப் போலவே ஏனைய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர், கானாக்காரரும் இதேபோல அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

இக்குறுநாவலில் அகதிகளை ஜேர்மனி நடத்துகிறவிதம், தொழில் தேடுதலில் - தொழில் புரிதலில் உள்ள சிக்கல்கள், மேலைத்தேயக் கலாசாரத்தை எதிர்கொள்வதில் உள்ள தத்தளிப்புகள், தாயகக் குடும்பங்களின் நிலை, தனிப்பட்டவர்களின் பல்வேறு மனநிலைகள் ஆகியவை முதன்மையாகப் பேசப்படுகின்றன.

குறிப்பாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வாழநேரிட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களின் சிந்தனையோட்டங்களை அவர்களின் செயற்பாடுகளை இந்நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. இலங்கைத் தமிழரின் புலம்பெயர்வு 1980 களில் இருந்தே முனைப்புக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜேர்மனி போன்ற முற்றிலும் அந்நிய மொழிபேசும் நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை இது எடுத்துக்காட்டுகின்றது. இதனை டி.செ தமிழன் புலம்பெயர்ந்தவர்களின் மனவோட்டங்களை சொல்லும் ஆரம்பகால ஆவணம் என்று குறிப்பிடுவது முக்கியமான அவதானிப்பு.

“80களின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து ஜேர்மனிக்கு அகதிகளாய் அடைக்கலங்கேட்டு, ஒரே அறையில் தங்கியிருக்கும் ஐந்தாறு இளைஞர்களைப் பற்றிய கதைதான் இது. இன்னொருவகையில் சொல்லப்போனால், இந்தக்கதை எமது புலம்பெயர் வாழ்வின் தொடக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முக்கிய ஆவணம் எனவும் சொல்லலாம். புலம்பெயர் வாழ்க்கை என்பது பொதுவான ஒன்றல்ல. நாம் புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப அவை வேறுபடுபவை. உதாரணமாய் கனடா, இங்கிலாந்து போன்றவற்றுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கும், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கும், இடையிலான வாழ்க்கை என்பது வித்தியாசமானது. கனடா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, ஆகக்குறைந்தது, ஏற்கனவே கற்றுக்கொண்ட, அடிப்படை ஆங்கிலத்தை வைத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முடிந்திருந்தது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவற்றுக்குப் போனவர்கள், மொழியிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகவே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய புலம்பெயர்வு எம்மைவிட வித்தியாசமானது மட்டுமின்றி, மிகவும் கஷ்டமானதும் கூட. எனவே 'புலம் பெயர் வாழ்வு' என்ற ஒற்றைவரிக்குள், எல்லோருடைய வாழ்வையும், பொதுவாகப் பார்க்கும் நிலையையும், நாம் மாற்றவும் வேண்டியிருக்கிறது.” (2)

ஆசிரியர்; அத்வைதனை பிரதான பாத்திரமாக்கி கதையை நகர்த்தியுள்ளார். இதில் வரும் ஆறு பாத்திரங்களும் ஆறு வகையான மனவுணர்வு மற்றும் செயற்பாடு கொண்டவர்கள். ஒவ்வொரு காரணத்துடனும் புலம்பெயர்ந்து வந்தவர்கள்.
இவர்கள் வதியும் விடுதி நான்கு மாடிகளைக் கொண்டது. முதலாவதில் உலகின் ஆதித்தொழிலாகிய விபச்சாரம் மற்றும் மதுபானச் சாலைகளும் மூன்றாவதில் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களும் நான்காவதில் நிரந்தர குடியிருப்பாளர்களாகிய ஜேர்மனியரும் வதிகின்றனர்.

இந்நாவலில் பல விடயங்கள் பேசப்பட்டாலும் கீழைத்தேய மரபில் வாழ்ந்தவர்கள் எதிர்கொள்ளும் கலாசார முரண்பாடு அதிகம் பேசப்படுவது நோக்கத்தக்கது.
குறிப்பாக
1. போதைப்பொருள் பாவனை
2. மதுப்பாவனை
3. போர்ணோ படங்களின் பாதிப்பு
4. பெண்களின் தொடர்பு

ஆகியவை இக்குறுநாவலின் பேசுபொருள்களில் முக்கியமானவை.

“மொழிவழித்தனிமை, கலாசாரத் தனிமை, பாலியல்தனிமை, என்று தனிமையின் வகைமைகளுக்குள் சிக்கி சுழலும் அகதி வாழ்வு. அதிலும் அதீதப் பாலியல் தனிமை காரணமாக பெரும்பாலான கதாபாத்திரங்கள் பாலியல் குறித்த விடயங்களை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்தும் கதைப்போக்கு அகதிகளின் உளவியல் தாக்கத்தைக் காட்டுகிறது. “(3)

நாவலில் வரும் ஈழத்தவர் ஆறுபேரின் கதையுடன் இணையாக பக்கத்து அறைகளில் வசிக்கும் பாக்கிஸ்தானியர், கானாக்காரர் ஆகியோருடன் கதையோட்டம் நகருகின்றது.

இவர்களில் வயதில் மூத்தவரான முத்துராசண்ணை கடவுள் சிந்தனையும் அமைதியும் கொண்டவர். அடிதடிகளுக்கு போகாதவர். சமையல் வேலைகளுடன் அவர் பொழுது போய்விடும். அத்வைதன் கொஞ்சம் கோபக்காரன் அநீதிகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவன். காலையில் மாடிப்படிகளில் ஏறி பத்திரிகைபோடும் வேலையை செய்பவன். இதனை திலகனும் செய்கிறான். ஆனால் அவன் ஒரு ஜாலிப்பேர்வழி. இக்குறுநாவலின் பேசுபொருள் திலகன் பாத்திரத்திற்கு ஊடாகவே அதிகம் சிலாகிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. மற்றவர்களில் சுருவில் ஒரு ஹோட்டலில் உறவினர் ஒருவர் ஊடாக கிடைத்த வேலையை செய்துவருபவர். மாதம் ஒரு தடவை சோசல் காசு பெறுவதற்காக இவர்களது அறையில் வந்து தங்குபவர். மற்றைய இருவரும் வயதில் இளையவர்கள். சகோதரர்கள்.

இந்நாவலில் மேலைத்தேய சமூகத்தில் வளர்ந்த இரண்டு இளம்பெண்களை அவதானிக்கலாம். அவர்களில் ஒருத்திக்கு பிள்ளையைப் பெற்று நல்ல விலைபேசி விற்றல் தொழிலாகிறது. மற்றவளுக்கு தனது கைச்செலவுகளுக்காக சோரம்போதல் உதவுகிறது. இவ்வாறான பெண்களின் தொடர்பு புலம்பெயர்ந்து அங்கு வாழ நேர்ந்த இளைஞர்களுக்கு கைகூடுகிறது. கறுப்பின ஆடவருடன் நட்புக்கொண்டு அவர்கள் மூலம் குழந்தை பெற்று விற்கும் ஒருத்தியாக சபீனா என்ற பெண் இக்குறுநாவலில் அறிமுகமாகின்றாள். அவள் அத்வைதனுடன் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றை நோக்கலாம்.

“அத்வைதன் விளங்காமல் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்”

“நத்திங் ஆக்ஸ்டென்ரால்… கர்ப்பம் தங்க வைத்துக் கொண்டு வந்தேன்.”

“இந்தியக் குழந்தையில் அப்படி என்ன விசேஷம்?”

“சொக்கோ பிறவுண் குழந்தைகளுக்கு ஏக டிமாண்ட தெரியுமோ? கண்ணடித்தாள்”

“இப்போ எங்கே குழந்தை?”

“போன கோடையில் Sylf க்குப் போயிருந்தபோது ஒரு பணக்காரன் ஸ்வீகாரம் பண்ணிறேன் என்றான்… கொடுத்திட்டேன்… ஒன்றும் சும்மாவல்ல… அறுபதினாயிரம் டொய்ச்மார்க். இதைச் சம்பாதிக்க நான் பத்து வருஷம் மாடாய் உழைக்க வேணும் பார்… இது ஒரு சிம்பிளான பிஸினஸ்” (4)

இதேபோல் இன்னொரு பெண்பற்றிய சம்பவமும் நாவலில் வருகிறது. பக்கத்து அறையில் வதியும் இலங்கைத்தமிழர் இரண்டு பேர் போதைவஸ்தும் போர்ணோவும் என அலைபவர்கள். பாடசாலை சென்றுவரும் 14 வயதுடைய பள்ளி மாணவியை தம் அறைக்கு அழைத்து வந்து போதைஊசியை அதிமாகச் செலுத்தி அவளை பாலியல் தேவைக்கு உட்படுத்துகின்றனர். இறுதியில் அவள் இறக்கும் தறுவாயில் அவளைக் காப்பாற்றும் எண்ணமில்லாத அவர்களின் மனித மனமும் அதற்கு இடங்கொடாத சட்டங்களும் இந்நாவலில் காட்டப்படுகிறது.

இச்சம்பவத்தை அறிந்து அத்வைதன் கோபப்படுகிறான். அவர்களுடன் சண்டைபிடிக்க முற்படுகிறான். இறுதியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் பொருட்டு பொலிஸில் அறிவித்தும் அவர்களின் சட்டம் அதற்கு இடங்கொடுக்காத நிலையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் விசேட அம்புலன்ஸ் வண்டி வைத்தியர்களின் உதவியுடன் அவள் உணர்வற்ற ஆபத்தான நிலையில் மீட்கப்படுவதோடு நாவல் முற்றுப்பெறுகின்றது.

பாலியல் நடவடிக்கைகள் மேலைத்தேய வாழ்வில் திறந்து விடப்பட்ட கலாசார நிலையாக இருந்தாலும் இவர்களின் பார்வையில் அது ஒழுக்கவிதிகளுக்கு அப்பாற்பட்டதாகவே அமைகின்றது. இது சார்ந்த பல சிக்கல்களை அறைநண்பர்கள் எதிர்கொள்கின்றனர்.

கீழைத்தேய கறுப்பின ஆடவனை நண்பனாக்கிக் கொள்வதன் ஊடாக தான் சொக்கிளற் கலர் குழந்தை பெற்று அதனை நல்ல விலைக்கு விற்றுவிட விரும்பும் பெண் ஒருத்தி திலகனுடன் நெருங்கிப் பழகியபின் தனது குழந்தைக்கு அப்பாவாக பதிவுசெய்தால் போதும். தான் அந்தக் குழந்தையை பின்னர் நல்ல விலைக்கு விற்றுவிடுவேன் என்கிறாள். இது அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைகிறது. பத்திரிகை விநியோகிக்கப்போன இடத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் படுக்கைக்கு அழைக்கும் சந்தர்ப்பங்கள், முத்துராசன் ஒருமுறை ஜேர்மனியை சுற்றிப்பார்த்து போட்டோவுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு இளம்பெண் அவரை முத்தமிட்டுச் செல்லும் சந்தர்ப்பம், இன்னும் பல சம்பவங்கள்… எல்லாம்; கீழைத்தேய ஒழுக்கவியலில் வாழ்ந்தவர்களை இரண்டக நிலைக்கு உட்படுத்துகின்றன.

“ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் வேற்று நாட்டவர்கள் அவர்கள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஒரு பகுதியையும் அவர்களின் சொந்தப்பண்பாட்டில் பெரும் பகுதியையும் இணைத்துக் கொண்டவர்களாய் உள்ளனர். இவ்வாறான வாழ்க்கைமுறை அவர்கள் வாழும் நாட்டு மக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டதாக அமையும். அவர்களின் அவ்வகைப்பண்பாடு அந்நாட்டின் மொத்தப்பண்பாட்டில் ஓர் உட்பண்பாடாக அமையும்” (5)

என புலம்பெயர்ந்த தேசத்தின் உபபண்பாடு பற்றி கூறப்படுகிறது. இக்கூற்று ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இற்றைக்கு கால்நூற்றாண்டு கழிந்துவிட்ட நிலையில் பொருத்தமாக இருக்கின்றது. ஆனால் இந்நாவல் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பநிலை குறித்தே பேசுவதனாலேயே மேற்குறித்த கலாசார தத்தளிப்பை இலங்கைத்தமிழர்கள் எதிர்நோக்கவேண்டியிருந்திருக்கின்றது.

மேலும் ஒரு சம்பவத்தையும் இங்கு எடுத்துக்காட்டலாம். அறைநண்பர்கள் ஒருமுறை கோவைத்தமிழர் ஒருவரை சந்திப்பதன் ஊடாக தமிழ்ப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவர் ஒரு சுரண்டல் பேர்வழியாக இந்நாவலில் காட்டப்படுகிறார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு அறைநண்பர்களுக்கு ஒரு ரீவியும் டெக்கும் வாங்கவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. அது படிப்படியாக இவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து அறையினரும் தமிழ்ப்படம் பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. காலநீட்சியில் ‘போர்ணோ’ படம் பார்க்கும் நிலைக்கு இவர்களது பொழுது தள்ளப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு நாவலில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.

“படம் திடீரென முடிந்து ‘டிவி’ திரையிலிருந்து அறைக்குள் வெளிச்சம் பரவியபோது நிமலனும் முத்துராசா அண்ணையும் தத்தமது கட்டில்களில் தலையைச் சுற்றிப் போர்த்தபடி உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” (6)

“அறையின் மையமாகவிருந்த பதிவான மேசையில் மூன்றுபேர் காலடியில் பியர்க் குலையும், கையில் சிகரெட்டுமாக ‘ரம்மி’ ஆடிக்கொண்டிருந்தனர். கதவுக்கு எதிராக இருந்த கட்டிலில் ஒருவன் ஜெர்மன்காரி ஒருத்தியை போர்த்தி வைத்து முயங்கிக் கொண்டிருந்தான். அத்வைதன் 120000 வோட்ஸ் மின்சாரத்தால் தாக்கப்பட்டு சுதாகரிப்பதற்குள் அவனையும் ரம்மியாட அழைத்தனர். …………அத்வைதன் வேறொரு சமயம் வருவதாகக் கூறிக்கொண்டு வெளியே பாய்ந்தான். அவனின் மனோ உணர்வுகளைத் துளியும் புரியாத சார்ளியின் அறையினர் ஒரு அரை மணிநேரமாவது ரம்மியாட வருமாறு கெஞ்சினர்.” (7)

“இவங்கட செக்ஸ்… ஒழுக்கம் பற்றிய பார்வையே வேறை… போய் பிரண்டோட ஒருத்தி ஒரு பார்ட்டிக்கு போறாள் என்று வையன். அவள் தாயே பில்லை (கருத்தடை)யும் எடுத்துக் கையில கொடுத்து விடறாளே?.... இவங்களுடைய தியறிப்படி ஒழுக்கத்திற்கும் கன்னித்தன்மைக்கும் சம்பந்தமேயில்லை” (8)

தொகுப்பு
புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால வாழ்க்கை நெருக்கடியை முக்கியமாக இந்நாவல் எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் இன்று புலம்பெயர் இலக்கியத்தில் அதிக அழுத்தம் கொடுத்துப் பார்க்கவேண்டிய விடயம் ‘தமிழ்அடையாளம்’ அது பண்பாடு சார்ந்து அவர்களின் வாழ்க்கை சார்ந்து எந்தவிதமான சரிவுகளை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இங்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கால்நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் இங்கு குறிப்பிடப்பட்ட பலவற்றில் இன்று வாழ்ந்துவரும் புகலிடத் தமிழர்கள் புகலிடப்பண்பாட்டில் தமக்குரிய உபபண்பாட்டைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மொழி, சமயம், திருமணம், பழக்கவழக்கம், பொழுதுபோக்கு, பாலியல் சார்ந்த பல விடயங்களில் எமது தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளுக்கு இருக்கக்கூடிய தனித்துவமான அம்சங்களோடு புலம்பெயர்ந்த நாட்டின் மொத்தப்பண்பாட்டில் உப பண்பாட்டுக்கூறு ஒன்றினையும் உருவாக்கி இன்று வாழ்ந்து வருகின்றனர். எவ்விதத்திலும் முற்றுமுழுதாக தமிழ்ப்பண்பாட்டு மனம் என்ற நிலை மாறி ஒத்துப்போகக்கூடிய அல்லது மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையிலேயே இன்று புகலிடத்தமிழர்கள் இருக்கின்றனர். அது உணர்வுபூர்வமான மொழிவழியான தமிழ் அடையாளமாக முற்றுமுழுதாக அல்லாமல் வெறும் தமிழ் அடையாளமாகவே மூன்றாம் தலைமுறையினரிடத்தில் கையளிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய மொறீசியஸ் நல்ல உதாரணம் ஆகும்.

எனவே கருணாகரமூர்த்தியின் இக்குறுநாவலானது இலங்கைத்தமிழரின் ஆரம்பகால வாழ்க்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஆவணமாக திகழ்கின்ற நேரத்தில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளக்கூடிய கலாசாரத் தத்தளிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கையில் அவர்களின் எழுத்துக்களில் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழ் அடையாளம் என்பதுதான் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதும் இக்குறுநாவலூடாக வலியுறுத்தப்படுகிறது.
---

அடிக்குறிப்புக்கள்
1) ஜெயமோகன் : 1996, “இவை என் முகங்கள்” ஒரு அகதி உருவாகும் நேரம் சென்னை, ஸ்நேகா ப7.
2) டி.சே. தமிழன்: “வாசிப்பும் சில குரல்களுக்கான எதிர்வினையும்” http://djthamilan.blogspot.com/2009/06/blog-post.html
3) வெற்றிச்செல்வன். ப: 2009, ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும், சென்னை சோழன் படைப்பகம், ப 228.
4) கருணாகரமூர்த்தி : 1996, ஒரு அகதி உருவாகும் நேரம், ஸ்நேகா, சென்னை, ப 59.
5) பக்தவத்சலபாரதி : 1999 (விரிவாக்கி திருத்திய பதிப்பு), பண்பாட்டு மானிடவியல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம், ப169.
6) மேலது 4: ப99.
7) மேலது 4: ப75.
8) மேலது 4: ப125.

(சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மே 31, 2014 இல் நடத்திய 'புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும்' என்ற கருப்பொருளிலான பன்னாட்டு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)
நன்றி : கலைமுகம், இதழ் 58 (ஏப்ரல் – யூன் 2014) யாழ்ப்பாணம்.

Thursday, March 20, 2014

ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ‘கருநாவு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து ஒரு குறிப்பு


- சு. குணேஸ்வரன்

கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக இருக்கிறது. இதையே ஆழியாளின் கவிதைத் தொகுப்பு தலைப்பாகக் கொண்டுள்ளது. ஒரு பெண் கருநாக்கு உள்ளவளாக இருப்பாளாயின் மற்றவர் பார்வையில் அவள் வசைக்கு உரியவளாகவும் இருந்துவிடுவாள். ஆழியாளின் ஏற்கெனவே வந்த ‘உரத்துப்பேச’, ‘துவிதம்’ ஆகிய கவிதைத் தலைப்புகளும் இதுபோல்தான் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்துள்ளன.

இத்தொகுதியில் 7 மொழிபெயர்ப்புக்கவிதைகளுடன் மொத்தம் 32 கவிதைகள் உள்ளன. ஆழியாளின் ஏற்கெனவே வந்த தொகுப்புகளில் இருந்து சில வித்தியாசங்களையும் கவிதைகளின் இன்னொருகட்டப் பாய்ச்சலையும் இக்கவிதைகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் இத்தொகுப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேர்வும் அவற்றின் உள்ளடக்கமும். மற்றையது ஒட்டுமொத்தமாக இக்கவிதைகள் கலைத்துவ நேர்த்தியுடன் அமைந்திருப்பது.

முதலில் ஆழியாள் மொழிபெயர்த்துள்ள கவிதைகளை நோக்கினால் தொகுப்பில் ஏழு கவிதைகள் உள்ளன. ஆங்கில மூலத்தில் அமைந்த அக்கவிதைகளை அவுஸ்திரேலியக் கவிஞர்களான ஜாக் டேவிஸ், கெவின் கில்பேர்ட், எலிசபெத் ஹொஜ்சன், ஜோன் லூயிஸ் கிளாக், பான்சி ரோஸ் நபல்ஜாரி ஆகியோர் எழுதியுள்ளனர்.

முதலில் மொழிபெயர்ப்புச் செய்த ஆழியாள் பற்றி நோக்கலாம். ஆழியாள் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக இலங்கையில் வவுனியா வளாகத்தில் 7 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். அவுஸ்திரேலியாவில் மேற்பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். நவீன இலக்கிய ஈடுபாட்டோடு பெண்ணியச் சிந்தனைகளிலும் ஈடுபாடு உடையவர். கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர். இவரின் தனிப்பட்ட ஆளுமையும் கலையாற்றலும் அவர் சார்ந்த அரசியல் பார்வையும் இக்கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றமையை அவதானிக்கமுடிகிறது.

இக்கவிதைகள் ஒவ்வொன்றும் உலகப் பொதுமையான பிரச்சினைகளைப் பேசுவதை கவனத்திற்கொள்ளவேண்டும். அவை தட்டிக்கழிக்கமுடியாத வகையில் எமது வாழ்வனுபவத்திற்கு மிக நெருக்கமாக அமைந்திருப்பதாலேயே ஆழியாளின் இம்மொழிபெயர்ப்புக் கவிதைகளை முக்கியமானதாகக் கருதுகிறேன்.

“பகல் விமானம்” என்ற கவிதை புலம்பெயரிகளின் தாயகம் பற்றிய நினைவினை மிக வித்தியாசமாக எடுத்துக்காட்டும் கவிதையாக அமைந்துள்ளது. அந்த நினைவுகள் புலம்பெயரும் ஒருவர் தனது நினைவுகளில் தாயகத்தைக் காவிச்செல்ல முற்படுபவதை காட்டுகிறது.

“ஒரு துண்டு வானத்தையும்
நீலப்பச்சைக் கடலின் பகுதியொன்றையும்
கையோடு கூட்டிச் செல்ல
அனுமதிப்பார்களா என்று
அருகில் வந்த பணிப்பெண்ணைக் கேட்டேன்? ”

இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே உரிய அனுபவம் அல்ல. இனம் மதம் மொழி கடந்து புலம்பெயர்ந்த ஒவ்வொருவரின் படைப்புக்களிலும் இருக்கக்கூடிய பொதுவான உணர்வுநிலை. ஜாக் டேவிஸ் அதனை நாடுவிட்டுப் பெயர்க்கப்பட்டு அகதியாக அலைந்து திரியும் மக்களின் பொதுவான அனுபவமாகத் தந்திருக்கிறார்.

“பால் பெல்போரா நடனம் முடிந்துவிட்டது” என்ற தலைப்பிலான கெவின் கில்பேர்ட்டின் கவிதை தமிழர் பிரதேசத்தில் நடந்து முடிந்துபோன, போருக்குப் பின்னர் எமக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவத்திற்கு மிக நெருக்கமான வருவதை உணரமுடிகிறது.

“…………………
……………….....
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்
தன் முறிந்த ஈட்டி வீழ்ந்த அதே இடத்தில்
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்.
………….
…………
குன்றுச் சரிவிலே
அவனின் பெட்டைத்துணை
ஊயிரற்றுக் கிடக்கிறாள்

ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய
இராணுவச் சிப்பாயிடம்
உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை
அவளின்
கறுத்த குரல்வளையைச் சீவித்
தறித்தெறிந்தான் இராணுவச் சிப்பாய்.

அவள் பாலூட்டிய பிஞ்சு மகவோ
புற்களிடையே கிடக்கிறது
விறைத்த உருக்கு இரும்பால்
தலை பிளக்கப்பட்டு
சிதறிய மூளை மெல்லத் துடித்தபடி
………………
………………”

இதன் ஆங்கில மூலக்கவிதைக்குச் சொந்தக்காரர் ‘கெவின் கில்பேர்ட்’ சிறையிலேயே தனது காலத்தைக் கழித்தவர். அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். ஆதிக்குடிகளின் வரலாற்றை பல வழிகளில் ஆவணப்படுத்துவதிலும் அவர்களுக்கான அரசியல் உடன் படிக்கைகளை முன்னெடுப்பதிலும் பெரும் பங்காற்றியவர் என மூலக்கவிஞர் பற்றிய குறிப்பின் ஊடாக அறியமுடிகிறது.

அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள் தம் வாழ்வுக்கான போராட்டத்தை எடுத்துக்காட்டும் இக்கவிதை இன்று ஈழத்தவர்களின் உருக்குலைக்கப்பட்ட வாழ்வுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

“காக்கைச் சிறகுகள்” என்ற கவிதை நிலத்துக்கான போராட்டம் பற்றிக் கூறும் கவிதையாக உள்ளது. தாம் உயிர்வாழ தங்கள் பூர்வீக நிலங்களுக்காக அந்நியருடன் போராடவேண்டியுள்ளமையை அந்தக் கவிதை எடுத்துக்காட்டுகிறது.

“கலங்கல் நீரைப் போல
மண்; நிறத்தாலானது
என் அம்மம்மாவின் கைகள்

அவள் குழந்தைகளை அவர்கள் எடுத்துச் சென்றபோது
தன் மகனையும்,
கடைசி மகளையும்
ஒன்றாய் இழந்தாள்
……….
அந்நியப் படையெடுப்பைத் தடுக்கவென்றே
அப்பப்பா போருக்குப் போனார்
ஆனால் அதற்கு முன்னமே
அவர்கள்
நாட்டைச் சுற்றி வளைத்துப் பிடித்து
விட்டார்கள்.
……….
அவர்கள் போராடவேண்டியிருந்தது
ஒன்றாய்
உயிர் வாழவும்
காதல் செய்யவும்
சாவதற்கும் அவர்கள் போராட
வேண்டியிருந்தது
தங்களுக்குச் சொந்தமான
சொந்த மண்ணிலேயே!”

இக்கவிதையின் ஆங்கிலமூலம் ‘ஜோன் லூயிஸ் கிளாக்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞருடையது. இக்கவிதை தங்கள் பூர்வீக நிலத்துக்காக அந்நியர்களுடனும் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடிக் கொண்டிருக்கின்ற இனங்களின் உயிர்த்துடிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதேபோல தனது சுயத்தை தனது அடையாளத்தைத் தேடும் கவிதைகளில் ஒன்றாக “செந்தைல மரங்களும் நானும்” என்ற கவிதை அமைந்திருக்கிறது.

மனிதர்களின் வசவுகளுக்கும் அதற்கு பயந்து சாகும் கணங்களையும் மனித வடிவில் இருந்து அனுபவிக்க வேண்டியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் தனது உணர்வுகளை செந்தைல மரங்களிடம் முறையிடுவதாக அக்கவிதை அமைந்துள்ளது. அம்மரத்தின் செழிப்பு, குளிர்ந்து வீசும் இலைகளின் நளினம், அந்த மரம் மண்ணில் வேரூன்றியிருக்கும் உயிர்ப்பு… எல்லாமே கவிஞரை வசீகரிக்கின்றன. இதனாலேதான் ‘வெள்ளை’ நிறத்தைக் கழுவி நாம் எந்த நிலத்துக்கு உரித்தாக இருந்தோமோ அங்கே கொண்டு சேர்த்துவிடுங்கள் என்று மரங்களைக் கோருவதாய் அக்கவிதை அமைந்திருக்கிறது.

“செந்தைல மரங்களே
என் மூளையினூடே ஊடுருவி
வெளியேறுங்கள் மறுவழியாய்
எங்கு உரித்தாய் வாழ்ந்திருந்தோமோ
அங்கு கொண்டு சேர்த்து விடுங்கள்
எம் எல்லோரையும்.”

மேற்கூறிய கவிதையோடு சற்று இணைந்து வரக்கூடிய மற்றுமொரு கவிதை நிறவாதம் பற்றிப் பேசுகிறது. “கொடுத்து வைத்த குட்டிப்பெண்” என்ற இக்கவிதையில் ஒரு சிறுமி வெள்ளையாகப் பிறந்த காரணத்தால் மிக அதிக வசதிவாய்ப்புகள் கொடுக்கப்பட்டு கவனிக்கப்படவும் மற்றையோர் கறுப்பாய் பிறந்த காரணத்தால் ‘கறுப்பர்கள்’, ‘காட்டுமிராண்டிகள்’ என்று வசைபாடப்பட்டு எல்லாவகையிலும் ஒதுக்கப்படும் நிலையை எடுத்துக் காட்டுகிறது.

“ வெள்ளைத் தலைமயிர், வெள்ளைத் தோல் கொண்ட
கொடுத்துவைத்த குட்டிப்பெண்ணே
…………………
நீ எழுதப்படிக்கவும்
கொடிக்கு மரியாதை செலுத்தவும்
மேன்மை தங்கிய மகாராணியாரைக் கனம்பண்ணவும்
நாங்கள் உனக்குக் கற்றுத் தருவோம்.
……………….
விரைவில் உன் குடும்பத்தை
கம்பி வேலிகளுக்கு அப்பாற் தெரியும்
அக்கறுத்த மூஞ்சிகளை
நீ மறந்து விடுவாய்
கறுப்பு காட்டுமிராண்டி இனத்தை
வென்று வாகைசூடிய சமாதானம் பற்றி
நீ பள்ளிக்கூடத்தில் புதியதோர் வரலாறு படிப்பாய்.”

இறுதியாக எதிர்காலம் மற்றும் மனித சுதந்திரம் பற்றிய கனவை எடுத்துக்காட்டும் வகையில் இரண்டு கவிதைகள் அமைந்திருக்கின்றன.

காலமும் மனிதனும் ஒன்றுடன் ஒன்றாய் பிணைந்து வாழும்போது வாழ்வு வசப்படும் என்பதை ஜாக் டேவிஸ் இன் “வெளி பற்றிய கனவில்” என்ற கவிதை காட்டுகிறது. மற்றையது ‘கங்காரு’ என்ற கவிதை. அது பான்சி ரோஸ் நபல்ஜாரி என்ற கவிஞருடையது. அதில் கங்காருவின் பயமற்ற சந்தோசமான வாழ்வு சொல்லப்படுகிறது.

“துள்ளித் திரிந்ததில் களைப்புற்ற கங்காரு
ஓர் நிழலில் கால் நீட்டிக் சாய்ந்து கிடக்கிறது
நீரின் சலசலப்பைக் கவனித்தபடி
தண்ணீர் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகச் சந்தோசமாயிருக்கிறது அது
குறிவைத்து ஈட்டி எறிய மனிதர் எவரும்
அங்கில்லை.
ஏகாந்தத்தில்,
சிவந்த மலர்களின் மணத்தை மோந்து
அனுபவித்து மிதந்து
களைப்பு மிக மேவ
அது நித்திரைக்குப் போகிறது மெல்ல.”

கங்காரு சுதந்திரமாக வாழ்கிறது. ஆனால் மனிதர்களின் அழகான வாழ்வு தொலைந்து வெகுகாலமாயிற்று என்பதனை இக்கவிதையின் ஊடாக உணரமுடிகிறது. யுத்தமும், அதிகாரமும், பணமும், இயற்கையும்கூட மனிதர்களை இருண்ட உலகத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில் மேற்கூறிய இரண்டு கவிதைகளும் மனிதகுலத்தின் அமைதியான வாழ்வைத் தேடும் ஏக்கமாக அமைந்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக நோக்கினால் ஆழியாளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அவரது தனிப்பட்ட ரசனை வேறுபாட்டையும் ஆளுமை முதிர்ச்சியையும் காட்டுகின்றதாயினும் அதற்கும் அப்பால் இக்கவிதைகளுக்கு இருக்கக்கூடிய அரசியற்பார்வை என்பது மேலானது.

ஏற்கெனவே ஈழத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம். ஏ நுஃமான், சோ.பத்மநாதன் ஆகியோரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முக்கியமானவை. இவை தவிர தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவை.

இந்த வகையில் ஆழியாளின் கருநாவு தொகுதிக்கு வலுச்சேர்ப்பதாகவே அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் அமைந்துள்ளன. அவை ஆழியாளுக்கு கவிதைகள் மீதுள்ள ஈடுபாட்டையும் அவரது மொழிபெயர்ப்பின் எளிமையையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றின் அரசியலையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வைப் பதிவுசெய்வதே மூலக்கவிஞர்கள் நோக்கமாக இருந்திருந்தாலும் அவை இன்றும்கூட தம் நிலத்தையும் உரிமையையும் வாழ்வையும் இழந்து உலகமெல்லாம் அலைந்துதிரியும் பூர்வீகமக்களுக்கும் அதிகாரத்தின் கைகளுக்குள் அகப்பட்டு நசிபடும் மானுட இனத்துக்கும் பொருந்துவனவாக அமைந்திருக்கின்றன. இந்த வகையில் ஆழியாளின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி அவரின் கவிதைப் பயணத்தில் ஒரு அங்கமாக கவனத்திற்குரியதாக அமைந்திருக்கின்றது.

---
மேற்படி 7 கவிதைகளிலிருந்து கெவின் கில்பேர்ட், ஜாக் டேவிஸ் ஆகியோரின் மூலக்கவிதைகளும் அவற்றுக்கு ஆழியாளின் மொழிபெயர்ப்பும் முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

BAAL BELBORA - THE DANCING HAS ENDED

Baal Belbora
Baal Belbora
the end the dancing has stopped
The warrior lies dead where his broken spear fell
beside the highway pinnacle rock


Baal Belbora
Baal Belbora
his lubra lies dead on the slope
the mounted trooper who mounted and raped her
has slashed her black throat when she pleaded with hope
the child that she suckled
lies dead on the grass
The grey quivering brains smashed out with cold steel

Baal Belbora
Baal Belbora
the dancing has ended
Now ask me white man
How do I feel

- Kevin Gilbert

பால் பெல்போரா – நடனம் முடிந்துவிட்டது

“பால் பெல்போரா
பால் பெல்போரா
முடிந்துவிட்டது நடனம்
நடனம் முடிந்துவிட்டது
இறுதியில் நடனம் நின்று போய்விட்டது.

நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்
தன் முறிந்த ஈட்டி வீழ்ந்த அதே இடத்தில்
நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே
போராளி அவன் மடிந்து கிடக்கிறான்.

“பால் பெல்போரா
பால் பெல்போரா
முடிந்துவிட்டது நடனம்
நடனம் முடிந்துவிட்டது.

குன்றுச் சரிவிலே
அவனின் பெட்டைத்துணை
ஊயிரற்றுக் கிடக்கிறாள்
ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய
இராணுவச் சிப்பாயிடம்
உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை
அவளின்
கறுத்த குரல்வளையைச் சீவித்
தறித்தெறிந்தான் இராணுவச் சிப்பாய்.

அவள் பாலூட்டிய பிஞ்சு மகவோ
புற்களிடையே கிடக்கிறது
விறைத்த உருக்கு இரும்பால்
தலை பிளக்கப்பட்டு
சிதறிய மூளை மெல்லத் துடித்தபடி

“பால் பெல்போரா
பால் பெல்போரா
நடனம் முடிந்துவிட்டது
அட வெள்ளைக்காரா!
இப்போது என்னை வினவிக் கேள்
என் மனநிலை எப்படி இருக்கிறதென்று
என்னைக் கேள்.

தமிழில் – ஆழியாள்


Day Flight

I closed my eyes as I sat in the jet
And asked the hostess if she would let
Me take on board a patch of sky
And a dash of the blue-green sea.

Far down below my country gleamed
In thin dry rivers and blue-white lakes
And most I longed for, there as I dreamed,
A square of the desert, stark and red,
To mould a pillow for a sleepy head
And a cloak to cover me.
-- Jack Davis


பகல் விமானம்

“கண்களை மூடினேன்.
விமானத்தில் அமர்ந்து.

ஒரு துண்டு வானத்தையும்
நீலப்பச்சைக் கடலின் பகுதியொன்றையும்
கையோடு கூட்டிச் செல்ல
அனுமதிப்பார்களா என்று
அருகில் வந்த பணிப்பெண்ணைக் கேட்டேன்?

கீழே
மிக ஆழத்தில்
காய்ந்து நெடிந்த ஆறுகளுடன்
வெண் நீல ஓடைகளுடனும்
எனது நாடு ஜொலித்துக் கொண்டிருக்க
செக்கச் சிவந்த பாலைவனச் சதுரமொன்று
துவளும் என் தலைக்கு அணையாகி
போர்வையாய் எனை மூடுவதாய்

ஏக்கக் கனவொன்றில் ஆழ்ந்து போனேன்”

தமிழில் - ஆழியாள்

---
(நன்றி : ஊடறு, மார்ச் 2014)

Thursday, January 2, 2014

க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை





- சு. குணேஸ்வரன்

அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார். மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர். ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.

ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில் ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

ஆரம்பகால நாவல்கள்

90கள் வரை வெளிவந்த புலம்பெயர்ந்தோரின் நாவல்களை முதற்காலகட்ட நாவல்களாகக் கருதலாம். இவ்வகையில் எமது கவனத்திற்கு உட்படுபவர்களில் ஆதவனும் பார்த்திபனும் முக்கியமானவர்கள்.

1983 இல் இருந்தே ஈழத்தமிழர்கள் அதிகளவில் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். எனினும் அங்கிருந்து 80 களின் நடுப்பகுதியின் பின்னரே சஞ்சிகைகளும் நூல்களும் வெளிவரத் தொடங்குகின்றன. அவ்வாறு வெளிவந்த சஞ்சிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரைகளோடு தொடர்கதைகளும் வெளிவந்தன. அதிகமான இதழ்களில் இவற்றை அவதானிக்க முடிகிறது.

தொடர்கதையாக வெளிவந்த ‘மண்மனம்’ இதுவரை நூலுருப் பெறவில்லை. நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகள்1 சஞ்சிகையில் 32 அத்தியாயங்களாக 1989 இல் இருந்து 1995 வரை வெளிவந்து முற்றுப்பெற்றது.

பார்த்திபனின்2 முதல் நாவல் “வித்தியாசப்படும் வித்தியாசங்கள்” 1986 இல் வருகிறது. இதுதான் 80 களில் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து வெளிவந்த முதல் நாவலாக உள்ளது. பார்த்திபனின் ஏனைய மூன்று நாவல்களும் 1990 ற்குள் வந்துவிடுகின்றன. மேலும் ‘தூண்டில்’ சஞ்சிகையில் வெளிவந்து முற்றுப்பெறாத ‘கனவை மிதித்தவன்’ தொடர்கதையும் இக்காலப்பகுதியிலேயே வருகிறது. அதேபோல் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் “தில்லையாற்றங்கரை” 1987 இல் வருகிறது.

மேற்குறிப்பிட்ட படைப்புக்கள் அதிகமும் தாயகநினைவு சார்ந்தனவாகவே அமைந்துள்ளன என்பது கவனத்திற் கொள்ளவேண்டியதாகும். இந்த அடிப்படையில் க. ஆதவனின் ‘மண்மனம்’ என்ற நாவலை நோக்கலாம்.

மண்மனம் - கதையும் கதைப்பண்பும்
‘மண்மனம்’ அடிப்படையில் தாயக நினைவு தொடர்பான ஒரு நாவலாகும். இந்நாவலின் கதையோட்டத்துக்கு ஆதாரசுருதியாக இருப்பது ஒரு காதற்கதை. ஆனால் அதற்கு ஊடாகச் சொல்லப்படும் விடயங்கள் மிக முக்கியமானவை. 80களின் இறுதிப்பகுதியில் போராளிக் குழுக்களின் உருவாக்கமும் செயற்பாடுகளும், அரச படைகளின் அச்சுறுத்தல்கள், கைது, சித்திரவதை, கொல்லப்படுதல் ஆகியன மிக எளிமையாகச் சம்பவங்களின் ஊடாக இந்நாவலில் சொல்லப்படுகின்றன.

மண்மனம் நாவலில் பிரதான பாத்திரம் ரகுநாதன். ரகுநாதனின் கதையோடுதான் நாவல் விரிகிறது. ரகுநாதனின் நண்பனாக வரும் ‘சுரேஷ்’ மற்றும் ரகுநாதனின் காதலி சுசீலா ஆகியோர் நாவலின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் பாத்திரங்கள்.

கொழும்பில் ஒரு தேநீர்க்கடையில் இருந்து “ நீ இந்த உலகத்தில் எதை நம்புகிறாய்” என்ற கேள்வியுடன் நாவல் தொடங்குகிறது. அக்காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காகப் புறப்பட்ட இயக்கங்களில் நீ எந்த இயக்கத்தை நம்புகிறாய் என்பதே சுரேஷை நோக்கிய ரகுநாதனுடைய கேள்வியாகும். இவ்வாறான உரையாடல்களின் ஒரு கட்டத்தில் சுரேஷ் ரகுநாதனை விட்டுப் பிரிந்து விடுகிறான்.

“என்னடா சுரேஷ் என்னதான் நடந்தது I Don’t understand this, what happened to you? படபடப்புடன் கேட்டான் ரகு. சுரேஷ் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் ரகு கையை எடு நான் ஒரு இயக்கத்தில இருக்கிறன். அதுக்கு உன்னால உதவமுடியாது. நீ துரோகியாக மாறாதவரைக்கும் உன்னைக் காப்பாற்றிக் கொள்ளு”3

என்று சுரேஷ், தான் இலட்சியத்தோடு வாழ்வதால் நமது நட்பு அதற்கு இடையூறாக இருந்துவிடும் என்பதால் பிரிந்து விடுகிறான்.

இந்தப் பிரிவுடன் யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றலாகிச் செல்லும் ரகுநாதன் ஒருபுறமும், இயக்கச் செயற்பாடுகளுடன் சுரேசும் நாவலின் கதையோட்டத்தில் நகர்கின்றனர். ஒரு கட்டத்தில் இயக்கச் செயற்பாடுகளுக்கு ஊடாக அறியப்பட்ட சுரேஷைத் தேடிவரும் இராணுவம் அவனின் தம்பி கணேசானந்தனை லைற்போஸ்ரில் அடித்துக் கோரமாகக் கொன்று போட்டுவிட்டுப் போகிறது.

தொடரும் கதையோட்டத்தில் ரகுநாதனின் தங்கையை சுரேஷ் காதலிக்கிறான். ஒரு நாள் அவளும் சுரேஷ் இருக்கும் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறாள். பின்னர் ஒரு சம்பவத்தில் சயனைற் கடித்து செத்துவிடுகிறாள். அவளது சாவை இயக்கமும் ஊரும் இலட்சியத்துக்காகச் செத்துப்போனாள் எனக் கொண்டாடுகிறது. இச்சம்பவத்தால் மனமும் உடலும் சோர்ந்துபோகிறான் ரகுநாதன். பின்னர் ஊரில் நடக்கும் சூட்டுச் சம்பவமும் குண்டுவெடிப்பும் கதையில் கூறப்படுகிறது. இதில் ரகுநாதனின் தந்தையும் குண்டுபட்டு இறந்துவிடுகிறார்.

இவ்வாறான இழப்புக்களுக்கு மத்தியில் மௌனசாமியாகத்திரியும் ரகுநாதன், ஒருமுறை சலூனுக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவனுக்குக் கற்பித்த ஆசிரியரின் உரையாடலுக்கு ஊடாக திருமணம் செய்யும் விருப்பத்துக்குத் தூண்டப்படுகிறான். அதற்கு ஆதாரமாக அவனது பாடசாலைக் காதல் உயிர்பெறுகிறது. ஆனால் அதற்குள்தான் குழப்பம் ஏற்படுகிறது.

ரகுநாதன் தனது காதலி சுசீலாவைக் கண்டது, பேசியது, கோயில்திருவிழாச் சந்தர்ப்பத்தில் அவளைத் தனியாகச் சந்தித்தது, அவள் திருமணத்தை மறுத்தது, பின்னர் ரகுநாதன் குடித்துவிட்டு ஊரறிய அவளைக் கேவலமாகப் பேசியது. சுசீலா அவனை வெறுத்து ஒதுக்கி “கையை விடுடா நாயே!” என்று அவனை வெறுத்தொதுக்கியது எல்லாம் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றன.

இறுதியில் தனது காதல் தோற்றுப்போனதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்று சேரும் நேரத்தில் இராணுவம் ரகுநாதனைப் பிடித்துச் சென்று விடுகிறது. ரகுநாதனின் தங்கை இயக்கத்தில் இருந்ததற்காகவும், சுரேசின் நண்பன் என்ற காரணத்திற்காகவும் கொரூரமாகச் சித்திரவதை செய்து செத்துப்போகும் நிலையில் ரகுநாதனை பற்றைக்குள் எறிந்துவிட்டுப் போகிறது. இறுதியில் வைத்தியசாலையில் சுயநினைவில்லாமல் கட்டிலில் கிடக்கும் ரகுநாதனின் உடலைத் தழுவி சுசீலா அழுகின்ற சம்பவத்துடன் நாவல் முற்றுப்பெறுகிறது.

பாத்திரங்களின் இயல்புநிலை
நாவலின் பிரதான பாத்திரம் ரகுநாதன். கதை நகர்வுக்கு ஏற்ப சுரேஷ் மற்றும் ரகுநாதனின் காதலி சுசீலா ஆகியோர் அடுத்து முக்கியம் பெறும் பாத்திரங்களாக அமைகின்றன. இம்மூன்று பாத்திரங்களையும் சுற்றியே நாவல் விரிகிறது.

இந்நாவலில் ரகுநாதன் ஒரு யதார்த்தவாதியாக சித்திரிக்கப்படுகிறான். அதிகம் எந்த விடயத்தையும் துருவி ஆராய்ந்து முடிவெடுப்பவனாகவும் அதிகாரமும் பகட்டும் போலியும் இல்லாத நேர்மையான பாத்திரமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

சுரேஷ் என்ற பாத்திர வார்ப்பு ஆரம்பம் போலவே இறுதிவரையும் மிக அமைதியான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிகம் உரையாடலில் பங்கெடுக்காத பாத்திரம். பொறுமையும் கொள்கைப் பிடிப்பும் முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது.

சுசீலா ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்கக்கூடிய இயல்புகளுடன் படைக்கப்பட்டுள்ள பாத்திரம். ரகுநாதன் குடித்துவிட்டு வந்து அவளை ஊரறிய கேவலமாகப் பேசியபோது ஆற்றாமையில் எல்லையில் இருந்து அவனுக்காக நீலாம்பரியில் உருகிப் பாடும் சம்பவம் முக்கியமானது.

நாவலில் கவனிக்கத்தக்க அம்சங்கள் சில
அரச படைகளுக்கும் போராளிகளுக்குமான முரண்பாடுகள் உக்கிரம் அடைகின்ற போதில் மக்கள் மீதான கண்காணிப்பும் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இங்கு இரண்டு சம்பவங்கள் அக்காலச்சூழலைப் புரிந்துகொள்ளச் சான்றாக இருக்கின்றன.

குடித்துவிட்டுப் பாட்டுப் பாடிக்கொண்டு இரவெல்லாம் ஊரைச் சுற்றித்திரிவதை வழக்கமாகக் கொண்ட சோமன் ஒரு நாள் செத்துப்போய்க் கிடக்கிறான்.

“சுடலை மடத்துக்கை ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி கிட்டப்போய்ப் பாத்தா சோமனாம். வெறியில கிடக்கிறான் எண்டுதான் முதல் நினைச்சவனாம். பிறகு ஏதோ ஐமிச்சத்தில கூப்பிட்டுப் பாக்கத்தான் பிரேதம் எண்டு தெரிஞ்சுதாம். ஊரெல்லாம் கூடி கடைசியில தற்கொலை எண்டு முடிவெடுத்தது. அதற்கான Postmortom எல்லாம் சான்றாக அமைஞ்சுது. கொலைகள் கூடிவிட்ட இந்தக் காலத்தில தற்கொலையைப் பற்றி ஆர் நினைக்கப் போகினம். அதிலும் குடிகாரச் சோமன் இருந்தென்ன இல்லாட்டி என்ன? எண்டுறதுதான் பலபேற்றை அபிப்பிராயமும். என்னாலை தாங்க முடியேலாமக் கிடக்கு இவன் ஏன் தற்கொலை செய்தான். எந்த இரகசியத்தைக் காப்பாற்ற - எந்த சயனைட்டைக் கடித்தான்?” 4

மற்றைய சம்பவம்; சுசீலாவுக்கும் ரகுநாதனுக்குமான காதல் முறிவின் பின்னர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரகுநாதனை எச்சரித்துவிட்டுச் செல்வது.

“எங்கட சுசீலா அக்காவின்ரை பிரச்சினையில தலையிட்டா வெடிதான் வைப்பம் AK47 ஐ ஒருமுறை தட்டிக் காட்டியதாக ரகுநாதன் நினைத்துக் கொண்டான்” 5

இந்த இரண்டு சம்பவங்களும் ஆழமாக வாசகர் மனதைத் தைத்து விடுகின்றன. குடிகாரச் சோமனின் சாவுக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அது அக்காலகட்ட அரசியல் நிலையை குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது. அதேபோல் போராளிகள் மக்களின் சாதாரண பிரச்சினைகளிலும் தலையிடுதல் அச்சுறுத்துதல் என்பவற்றுக்கு உதாரணமாக மற்றைய சம்பவம் விளங்குகின்றது.

மேலும் தங்கை சந்திரா இயக்கத்துக்குப் போனபின்னர் கதையில் வரும் காட்சிகள் ரகுநாதனைப் பயமுறுத்துவனபோல் அமைந்திருத்தல் - குறிப்பாக பலர் துப்பாக்கி முனையில் அவனைப் பிடித்துப்போய் பாறையில் வைத்து சுடுவதற்கு துப்பாக்கியை நீட்டுதல் ‘கனவு’ எனக் கூறப்படுகிறது. இதனை ஒரு உத்தியாகப் பார்க்கலாம்.

இவை கதையோட்டத்துடன் இணைந்து வருவதால் அக்காலகட்ட அதிகாரத்தரப்பினர் மீது ஆசிரியர் வைக்கும் விமர்சனமாகக் கருதமுடிகிறது. குறிப்பாக 90களின் முன்பின்னாக இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைச் சுட்டுவதற்கும் இறுதிச் சம்பவத்தை ஆதவன் பயன்படுத்தியிருக்கலாம்.

நாவலில் இருக்கக்கூடிய மற்றுமொரு அம்சம் கதையோட்டத்தின் வேகம். இது நாவலை அழகியலுடன் வளர்த்துச் செல்வதற்கு தடையாக இருந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது. ஆதவனே இந்தக் குறைபாட்டை உணர்ந்துதான் இருக்கிறார்.

“என் மனம் உணர்ந்ததை அப்படியே எழுதியிருக்கிறேன். நாவலுக்குரிய இலக்கணங்களையோ கட்டுக்கோப்புகளையோ எதையும் நான் பொருட்படுத்தவில்லை. உணர்வுக்கும் உண்மைக்கும் முதலிடம் கொடுத்து அவையே என் பேனாவை இழுத்துச் சென்றிருக்கின்றன.” 6

குடும்பங்களில் ஏற்படும் இழப்பை மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறார். சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக திடீர் திடீர் என மாற்றமுறுகின்றன. இருந்தாலும் நாவலின் வாசிப்பில் சலிப்பை இவை ஏற்படுத்தவில்லை என்பது முக்கியமான குறிப்பாகும்.

ரகுநாதன் குடித்துவிட்டு வந்து அந்த ஊர் அறிய ஏசும் சம்பவ விபரிப்பும், இளமைக்காலக் காதற்கதைகளை கூறும் இடங்களும் மனத்தில் அழுத்தமாகப் பதிந்து விடுகின்றன.

இந்நாவலில் இருக்கக்கூடிய மிகப் பலமான அம்சமாக இதன் மொழிநடையைக் கூறலாம். புகலிடத்தில் இருந்து வெளிவந்த ஆரம்பகால நாவல்களில் ஒன்றாக இருந்தாலும் ஈழத்து மொழிநடையை பொருத்தமாகப் பயன்படுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்துள்ளார் என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நாவலின் பாத்திர உரையாடல்கள் அழகாக வந்திருக்கின்றன.

“டே விசரா இதுக்கெல்லாம் இப்பிடி அழுறதே? எழும்படா எழும்பி ஆகவேண்டிய வேலையைப் பார். ஆம்பிளை மாதிரி இரு. அவளைப் பாத்தியே எவளவு மரியாதையோடு செத்தாள் எண்டு. அவள் வீரி. நீ என்ன பேத்தைமாதிரி நிண்டு அழுறாய். எழும்படா எழும்பு முதல், எழும்பி ஏதன் தின். பரிசுகெடப்போகுது. எவளவு இளசுகள் எல்லாம் உன்னையே பாக்குது தெரியுமே…” 7

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பிரதேசத்துக்கு உரிய வட்டார மொழிவழக்குச் சொற்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருத்தலும் சிறப்பாக உள்ளது.

“உச்சிக்கொப்பை குறிபார்த்து எறியவேணும் அப்பதான் பொல பொலவெண்டு கொட்டுண்ணும்” (அத்.3)
“எழும்படா! இனிக்காணும். அப்படி என்ன நித்திரை. ஓடிப்போய் கோயிலடியில அரசம் பழுத்தல்கள் ஏராளங் கொட்டுண்டு கிடக்கு பொறுக்கியந்து அந்த ஆடுகளுக்குப் போடன்.” (அத்.2)
“எவ்வளவுதான் பிடிச்சு அழுத்தினாலும் பிடரியில ரெண்டு மயிர் கெம்பிக்கொண்டு நிக்கத்தான் செய்யுது” (அத்.9)

சில சம்பவங்கள் இந்நாவலின் கதைப்போக்குக்கு அவசியமில்லாத ஆசிரியரின் விபரிப்புக்கள் கதைப்போக்கில் குறைபாட்டை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும். நாவலில் பல இடங்களில் அதிக பிரசங்கித்தனமாக சிலவிடயங்களைச் சுயவிசாரணை செய்தல், எல்லாவற்றுக்கும் ‘காலம்’தான் காரணம் என்ற பகுதியில் அதுபற்றி நீண்ட விசாரணை நடாத்துதல்; இதுபோல பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். மேலும் நாவலை வளர்த்துச் செல்லுவதற்கு பல இடங்கள் இருந்தும் ஆசிரியர் அதனைத் தவறவிட்டுவிடுவதாகவே தோன்றுகிறது.

சுசீலாவை கோயில் திருவிழாநேரம் பீநாறிப் பற்றைக்குள் அழைத்துச் சென்று கட்டியணைக்கும் சம்பவத்துக்குப் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் ரகுநாதன் குடித்துவிட்டுப் போய் அவளை வாய்க்கு வந்தபடி வெறியில் திட்டும் சம்பவம் முரண்நிலையாகத் தோற்றந்தருகிறது.

மேலும் இது தொடர்கதையாக வந்த காரணத்தால் பல சம்பவங்கள் தொடர்பில்லாமல் அல்லது அவை நாவலின் கதைப்போக்குக்கு ஏற்ப வளர்த்துச் செல்லப்படாமல் அங்கங்கேயே தங்கிவிடுகின்றன.

பாடசாலையில் நீங்கள் என்ன சாதி என்று கேட்கும் வாத்தியாருக்கு “நாங்கள் மரமேறுகிற ஆக்கள்” என்று மாணிக்கத்தின் மகன் தயங்கித்தயங்கி பதில் கூறும் சம்பவம், ரகுநாதன் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது செக்குச்சுத்துகிற இடத்தில் தோட்டத்தில் வேலை செய்யும் கந்தியின் மகள் பற்றி விபரிக்கும் இடம், கிளிநொச்சியில் சாராயம் குடிக்கப்போன இடத்தில் ரன்மொனிக்கா என்ற சிங்களப்பெண் பற்றிய பதிவு, மற்றும் இந்தியாவில் இருந்து வந்து தங்கிய தவிலுக்கு தாளம்போடுபவர் பற்றிய பதிவு, ஆகிய சம்பவங்கள் பல்வேறுபட்ட மனநிலை உடையவர்களை நாவலில் காட்டவந்ததின் விளைவாக இருந்தாலும், குறித்த சம்பவங்கள் நாவலின் கதையோட்டத்தில் மேம்போக்காகவே சொல்லப்படுகின்றன.

இவற்றுக்கு செலவளித்த பக்கங்களை ரகுநாதன், சுரேஷ், சந்திரா, சுசீலா பாத்திரங்களுடன் தொடர்புடைய களங்களை விபரிப்பதற்கு செலவளித்திருக்கலாம். சுரேஷ் என்ற பாத்திரத்தைச் சித்திரிப்பதிலும் அப்பாத்திரம் தொடர்பான உரையாடல்களிலும் போதாமை உள்ளதும் அவதானிக்கத்தக்கது.

மேலே குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு, இந்நாவல் தொடர்கதையாக வந்தமையும் ஐந்து வருடங்கள் என்ற நீண்ட கால இடைவெளியை நாவல் முற்றுப்பெறுவதற்கு எடுத்துக்கொண்டமையும் கூட காரணமாக இருந்திருக்கலாம். (புலம்பெயர்ந்தவர்களின் அசாதாரண சூழ்நிலை, மனநிலை மற்றும் பிரசுரவெளிகளும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கக்கூடும்) பொதுவாக தொடர்கதைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளில் ஒன்றாக ‘சுவாரஷ்யம்’ காரணமாக சில சம்பவங்கள் இங்கு சேர்க்கப்பட்டு பின்னர் கதைத்தொடர்ச்சிக்கு அவசியமில்லாத காரணத்தால் அவை விடப்பட்டிருக்கலாம்.

எனினும் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகால நாவல் என்ற வகையிலும் 80 களின் பின்னரான காலத்தைப் பதிவுசெய்கிறது என்ற வகையிலும் ஈழத்துக்கேயுரிய மொழிநடையைப் பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கின்ற வகையிலும் ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

தொகுப்பு
புலம்பெயர் படைப்புக்களின் பேசுபொருள்களில் தாயக நினைவு முதன்மையானது. தாய்த்தேசத்தைப் பிரிந்தவர்களுக்கு தாயக நினைவு என்பது பிரிக்கமுடியாத உணர்வுநிலையாகப் பேசப்படுகிறது. நாடிழந்து உலகில் அகதிகளாக அலைந்துதிரிந்த பாலஸ்தீனர்களின் படைப்புக்களில் இதற்கு நல்ல உதாரணங்களைக் கண்டுகொள்ள முடியும். இன்று உலகமெங்கும் மில்லியன்கணக்கான மக்கள் நாடிழந்து நாடோடியாகவும் அகதியாகவும் புகலிட தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தம் தாய்த்தேசத்தை இழப்பதென்பது சொல்லமுடியாத உணர்வுநிலையை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறுதான் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் தம் தாய்த்தேசத்தைப் பற்றி தமது படைப்புக்களில் எழுதும்போது தவிர்க்கமுடியாமல் அவர்கள் நினைவில் வாழும் தேசத்தை எழுத்துக்களில் பதிவு செய்கின்றனர். அது தனிமனித வாழ்வில் இருந்து தேசத்துக்கான விடுதலை வரை விரிகின்றது. இதற்கு இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கின்றன புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் சான்றாக அமைகின்றன. அவ்வகையில் நாவல் இலக்கியத்தில் ஆரம்பகாலப் படைப்பாளிகளில் ஒருவர் என்ற வகையில் இங்கு ஆதவனின் நாவல் நோக்கப்பட்டுள்ளது. இது 80 களின் இறுதிக்காலகட்ட விடுதலைப் போராளிகளின் செயற்பாடுகளை மக்களின் வாழ்வுநிலையின் ஒரு பகுதியை குறுக்குவெட்டுமுகமாகப் பேசுகின்றது. இந்நாவல் குறிப்பிடும் காலத்துடன் ஒப்பிடுவதற்கு வேறு பல படைப்புக்கள் தமிழ் நாட்டிலிருந்தும் ஈழத்தில் இருந்தும் புகலிடத்தில் இருந்தும் வந்திருக்கின்றன. எனினும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த ஆரம்பகால நாவல்களில் ஒன்று என்ற வகையில் ‘மண்மனம்’ கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.

இதற்கூடாக 80 களின் பின்னரான ஒரு காலகட்டம் பதிவுசெய்யப்படுவதோடு புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகாலப் படைப்புக்களின் போக்கினையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

அடிக்குறிப்புகள்
1. சுவடுகள் நோர்வேயில் இருந்து வெளிவந்து நின்றுபோன சஞ்சிகையாகும்.       1988 இல் இருந்து 1997 வரை 78 இதழ்கள் வரை வெளிவந்தமை
     கட்டுரையாளரால் இனங்காணப்பட்டுள்ளது.
2. பார்த்திபனின் வெளிவந்த படைப்புக்கள் பற்றி ஏலவே எழுதிய
    அறிமுகக்கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கலைமுகம்
    இதழில் வந்துள்ளது. பதிவுகள் இணையத்தளத்திலும் வாசிக்கமுடியும்.
3. க. ஆதவன், மண்மனம், அத்தியாயம் 1, சுவடுகள், நோர்வே,1989.
4. மேலது, அத்தியாயம் 12.
5. மேலது, பாகம் 2, அத்தியாயம் 11.
6. மண்மனம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. முதற்பாகம் 16
    அத்தியாயங்களில் முற்றுப்பெற்றபோது ‘முதலாம் பாகத்துக்குப்
     பின்னர்  ஒரு முன்னுரை’ என்ற பக்கத்தில் ஆதவன் மேற்குறித்தவாறு
    எழுதியுள்ளார்.
7. க. ஆதவன், மண்மனம், பாகம் 2 – அத்தியாயம் 2, சுவடுகள், நோர்வே.

(நன்றி - மண்மனம் நாவலின் அத்தியாயங்களைப் பெறுவதற்கு உதவிய நூலகம், படிப்பகம் இணையத்தளத்தினருக்கும்; விடுபட்டவற்றைப் பெறுவதற்கு உதவிய க.ஆதவன், பதிவுகள் வ.ந. கிரிதரன், இளவாலை விஜயேந்திரன் ஆகியோருக்கும் மிக்க நன்றி)

2013 டிசம்பர், ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும், மணவை செந்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடாத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் பின்னர் வெளியிட்ட ‘தற்கால படைப்புகளில் தமிழில் பன்முக ஆளுமை’ என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை.

நன்றி - பதிவுகள், ஜனவரி 2014

---